ஆத்மாவின் இராகங்கள்
அன்னையின் காதல்
செல்வியது அப்பாவும் என்ன வேலை
செய்கின்றார் எங்கிப்போ என்றே கேட்டான்
எல்லையிலா மகிழ்ச்சியிலே இருந்த அன்னார்
எதிர்பாராக் கேள்வியினால் திகைத்தே போனார்
கல்லைவிட இடிதாங்கும் மனத்தைக் காட்டக்
கனக்கின்ற பெருமூச்சைத் தாயும் காட்டிச்
சொல்லவொரு வழியறியாச் சோகத் தோடு
சுதந்திரமாயப் போய்விட்டார் என்றே சொன்னாள்.
தெரியாமல் நான்கேட்டு உங்கள் நெஞ்சைத்
தீயாகிச் சுட்டிட்டேன் ஐயோ என்று
சிரியாமல் ஜெயதேவன் கவலை பொங்கச்
செல்வியிடம் உரைத்துப்பின் கவலை யோடு
புரியாமல் தான் செய்த தவறால் நொந்து
பகைகின்ற மனத்தோடு இருக்கச் செல்வி
சரியாகக் கவலைப்பட வேண்டாம் நீங்கள்
சரித்திரமே அப்பாவின் வாழ்கை என்றாள்.
அப்பாவைப் பற்றிமக்கள் கதைக்கும் போது
அதைக்கேட்டு மகிழ்வதுவோர் அன்னைககு இன்பம்
எப்போதும் வீடுகளில் இதனைக் காண்போம்
என்றாலும் செல்வியது தாயும் மெல்ல
அப்பாலே தேனீரை ஊற்றும் சாட்டில்
அங்கிருக்க மனதின்றி அகன்றே போகக்
கப்போடு சாய்தங்கே நின்ற செல்வி
கண்கலங்கத் தேவனுக்குக் கூற லானாள்.
தம்பிகளும் தங்கைகளும் எனக்கும் உண்டு
தப்பியவர் வேறுதாய் வயிற்றில் வந்து
எம்முறவை அறியாமல் வாழ்கின் றார்கள்
எனதப்பா எங்களையே மறந்தும் போனார்
அம்மாவும் அப்பாவும் தங்கள் பாட்டில்
அவர்பெற்றார் முடிவின்றி மணமும் செய்து
செம்மண்ணும் மழைநீரும் கலத்தல் என்று
செப்புகின்ற குறுந்தொகையின் வாழ்வும் கண்டார்
வாழ்க்கையிலே வறுமையினால் தையல் வேலை
வழியின்றி எனதம்மா புரிந்த காலம்
ஊழ்வினையோ உறுபழியோ அறியோம் நாங்கள்
உத்தமராம் அப்பாமேற் பார்வை யாளர்
பாழ்பட்ட காதலது அங்கும் தோன்றப்
பகிர்ந்ததனை இருவருமே எடுத்துக் கொண்டார்.
சீழ்பட்ட புண்கொடுக்கும் வலியைக் போலச்
சீரழியப் போவதனை உணராள் அன்னை
ஊரவர்கள் முன்னிலையில் கைகள் கோத்து
ஊர்வலமாய்த் திரிந்தார்கள் ஏதோ தாங்கள்
பேரரவம் பூண்டசிவத் தோற்றம் போலப்
பின்னிந்த ஊருலகம் பொறுத்தா கொள்ளும்
காரரவம் கேட்டவுடன் எட்டிப் பார்க்கும்
கமலந்தான் போகின்றாள் காரில் என்னும்
பாரதிர ஊரெல்லாம் தூற்ற அம்மா
பயத்துடனே அப்பாவை நம்பி வாழந்தாள்
அடைக்கின்ற குரலினிலே செல்வி சொல்லி
அழும்போது தாய்தேனீர் கொண்டு வந்து
நடைபாதை வாசலிலே பாயில் வைக்க
நன்றியென ஜெயதேவன் எடுத்துக் கொண்டான்
உடைதோய்கக் கிணற்றடிக்குப் போறேன் நானும்
உரையாடிக் கொண்டிருங்கள் என்றே தாயும்
விடைகேட்டுப் போய்விடவே செல்வி மீண்டும்
விட்டதிலே இருந்துகதை கூற லானாள்
நாலிரண்டு மாதங்கள் தானாம் காதல்
நாதற்குள் வயிற்றினிலே உதய மானேன்
கூலியிலாச் சுமையாகச் சுமந்தாள் அம்மா
கும்பிட்டாள் அப்பாவின் காலைத் தொட்டு
தாலியினைக் கட்டுங்கள் இல்லை யானால்
தலைநிமிர்ந்து நடந்திடவே முடியா தென்றாள்
வேலியினைத் தாண்டவொரு ஏணி யாகி
விழப்போன நேரத்தில் அப்பா இல்லை
காதலெனும் பயிர்வளர்க்க இதயத் தோட்டம்
கவனமுடன் பண்படுத்திக் காத்தல் வேண்டும்
பாதகங்கள் சமூகமெனும் பூச்சி யாலே
பயிர்களுக்கு வருமெனவும் உணர்தல் வேண்டும்
மாதமழை பொய்ப்பதுபோல் அன்பு பொய்த்தால்
மனத்தோட்டம் வரண்டங்கு பயிர்கள் சாகும்
ஆதலினால் காதற்பயிர் வளர்ப்போ ரெல்லாம்
அறுவடையை முழுதாகக் காணார் வாழ்வில்
அப்பாவும் பெற்றவரின் சொல்லைக் கேட்டு
அன்பறுத்து அம்மாவைத் தெருவில் விட்டார்
தப்பாக நடந்ததனால் நீதி கேட்டுத்
தைரியமாய் வாதாட வழியே இன்றி
எப்போதும் கவலையிலே வாழ்ந்தே அம்மா
ஈன்றெடுத்தாள் எனனையுந்தன்; மகளே யாக
மப்போடு வந்தமுகில் கலைதல் போல
மனக்கோட்டை கலைந்திட்ட பின்பும் வாழ்ந்தாள்.
வேறுமணம் அப்பாவும் கொழும்பில் செய்ய
வேதனையால் அம்மாவும் இங்கே செத்தாள்
ஆறுகுளம் தேடியவள் விழவும் இல்லை
அன்புடனே வளர்த்தென்னைப் படிக்கச் செய்தாள்.
கூறுகிறேன் உங்களுக்கு மட்டும் எங்கள்
குடும்பநிலை வெட்கத்தை மறந்தே நானும்
சேறுபடர் வயல்களிலே வேலை செய்து
சிறுவயிறும் படிப்புமென அலைகின்றோம் நாம்
படிப்பதற்கு விருப்பமில்லை பாவம் அம்மா
படுத்திருப்பாள் காணமனம் சாகச் சொல்லும்
குடிப்பதற்கும் கஞ்சியில்லா நாட்கள் உண்டு
குளித்துவிட்டு உடைமாற்றா நாளும் உண்டு
துடிப்பதற்கு இதயமுண்டு எனக்கு மாஸ்டர்
துணைக்குச்சென்று என்னசெய முடியும் என்னால்?
வடிப்பதற்குக் கண்ணிறையக் கண்ணீர் உண்டு
வாழவழி ஒன்றைத்தான் தெரிந்தேன் இல்லை
எங்களது வாழ்க்கைநிலை இதுவே யாகும்
இதுவெங்கள் வழியினிலே இயற்கை நியதி
உங்களுக்கு இதையெல்லாம் சொல்லி நானும்
உள்ளத்தில் கவலையினைத் தந்தே விட்டேன்
சங்குவயல் வரம்பினிலே ஊர மாடு
சறுக்காமல் அதைமிதித்து அப்பால் போகும்
தங்களது காலையங்கே பிறரும் வைத்தால்
தண்டுமுள்ளுத் தைத்துவிடும் இரத்தம் கொட்டும்
வேதனையில் பிறக்கின்ற சிரிப்பி னோடு
வேந்தமனக் கவலையெல்லாம் கூறிச் செல்வி
பாதவிரல் நுனியாலே நிலத்தில் ஏதோ
படங்கீறிக் கொண்டிருந்தாள் மௌன மாக
ஆதரவு காட்டியொரு வார்த்தை சொல்ல
ஐயொவேன் தயங்குகின்றார் என்றே நெஞ்சம்
காதலுடன் ஏங்கவவள் கண்கள் மட்டும்
கனவுகளைச் சுமந்தபடி நிலத்தை நோக்கும்
குனிந்ததலை நிமிராமல் கதைகள் கேட்டுக்
குளமான கண்களுடன இருந்த தேவன்
பனிந்தவிமை கையாலே துடைத்துக் கொண்டு
பரிதாபம் பெருக்கெடுக்கச் செல்வி தன்னை
கனிந்தவொரு பார்வையினால் அவலம் தீர்த்துக்
கைகொடுக்கும் வகையினிலே பேச லானான்
புனிதமலர் தூய்மையுடன் மாலை ஆகிப்
புழுதியிலே சிலவேளை சருகாய் வீழும்
எண்ணமும் ஏக்கமும்
நல்லவர் வாழ்வில் என்றும்
நடப்பவை துன்பம் செல்வி
சொல்லொணாக் கவலை ஏழ்மை
சுகந்தராப் பெற்றார் மற்றும்
சில்லறை நோய்கள் எல்லாம்
சேர்ந்திடும் அவர்க்கே வாழ்வில்
புல்லுகள் வளர்ந்து கூடப்
புதுமைகள் அவர்க்குக் காட்டும்
வல்லவர் வகுத்த பக்கம்
வழியெலாம் அமையும் போதில்
நல்லவர் வாழ்வில் என்றும்
நடப்பவை நன்மை தாரா
அல்லவை செய்தாக் கெல்லாம்
அறமதே கூற்றாம் என்ற
சொல்லுகள் இனிமேல் வெல்லா
சோகமே ஏழை வாழ்வில்!
வறியவர் வாழ்வில் என்றும்
வறுமையின் கொடுமை தன்னை
அறிந்தவர் இணைய வேண்டும்
அற்றவர் உதவார் செல்வி
கறியொடு சோறு என்றாலும்
காய்ந்திட்ட பாண் என்றாலும்
நெறியுணர்ந் தொன்றாய் உண்ண
நினைப்பவர் தொடர்பு வேண்டும்
தன்யொரு ஆளாய் நின்று
தன்னுடல் வருத்தி உம்மை
இனியநல் உணவு ஊட்டி
இத்தனை காலம் காத்த
புனிதநல் அம்மா தன்னைப்
புகலிடம் கொடுத்துக் காக்கும்
மனிதனே உமக்குச் செல்வி
மாலையிட் டருள வேண்டும்.
ஆதலால் செல்வி உம்மை
அன்புடன் மனைவி யாகக்
காதலால் ஏற்று உங்கள்
கவலையை மாற்றல் ஒன்றே
மீதமாய் எந்தன் நெஞ்சில்
மேலெனத் தெரியும் இதுவும்
வேதநூல் இறைவன் செய்கை
விருப்பமா உமக்கு என்றான்
பதவிக்கு வந்த மௌனம்
பலமணி நேரம் நிக்க
உதவிக்கு வந்த தேவன்
உண்மையில் பயந்து போனான்
கதவிற்குப் பின்னால் சென்ற
கன்னியை எழுந்து பார்த்தான்
புதருக்குள் வீழ்ந்த நிலவாய்
புன்னகை தவழ நின்றாள்!
கண்களோ கனிவு பொங்கக்
காதலும் ததும்ப நோக்கும்
புண்களே கண்ட உள்ளம்
பூவென மலர்ந்து நிக்கும்
எண்ணிலாக் கனவை எல்லாம்
எப்படிச் சொல்வேன் என்று
பெண்ணவள் கைகள் கூப்பிப்
பின்வரு மாறு சொன்னாள்
உள்ளத்தில் இரண்டு எண்ணம்
உதட்டிலே இரண்டு வார்த்தைக்
கள்ளத்தை அறியேன் நானும்
கதைப்பதை மெய்யாக் கொள்வேன்
பள்ளத்தைக் கண்டால் ஓடிப்
பாய்ந்திடும் வயலின் வாய்க்கால்
வெள்ளத்தைப் போல நானும்
வீழ்கிறேன் உங்கள் காலில்
என்னவன் என்னைக் காப்பான்
என்பதைத் தவிர என்றும்
சின்னதோர் அச்சம் கூடச்
சிந்தையில் இல்லை என்னைப்
பின்னிய கரங்கோத்து அன்புப்
பிணைப்பினில் தேவன் சேர்ப்பான்
என்பதே இனிமேல் இந்த
ஏழையின் நினைவில் என்றாள்
என்றவள் ஏதோ எண்ணி
எங்களின் வீட்டில் இன்று
நின்றுசேர் உணவு உண்டு
நீங்களும் போக வேண்டும்
இன்றுதான் எந்தன் தெய்வம்
ஏந்தனின் சமையல் உண்டு
நன்றெனச் சொல்லப் போகும்
நாளிது என்று சொல்ல
அன்னையும் வீடு வந்தாள்
அத்தனை உடையும் தோய்த்துப்
பின்னிய கயிறு தோறும்
பிரித்ததைப் போட்டாள் அப்போ
என்னவோ சொல்லத் தேவன்
எழுந்தனன் செல்வி அப்பால்
மின்னலாய் மறைந்தே விட்டாள்
மீண்டவள் வரவே யில்லை
உங்களின் மகளை நானும்
உயிரென விரும்பு கின்றேன்
எங்களின் வாழ்வில் நாங்கள்
இனிமையாய் வாழ்வோம் நீங்கள்
சங்கடப் படவே வேண்டாம்
சரியென்ச் சொல்க என்றே
தங்கமாம் செல்விக் காகத்
தாயிடம் கேட்டான் தேவன்
முன்னரே அதனை நெஞ்சில்
முழுமையாய்த் தெரிந்தாள் போல
பின்னிய கயிறு தோறும்
பிழிந்துடை போட்ட பின்னர்
என்னதான் உங்கள் நோக்கம்
என்றுதன் பார்வை யாலே
சொன்னதும் திகைத்தான் தேவன்
சுழன்றது தலையும் கூட
தாயின் மறுப்பு
கேள்வியினை நாம்கேட்கும் போதில் எல்லாம்
கிடைககும்விடை சாதகமாய் அமையும் என்று
நாள்தோறும் நாமெண்ணி நடத்தல் ஒன்றே
நாளாந்தப் பிரச்சனைக்குத் தொடக்கம் தம்பி
வேள்பாரி முல்லைக்குத் தேரை ஈந்தும்
விதிமுடிவில் அவன்பெற்ற குழந்தை கூடத்
தாள்பாடிப் பிழைக்கின்ற புலவன் கையால்
தன்வயிறு வளர்த்திட்ட கதைதான் உண்டு
காதலினை வாழ்க்கையிலே நானும் கண்டு
கனவுகளை வளர்த்தெல்லாம் அழிந்து இன்று
பாதகமே இல்லாமல் செல்வி தன்னைப்
பக்குவமாய் வளர்க்கின்றேன் அவளின் வாழ்வை
மோதவைத்து விதியோடு விழைவு பார்க்க
முதுமைமிகும் என்மனத்தில் தெம்பே யில்லை
ஆதலினால் செல்வியினை மறந்து நீங்கள்
ஆரெனும் ஒருத்தியைப்போய்க் கட்டி வாழ்க
கதைகேட்ட கவலையினால் எல்லா நெஞ்சும்
கட்டுகிறேன் என்றேதான் முதலில் சொல்லும்
விதையூன்றும் எண்ணங்கள் இப்போ தோன்றா
விளைவெல்லாம் பின்னாலே பெற்றார் இரத்தம்
சதையெல்லாம் ஒன்றான அக்கா தங்கைச்
சங்கதிகள் அணிவகுக்கும் தடைகள் போடும்
எதையெந்தன் செல்விக்கு எப்போ செய்தல்
என்பதெலாம் நானறிவேன் போங்கள் என்றாள்
என்மகளை என்றைக்குமே கொடுக்க நேர்ந்தால்
என்னைவிடத் தாழ்ந்தவொரு குடும்பம் தன்னில்
புன்னகையின் பெருக்கோடு கொடுத்தல் ஒன்றே
புதவாழ்வின் வமியென்று நினைக்கின்றேன் யான்
பொன்பொருளால் புகழ்தனினால் பதவி தன்னால்
போகங்கள் நிறைந்தவர்கள் கையில் நீட்டிப்
பின்னவளின் வாழ்க்கையினைச் சேறாய் ஆக்கப்
பெற்றெடுத்த நானென்றும் துணியேன் என்றாள்
மாதாவும் பிதாவோடு குருவும் கூட
மனிதருக்குத் தெய்வமென நூல்கள் கூறும்
காதாலே கேட்டதனை மனதில் கொள்ளாக்
காரணத்தால் செல்வியினை நீங்கள் கேட்டீர்
ஆதாரம் மாணவர்க்கு ஒழுக்கம் ஊட்டும்
ஆசிரியர் என்பதனை விடுத்து நீங்கள்
ஊதாரித் தனமாக நடத்தல் தம்பி
ஊண்மையிலே பிடிக்கவில்லை என்றும் சொன்னாள்!
தாயுரைத்த வார்த்தைகளால் நாணித் தேவன்
தாங்காத கவலையுடன் விடையும் பெற்றான்
வாயுரைக்க முன்னென்றும் வார்த்தை தன்னை
வாங்குபவர் யாரென்றும் பார்க்க வேண்டும்
சேயுரைத்த வார்த்தைகளும் அவளைப் பெற்றாள்
சேரவிடா வார்த்தைகளும் சேர்ந்து வாட்டும்
நோயுரைக்க ஒருவரில்லாத் துன்பத் தோடு
நூலறுந்த பட்டமென மெதுவாய்ப் போவான்
காலமெனும் ஏட்டினிலே அதிக பக்கம்
கருத்தேதும் இல்லாமல் கடந்து போக
ஓலமிட்டு அழுகின்ற மனத்தைத் தேற்றி
உரங்கொடுத்துத் திடப்படுத்தித் தோற்ற தேவன்
ஆலமர நிழலினிலும் அமைதி கொஞ்சும்
ஆறுகுளக் கரைகளிலும் தனிமை யாகப்
பாலமி;டடுச் சிந்தனையைச் செல்வி யோடு
பழகுவது ஒன்றாலே இன்பம் கண்டான்.
வேண்டுகின்ற போதுகரம் நீட்டாக் காலம்
விதியலைக்கும் போதுவந்து அணைத்துக் கொஞ்சும்
பூண்டுபயிர் தோட்டம்விட்ட பின்பே நன்மை
பொறுத்திருந்து சொந்தவூர் மாற்றம் என்றே
மீண்டுமொரு இடமாற்றம் நிகழத் தேவன்
மீண்டுவந்தான் ஆனாலும் நெஞ்சைச்; செல்வி
ஆண்டுகொண்டு துயர்கொடுத்தாள் அதிலும் கூட
ஆறவொரு சுகங்கொடுத்தாள் சிரித்தாள் மெல்ல
தம்பியொரு கடிதமடா யாரோ பிள்ளை
தானெழுதி அனுப்பியுள்ளாள் என்றே அக்கா
எம்பெருமான் வாய்மலர்ந்த வார்த்தை போல
இதயத்தைத் தொட்டிழுக்கும் கதையைக் கூற
நம்யியது செல்வியெனத் தேவன் வாங்கி
நாலுமுறை நை;துமறை படித்துப் பார்த்தான்
வெம்பியழும் வார்த்தைகளின் விளிம்பில் நின்று
வேதனையை வடித்திருந்தாள் செல்வி அங்கே
செல்வியின் கடிதம்
எந்தன் அன்பே ஜெயதேவா
என்னை நீயும் மறந்தாயோ
உந்தன் நிழலில் வாழவென
ஒருத்தி இருப்பதை அறியாயோ
சிந்தை எல்லாம் எரிகிறதே
சிதறி நானும் சாகணுமா
கந்தை உடுத்த ஏழைகளைக்
காதல் கூட மதிக்காதோ
என்னைப் பெற்ற அம்மாவும்
ஏசிப் போட்டாள் என்றோநீ
என்னை எண்ணிப் பாராமல்
எங்கே போனாய் எனைவிட்டு
பன்னை மரமும் பனைமரமும்
பரவிச் சூழ்ந்த வளவெல்லாம்
அன்பே உன்னை நினைத்தேங்கி
அழுது நானும் திரிகின்றேன்.
கல்வி கொடுத்தாய் கைகொடுத்தாய்
காதல் கொடுத்தாய் நெஞ்சத்தில்
நல்ல அன்பும் கொடுத்ததனால்
நம்பி உன்னை வாழ்கின்றேன்
சொல்ல இன்றோ வார்த்தையிலை
சொன்னால் தானோ நீயறிவாய்
இல்லை உன்னைக் காணாமல்
இனியென் வாழ்வில் நிம்மதியே
படிக்கும் பிள்ளைகள் யாரேனும்
பார்த்தால் உன்னை வகுப்பினிலே
பிடிக்கா தெனக்கு என்பொருளை
பிறகேன் இவர்கள் பார்க்கின்றார்
வெடித்தே பொகும் நெஞ்சமெலாம்
வெந்தே போவேன் உன்னையவர்
நடிப்பால் கொண்டே போய்விட்டால்
நானென் செய்வேன் என்றழுவேன்
கல்வி கற்கத் தனிமையிலே
காலை நேரம் நான்போவேன்
இல்லைப் படிக்கக் காசேனும்
இயன்ற வரைக்கும் படியென்று
தோல்லை பலதின் நடுவினிலும்
துணையாய் அம்மா தருகின்றாள்
எல்லை போட்ட அவளளெண்ண
எதிப்போ எனக்குப் பெரிதல்ல
உன்னைக் காண ஓரிடத்தை
உன்னால் முடிந்தால் நீயறிந்து
உன்னை அங்கு வரச்சொன்னால்
எல்லாம் அங்கே பேசிடலாம்
சொன்ன வார்த்தை தவறென்றால்
சொல்க அன்பே நீயெனக்கு
மின்னல் போல விடுமுறையும்
மீண்டால் பின்போ முடிவில்லை
இப்படி எழுதி அனுப்புவதால்
இவளும் மாதவி வம்சமெனத்
தப்புடன் நீயும் நினைப்பாயோ
தவிப்பென எண்ணிப் பொறுப்பாயோ
எப்படி என்னை நினைத்தாலும்
என்னைக் காண அன்பேவா
கப்புடன் சாய்ந்து கைநோகக்
கலங்கி எழுதி அனுப்புகிறேன்
உனது மனமும் சரியென்றால்
உடனே எனக்குப் பதிலெழுதி
எனது வீட்டு முகவரிக்கு
இன்றே போடு நானெடுப்பேன்
தனது வேலை செய்வதற்கு
தனியே அம்மா போய்விடுவாள்
மனது நீயும் கலங்காதே
மகிழ்வாய் அதனை வைத்துக்கொள்
அன்பே உனக்கு முத்தங்கள்
அன்பே உனக்கு என்னிதயம்
அன்பே உனக்கு நான்கூட
அலையும் மனமும் உனக்காக
அன்பே எல்லாம் உனக்காக
அள்ளிக் கொண்டே மீதிவிடு
என்பேன் எனோ தெரியாது
இதுதான் காதல் என்பதுவோ