ஆத்மாவின் இராகங்கள்
வயலோரம் நடந்த கால்கள்!
கீற்றோலைக் கைகாட்டிக் கீழ்வானில் இளந்தென்றல்
கீதத்தில் மயங்கும் தென்னை – வயல்
நாற்றோடு போராடி நடுவானின் இடைநின்று
நடைபோட்டு மகிழும் நிலவு – நீர்
ஊற்றோடு போராடி உடல்நோக மெதுவாக
உறக்கத்தில் சாயும் நாணல் – கரும்புச்
சாற்றோடு போராடும் கருவண்டுக் கூட்டத்தின்
சத்தத்தில் மிதக்கும் மாலை!
புல்வளர்ந்த நெடுந்தாளின் மீதமர்ந்து சிறுபூச்சி
புரியாத குரலொன்று காட்டும் – அங்கு
கல்வளர்ந்த இளந்தேரை களிப்போடு தன்னுடைய
கருநாவை அதன்மீது நீட்டும் – போர்
வில்வளர்ந்த பாணமென பொந்திருந்து கிழவாந்தை
வெளியாலே குரல்கொடுத்துப் பறக்கும் – கொடும்
பல்வளர்ந்த பெரும்பாம்பு வரம்பசைந்து மெதுவாக
பலவெலிகள் சுவைபார்க்கும் நேரம்!
கருஞ்சிறுத்தைக் கண்போலக் காதணிகள் மினுமினுக்க
கைவீசிப் பெண்கிழவி நடக்க – பின்னால்
நெருஞ்சிவிதை முள்போலச் சிறுமடிகள் இடைதெரிய
நெருங்கிவரும் கன்றுகளும் பசுக்கள் – அதைப்
பெருஞ்சிறகுக் கைவிரித்துப் பெரியபனை வட்டிருந்து
பிரிந்தவர்போல் கருங்குழவி பார்க்க – ஒரு
குறுஞ்சிரிப்பு நடைபோட்டுக் கோழிகளும் வரவேற்றுக்
கொக்கரிக்கும் நேரமந்த நேரம்!
பனையோலைக் கீற்றாலே பலகாலம் முன்படைத்த
பழுதான வேலிகளே அதிகம் – அதில்
தினைபோலக் குவிகின்ற கறையானின் கைவண்ணம்
தீட்டாத ஓவியமாய்த் தெரியும் – செல்வி
மனைதேடிச் செல்கின்ற ஜெயதேவன் மனதந்த
மருதநிலக் காட்சிகளில் பதியும் – அந்த
நினைவோடு பலர்சொன்ன வழிகேட்டு ஜெயதேவன்
நெடுந்தூரம் வயலோரம் நடந்தான்!
செல்வியின் வீட்டில்!
வீட்டறையின் தட்டியினை அடைக்கச் செல்வி
விழுந்தபல ஓலைகளை நனையப் போட்டுப்
பாட்டுவெயில் காலைமுதல் கிடுகாய்ப் பின்னிப்
பக்குவமாய் அதையடுக்கும் போதில் அன்று
கூட்டிவந்து தேவனையே செல்வி என்று
கூப்பிட்டாள் பக்கத்து வீட்டுத் தோழி
போட்டுவிட்டு ஒலையினைப் போனாள் செல்வி
புன்னகையின் பெருக்கோடு தேவன் நின்றான்
கண்டவுடன் சிவச்செல்வி கண்ணைக் கூடக்
கணநேரம் நம்பாமல் சிலையாய் நின்றாள்
விண்டுரைக்க முடியாத மகிழ்ச்சி பொங்க
வீட்டுக்குள் வாங்கோசேர் என்றும் சொன்னாள்
கொண்டையினைக் கையாலே குலைத்துப் பின்னர்
குனிந்தபடி முன்னாலே சென்று சிவப்புத்
துண்டெடுத்தத் தலைபின்னிக் கொண்டே நெஞ்சம்
துடித்திடவே இருத்துதற்கோர் இடத்தைப் பார்த்தாள்!
மண்ணாலே சுவர்வைத்து அதற்கு மேலே
மட்டையினை வரிந்தஅடுப் படிக்குள் நின்றே
கண்ணாலே பார்க்கின்ற தாயைக் கூவிக்
கல்லூரிச் சேரம்மா என்றே செல்வி
பண்போடு கூறிடவே அவளும் வந்து
பாய்போட்டுத் திண்ணையிலே இருங்கள் என்றாள்
எண்ணாத எண்ணங்கள் எண்ணி வந்தான்
ஏழ்மையது கொடுமையினைக் கண்டே நொந்தான்
உங்களினைப் பற்றித்தினம் வீட்டில் வந்து
ஒருநூறு கதைசொல்வாள் செல்வி என்றும்
தங்களுக்கு மிகப்பிடித்த சேராம் நீங்கள்
தன்னுடனே படிப்பவர்கள் சொல்வார் என்று
எங்களுக்குச் சொல்வதுதான் தினமும் வேலை
என்னதம்பி படிப்பாளோ செல்வி என்றே
பொங்கிவரும் சிரிப்போடு கேட்கும் தாயை
புன்னகையின் துணையோடு தேவன் பார்த்தான்
இடமாற்றம் பெற்றேநான் வேறு ஊரில்
எனக்கொன்றும் தெரியாது ஆனால் ஒன்றைத்
திடமாகச் சொல்லிடுவேன் படிப்பில் செல்வி
திறமைமிகக் காட்டுவதால் படிக்கச் செய்தல்
கடனாகும் உங்களுக்கு குணத்தில் கூட
கல்லூரிப் பிள்ளைகளின் கூட்டம் தன்னில்
நடமாடும் செல்வியைப்போல் நல்ல பிள்ளை
நான்காண வில்லையெனச் சொன்னான் தேவன்
பிள்ளைகளின் நிலைபற்றி உண்மை கேட்டால்
பிழையில்லை என்பதையே பதிலாய்ச் சொல்லி
உள்ளநிலை ஆசிரியர் எவரும் சொல்லார்
ஊருலக வழக்கமிது நீங்கள் கூடக்
கள்ளியவள் மனங்குளிரப் புகழ்கின் றீர்கள்
கணப்போதும் வீட்டினிலே படித்தல் இல்லை
துள்ளியிந்த வயலெல்லாம் குதித்தல் அன்றித்
துணைக்கு வந்து ஒருவேலை செய்ய மாட்டாள்
சொல்லிவிட்டு தாய்திரும்பி மகளைப் பார்த்தாள்
சொல்லவொணா வெட்கமுடன் தாயைப் பார்த்து
செல்வியவள் உதடுகளைக் கடித்தே இல்லைச்
சேரம்மா சொல்வதெலாம் பொய்யே என்று
நல்லதொரு கண்வளைப்பில் காட்டி அப்பால்
நடந்திட்டாள் ஜெயதேவன் தாயைப் பார்த்து
கொல்லவொரு ஆயுதமும் கையில் இன்றிக்
கொன்றுவிடும் வினாவொன்றைக் கேட்க லானான்!