ஆத்மாவின் இராகங்கள்

விதியின் கவலைகள்

பெட்டி படுக்கைகள் புத்தகம் – எழுதப்
பேனை முதலிய யாவையும் – அள்ளிக்
கட்டிக் கொண்டே யந்தத்தேவனும் – அயல்
கல்லூரிக்குப் பயண மாயினான்!

தொட்டில் பசுவினக் கூட்டத்தை – இனித்
தோட்ட வரம்பெலாம் கொண்டுபோய்க் – தினம்
கட்டிவைத் தேபுல் மேய்த்திட – வீட்டில்
கவன மெடுப்பவர் வேறுயார்?

கூலி கொடுத்தென்றும் தோட்டத்தை – தினம்
கொத்திப் புரட்டிட முடியுமோ – சிறு
வேலிப் பொட்டுக்கு ளால்வரும் – பல
வீட்டுச் சனங்களின் ஆடுகள்!

தேடிக் கலைத்திட யாரினை – நாம்
தேடித்தான் வைத்திடப் போகிறோம் – பயிர்
நாடிப் பனிபொழி காலையில் – தண்ணீர்
நாளை ஊற்றவோர் ஆளில்லை!

அப்பாவும் அம்மாவும் தோட்டத்தை – இனி
அப்படியே விடப் போகிறார் – வீட்டில்
சுமா இருந்துமே வாழ்க்கையின் – உண்மைச்
சுவையை இழந்திடப் போகிறோம்!

எண்ணங்கள் தொடர்கதை ஆகவே – அவன்
இதயம் புகுந்ததை வாட்டிட – அங்கு
புண்ணென நொந்திடும் மூலையில் – ஒரு
புத்துணர்வும் வலி தந்திடும்!

நேற்றந்த மாலையில் சிவச்செல்வி – ஏன்
நின்றந்த வார்த்தைகள் கூறினாள்? – எதில்
தோற்றந்தப் பிள்ளையும் வாடினாள் – என்ன
துன்பத்தில் அக்கதை பேசினாள்!

விரும்பாத ஒருவனைச் செய்யென்று – பெற்றார்
வேண்டினரோ அவள் செல்வியை – என்ன
இரும்பா பெற்றவர் இதயங்கள் – வேறு
என்னதான் கவலைகள் இருந்திடும்?

விடுதலை வந்ததும் செல்வியாள் – வாழும்
வீட்டுக்குப் போயதைக் கேட்கலாம் – அது
அடுதலைச் செய்கையாய் ஆகுமா – யாரும்
அழுவதைக் கேட்பதோர் பாவமா?

மனமெனும் தோணியும் கேள்வியாம் – பெரு
மலையெனும் பாறையில் மோதப்போய் – அங்கு
கனவொளி விடையெனும் விளக்கினைக் – கண்டு
கரையெனும் நிம்மதித் துறைவரும்!

இரக்கம் என்கிற பாலினை – எல்லா
இதயப் பசுக்களும் பொழிந்திடா – அந்தச்
சுரப்புக்கும் பூமியில் காரணம் – என்றும்
சொல்லில் அடங்கிடா விதியதாம்!

நிலவுக்கு ஒரு கேள்வி

தாவிவரும் சோளகத்தில் கொடிகள் ஏற்றித்
தம்மனதில் சிறுவர்குழாம் களிக்கும் காலம்
தூவிமழை வான்பொழிந்த சேற்றில் நின்று
தூதுவிடும் சித்திரையின் ஓய்வு நாளில்
ஆவியுயிர் வருத்துகின்ற நிலவைப் பார்த்து
அழுதழுது சிவச்செல்வி நெஞ்சம் நோவாள்!
மாவிலையின் சருகுகளைக் கூட்டிக் கூட்டி
மனம்நிறைந்த காதலனை எண்ணிப் பார்ப்பாள்.

கண்ணாலே காதலனைக் கண்டே நானும்
கதைபேச வழியொன்றை நிலவே காட்டாய்!
பெண்ணாக இலக்கியங்கள் உன்னைச் சொல்லும்
பிரிவென்னும் துயத்தை அறியாய் நீயோ?
புண்ணாகிப் போச்சுதடி இதயம் வெந்து
புதுநோவை நீயுந்தான் தருதல் ஏனோ?
மண்ணாகி நானழிந்து சாகும் போதும்
மண்கூட ஜெயதேவா என்றே ஏங்கும்!

அழுகிறது உள்ளமடி அவரைத் தேடி
அலைகிறது கண்களடி உடைகள் கூட
விழுகிறது எனைவிட்டு உணவைக் கண்டால்
வியர்க்கிறது அம்மாவோ ஏதும் கேட்டால்
எழுகிறது பெருங்கோபம் எங்கே தேவன்
என்கிறது புத்தகமும் படிக்கத் தொட்டால்
தழுவுதடி கண்தூக்கம் என்றால் பாயில்
தனிமையிலே கொல்லுதடி கனவே வந்து.

ஒருநாளில் ஜானகியும் காதல் வென்று
உறவாடி இராமனுடன் மகிழ்ந்தாள் என்பார்
திருநாட்கள் பலநோக்கிக் கிடந்த போதும்
தேன்மொழியாள் தமயந்தி நளனைச் சேர்ந்தாள்
கருவாகிப் பிறவாத போதும் கூடக்
கைப்பிடித்தாள் அர்ச்சுனனைத் துரப நாட்டில்
உருவான பாஞ்சாலி விதியால் என்றே
ஊரெல்லாம் கதைபடித்து மகிழும் பாவம்!

தெருவோடு தெருவாக நடந்து பார்த்தால்
திருவோடு ஏந்துகிறோம் பெண்கள் நாங்கள்
பொருளோடு பொருள்சேர்த்துப் பொலிவு காண
புத்தாடை நகையணிந்து அழகு பார்க்க
உருவான செயலல்ல எங்கள் வாழ்வில்
உறவாட ஒருவனையே இடுக பிச்சை
தெருவீதி கேட்கின்றோம் ஆனால் இங்கே
தேவாரம் புராணங்கள் தெய்வம் நூறு!

உரலிட்டுத் துவைக்கிறது உலகம் பெண்ணை
உறவென்று துயர்துடைக்க வருவார் இல்லை
மரவட்டுப் பிடியிழந்த ஓலை போல
மனதுற்ற வேதனையால் பெண்கள் வீழ்ந்தார்
சரவட்டம் போல்முன்னால் துன்ப வட்டம்
சவுக்கடியாய்ச் சீதனநோய் நெருஞ்சி முள்ளாய்ப்
பரவிட்ட பணங்காசு காணி என்ற
பாவச்சுமை காதலெனும் மலரின் மீதே!

பாஞ்சாலி தமயந்தி சீதை என்ற
பாவையர்கள் மட்டுந்தான் காதல் என்ற
பூஞ்சோலை புகுந்தாடும் விதியோ மற்றப்
பூவையர்க்குக் காதலொரு சதியோ காட்டில்
தீஞ்சாற்றுப் பழமரத்தைக் கொடிகள் பற்ற
திரவியங்கள் கொடுப்பதிலை தெய்வம் என்று
மாஞ்சோலைக் கிளிதாங்கும் அம்மன் கூட
மங்கையர்க்கு வாழ்வுதர மறுக்கின் றாளே!

மலைதடவ முகிலினையும் வண்ண வண்ண
மலர்தடவ தென்றலையும் பனியின் தூறல்
இலைதடவச் செடிகளையும் இரவில் கூடும்
இருள்தடவ உலகினையும் இனிமை யான
கலைதடவச் சிலைகளையும் கடலில் ஓடும்
கலந்தடவ அலைகளையும் அடுப்பு மேட்டில்
உலைதடவ அமுதினையும் படைத்த எங்கள்
உத்தமனாம் இறைவனின்று கண்ணா கெட்டான்?

வானகத்து நிலவேநான் இனியும் நின்றால்
வந்துடனே அம்மாவும் விடுப்புக் கேட்பாள்
கானக்தில் வலைவிரிக்கும் வேடன் போல
கதைவிரித்துப் பிடித்திடுவாள் எந்தன் நெஞ்சை
மீனகத்துத் தூண்டிலென ஏனோ நானும்
மீட்ச்சியிலாக் காதலுக்கு இரையாயப் போனேன்
நானகத்தில் உள்ளவற்றை உனக்கும் சொல்லும்
நாடகமும் எத்தனைநாள்? என்றாள் செல்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.