ஆத்மாவின் இராகங்கள்
தணியாத தாகம்
எரிமலை என்னும் நெஞ்சில்
எழுந்திடும் துன்பம் எல்லாம்
புரிந்திட ஒருசொல் லாலே
பூவையும் சொல்லி அங்கே
சரிந்திடும் பொழுதை நோக்கிச்
சாய்ந்திடும் உள்ளம் நோக
பரிவுடன் விடையும் கூறிப்
பதைப்புடன் நடக்க லானாள்
நடந்திடும் போதும் கூட
நங்கையின் கண்கள் பின்பு
கடந்திடும் தேவன் தன்னைக்
கனிவுடன் எட்டிப் பார்க்கும்
படர்ந்திடும் கால்கள் கூடப்
பாரடி நின்று என்கும்
உடனடித் தீர்வைக் கேளா
ஊமைநீ என்னும் நெஞ்சம்!
பள்ளியும் படித்த பாடப்
பக்கமும் பிரியும் தேவன்
துள்ளிடும் முகமும் வகுப்பில்
துளித்திடும் கதையும் சிரிப்பும்
அள்ளியே நெஞ்சில் யாரோ
அனலெனக் கொட்டச் செல்வி
கொள்ளியை மிதித்தாள் போலக்
குலைவுடன் வீடு சென்றாள்
வீட்டிலே சென்ற நங்கை
விளக்கினை ஏற்றி வைத்துக்
கூட்டிலே கோழி யெல்லாம்
கூவியே அடைத்துப் பின்னும்
ஆட்டுக்குக் குழையும் கட்டி
அடுப்பையும் ஊதி மூட்டி
ஓட்டினை வைத்தே தோசை
ஒருமுறை சுட்டுப் பார்த்தாள்!
தோசையை வருவோக் கெல்லாம்
தோகையின் அம்மா விற்பாள்
ஆசையாய் அரிசி சீனி
அனைத்தையும் வாங்கி மீதிக்
காசையும் பார்ப்பாள் ஏதும்
கையினில் கிடையாத் துன்ப
ஓசையை நெஞ்சம் கேட்க
ஊர்வயல் வேலை செய்வாள்!
அடுப்படி நிலையில் செல்வி
அமைதியாய்த் தலையைச் சாய்த்து
விடுபட்டுப் போகும் அந்த
வேங்கையாம் தேவன் தன்னை
தொடுபடாது அறுந்த அன்புத்
துடிப்புடன் நினைத்துப் பார்ப்பாள்
நடுவழி பிரிகின் றானே
நாயகன் என்னும் நெஞ்சம்!
ஆண்டுகள் பலவாய் நானும்
ஆசையை வளர்த்த போதும்
வேண்டியே கேட்டேன் இல்லை
விருப்பத்தை அடக்கி வந்தேன்
பூண்டொடு எந்தன் ஆசை
புதைகுழி போகும் என்றே
நீண்டநாள் எண்ணி வாழ்ந்தேன்
நினைவெலாம் அவரே ஆக
உண்மையில் அவரும் கூட
ஊரினில் ஏழை தானாம்!
எண்ணத்தைச் சொன்னால் என்னை
ஏற்கவும் கூடும் ஆனால்
அண்ணனும் வயதில் மூத்த
அக்காவும் இருக்கம் போது
பண்பினை எனக்காய் விட்டால்
பழியெலாம் அவர்க்குத் தானே!
நாங்களும் பணமும் வீடும்
நகைகளும் இருந்தால் அந்தத்
தீங்கனிப் பழமே யான
தேவன்சேர் வீட்டில் கேட்டு
பூங்குயில் கூவ நல்ல
புதுமலர் மாலை சூட்டி
நீங்களே எல்லாம் என்ற
நினைவுடன் வாழ லாமே!
ஒன்றுமே இல்லா ஏழை
ஓட்டிலே தோசை சுட்டு
என்றுமே வாழும் வாழ்க்கை
இப்படி நினைத்தேன் பாவம்
சென்றுவீழ் பொழுது நாளை
செகத்தினில் வருதல் கூடும்
இன்றுவந் திடாதே அன்றோ
இதயத்தை வருத்தல் ஏனோ?
மற்றவர் போல எங்கள்
மனத்திலும் அன்பு நேர்மை
பற்றியே வளரும் ஆனால்
பணமென்ற ஒன்றே இல்லை
கற்றவள் அம்மா ஆனால்
கடனுக்குத் தொசை விற்கும்
நற்செயல் புரியத் தானே
நான்முகன் எழுதி வைத்தான்!
பணத்தினால் மிதந்த பெண்கள்
பண்புகள் தவறித் தங்கள்
குணத்துக்கு ஒவ்வாச் செய்கை
குறைவறப் புரியும் போதும்
மணத்துணை யாக நல்ல
மனிதரைத் தேர்ந்து வாழ
பணமெனும் கருவி ஒன்றே
பாரினில் துணையாய் நிற்கும்.
கடவுளின் கோயில் கற்பு
கண்ணிய மான வாழ்க்கை
படலையைத் தானும் எட்டிப்
பார்த்திடாப் பண்பும் பொல்லா
விடத்தினை தந்து கூட
விரும்பினால் கணவர்க் காக
கடனெனக் குடிக்க அஞ்சாக்
கன்னியர் வாழ்க்கை என்ன?
குடிவெறி கொடிய செய்கை
கொண்டவள் வாழ்வைப் பேணா
அடிதடிக் கூச்சல் போடும்
அப்படி ஒருவன் தானே
துடியடி என்று எந்தன்
துணையென வந்து சேர்வான்
எடிபிடி என்ற வார்த்தை
எத்தனை வருமோ சாமி!
இனியென்ன அவரும் போட்டார்
இதயமே அமைதி கொள்வாய்!
கனிந்திட விதியில் லாமல்
காய்களோ பழங்கள் ஆகா
பனிமுகில் போல வாழ்க்கைப்
பாதையில் வந்த அந்த
மனிதரும் போயவிட் டாரே
மனமது தவித்தல் ஏனோ?
நினைப்பது நடந்தே விட்டால்
நிலத்திலே பெருமை என்ன
நனைத்திடும் கண்ணீர் தம்மை
நாங்களும் காண மாட்டோம்!
கனைத்திடும் குதிரை வாழ்வில்
கவின்தரு கொம்பு வையாத்
தினைவளர் மலையாள் கேள்வன்
திறனையும் உணர மாட்டோம்!
போகட்டும் தேவன் ஆகா!
போய்விட்டால் எனக்கு என்ன
வேகட்டும் எந்தன் நெஞ்சு
வெடிக்கட்டும் வெடித்து நூறாய்
ஆகட்டும் இறைவா! ஆனால்
அன்பிலே பிறந்த நெஞ்சத்
தாகத்தை உன்னால் என்றும்
தடுத்திட முடியா தப்பா!