ஆத்மாவின் இராகங்கள்
மாணவி என்றொரு தாரகை
நிழலென்னும் போர்வையினால் நிலத்து மண்ணை
நெடுந்தூரம் மறைக்குமொரு வேம்பின் கீழே
அழலென்னும் பொருள்விழுந்த மலரைப் போல
அமர்ந்திருந்தாள் சிவச்செல்வி என்னும் பெண்ணாள்!
குழலென்னும் பொருள்தொலைத்த ஆயன் போல
குருவான தேவனையே பிரியும் பேதை
உழவென்னும் துயருற்ற நிலத்தைப் போல
உளமுற்ற வேதனையால் அழுதாள் உள்ளே!
அன்றேதான் விரிந்திட்ட வாழை தன்னின்
அழகான குருத்தின்நடு நரம்பைப் போல
நின்றிருக்கும் நேருச்சி இரண்டு பக்கம்
நீண்டிருக்கும் பின்னல்கள் ஒன்று முன்னால்
சென்றவளின் மடியினிலே பள்ளி கொள்ள
செம்மண்ணில் மற்றதுவோ ஊஞ்ச லாடும்!
பொன்னகையைக் கண்டறியாக் கழுத்தின் பின்னே
புகைநிறத்தில் உரோமங்கள் அழகு சேர்க்கும்!
திரைநீக்கம் இதழ்களுக்கு ஆகும் போதில்
தேனான சிரிப்பொன்றை உலகம் காணும்!
நிரையான பற்களிலே கூடத் தானும்
நிம்மதியைக் கெடுக்கின்ற சக்தி ஏன ோ?
கரையோரம் குழிவிழுந்த கன்னத் தோடு
கதைபேசிச் சிரிக்கின்ற அவளைக் கண்டால்
தரைவாழ்வில் துறவியெனத் திரிவோர் எல்லாம்
தவமெதற்கு செய்கின்றார் என்றே தோன்றும்!
இல்லையென மறுத்திட்ட பொருளாம் ஒன்றை
இரந்தேனும் பெறவிரும்பும் குழந்தை போல
எல்லையிலா அவள் விழிகள் ஏக்கத்தோடு
எப்போதும் தவிப்புடனே எதையும் நோக்கும்!
கல்லைவிடக் கனமான பொருளைக் கூடக்
கணப்போதில் அவள்விழிகள் பொடியாய் ஆக்கும்!
தொல்லையிந்த உலகிற்கு விழியோ? இல்லைத்
தோகையவள் வேறுபல கொண்டும் வாழ்ந்தாள்!
வெண்பட்டுத் துணிவிரித்து அதற்கு மேலே
விதைத்திட்ட மைசூரின் பருப்புப் போலே
கண்பட்ட இடமெல்லாம் கன்னம் தன்னில்
கனிவான செம்மஞ்சள் பருக்கள் கொஞ்சம்!
பண்பட்ட கவிதையெனக் கைகள் தன்னில்
படுத்திருக்கும் சாமைக்கதிர் நிறத்தில் உரோமம்
தண்பட்ட இருமார்பின் இடையில் நின்று
தலைநீட்டும் பேனாவும் ஒன்றைப் பற்றி!
திங்களது முகங்காணாக் குமுதம் தானோ
திசையறியாப் புதர்புகுந்த பிணைமான் தானோ
வெங்களத்தில் வேல்பாய்ந்த வேழம் தானோ
வேறுதிசை துணைபிரிந்த குயிலின் பேடோ
பொங்குபுயல் உருக்குலைத்த முல்லை தானோ
புதுவிளக்கின் சிமிழுடைத்த நெஞ்சம் தானோ
அங்குவந்து செல்வியவள் இருந்த கோலம்
ஆண்டவனும் உவமைசொல்ல அரிய தாகும்!
கேள்வியும் பதிலும்
அங்கவளை நிழலில்ஜெய தேவன் கண்டான்
அன்புடனே அவளருகில் சென்றே மெல்லத்
திங்களொளி வீசுகின்ற முகத்தைப் பார்த்துத்
திரும்புங்கோ சிவச்செல்வி என்றும் சொன்னான்
அங்கவளோ திடுக்குற்று எழுந்து சொன்னாள்
அன்புடனே சேர்போட்டு வாங்கோ என்றே
பொங்கிவரும் வேதனையை வார்த்தை காட்ட
புன்னகையை வேண்டுமென்று இதழ்கள் சிந்தும்!
சிவச்செல்வி உமையொன்று கேட்க வேண்டும்
சினங்கொள்ளக் கூடாது படிப்புக் கப்பால்
இவரென்ன கேட்கின்றார் இப்போ என்று
எண்ணாமல் உண்மையினைச் சொல்லல் வேண்டும்!
அவரெல்லாம் உம்முடனே படிப்போர் தானே
அவர்களைநீர் விட்டிங்கே இருத்தல் ஏனோ?
எவரோடும் வகுப்பினிலே உறவாய் இன்றி
எப்போதும் தனிமையிலே தவித்தல் ஏனோ?
கனிந்தவிழி உயர்பண்பு உயர்ந்த கல்வி
கருத்துக்கள் கட்டுரைகள் கடவுள் பக்தி
இனியமொழி இவையனைத்தும் நிறைந்த நீர்தான்
எப்பொழுதும் கவலையுடன் வாழ்தல் ஏனோ?
தனியவிருந் தேநீரும் தவித்தல் தன்னைத்
தரமறிய முடியாத மடையன் அல்லேன்
மனிதவியல் தத்துவத்தை நோக்கும் போது
மனம்நிறையக் கவலைகளே உமக்கும் உண்டு!
வாழ்க்கையிலே கவலைகளும் சூழ்தல் உண்மை
வழியதற்கு இதுவல்ல வலிமை யோடு
வீழ்ச்சியிலும் எழுந்திருக்கப் பழகல் வேண்டும்!
வேண்டுவன எல்லார்க்கும் கிடைத்தல் இல்லை
ஏழ்மையிலே பிறந்திட்ட கவலை தானோ
இரக்கமற்ற உறவுகளால் கவலை தானோ?
சூழ்ந்தமனக் கவலையினைச் சொன்னீ ராகில்
சோகமது தீரவழி சொல்வேன் என்றான்
உளந்தடவி உயிர்தடவி நோக்கும் கண்கள்
உணர்விழந்து நிலந்தடவ நின்றாள் அந்தக்
களந்தடவும் மார்புடைய கன்னி தானும்
கருத்தேதோ சொல்வதற்கு உதடு துள்ளும்
இளம்பருவ முகமதுவோ இருண்டு தோன்றும்
இருகரமும் தம்முள்ளே பிசைந்து கொள்ளும்
குளவரம்பின் உடைப்பெனவே பெருகும் கண்ணால்
குறிவைத்தே தேவனையும் நிமிர்ந்து பார்த்தாள்!
பூமரத்தில் பூக்கின்ற பூக்கள் எல்லாம்
புண்ணியத்தைச் செய்வதில்லைக் கோவில் சேர
மாமரத்துப் பூந்தளிர்கள் எல்லாம் கூட
மாதவத்தைச் செய்வதில்லை அணிலைக் காண!
தாமரைகள் வண்டுகட்குத் தேனைச் சேர்க்க
தவளைகளே அதைச்சுவைக்கும் விதியாம் என்றால்
தேமதுர மலர்தவிக்கும் தவிப்பைக் கொஞ்சம்
தேவன்சேர் சிந்தியுங்கள் என்றாள் செல்வி