சங்க காலமும் ஒளவையின் கோலமும்!

அந்தப் பெண் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனைக் காணத் தகடூர் அரண்மனைக்கு வருகின்றாள். அவளின் வருகை அறிந்து மன்னன் எழுந்தோடி அரண்மனை வாயிலுக்கே வந்து விடுகின்றான். அஞ்சி என்று அன்பொழுக அழைக்கின்றாள் அந்தப் பெண். மன்னன் அவளைப் பார்க்கின்றான்.

இளமை ததும்பும் கோலம். கைகளிலும் கழுத்திலும் அழகிய மணிகள் முத்துக்களோடு கலந்து பின்னப்பட்ட மாலைகள் மின்னுகின்றன. மெல்லிய இடையிலே மேகலை என்னும் ஒட்டியாணம் அசைகின்றது. வரால் மீன்களைப் போன்ற கண்களிலே மை தீட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலே ஒளி பொருந்திய நெற்றியைப் பார்க்கின்றான் மன்னன்.

அவன் உதடுகள் விறலியே என்று அழைக்கின்றன. பாணன் என்பதன் பெண்பால் சொல்லான விறலி என்பதே அவளுக்குப் பொருத்தமான பெயராக மன்னனுக்குத் தெரிகின்றது. செய்யுள் இயற்றும் வேகமும் அதை இசையோடு ஒப்புவிக்கும் தன்மையும் செய்யுளின் பாவத்துக்கு ஏற்ப நாடகப் பாணியில் அவள் காட்டும் உடலசைவும் மன்னனுக்குப் பல முறை பிடித்துப் போயிருந்த காரணத்தால் அந்தப் பெண் கவியை விறலி என்று உரிமையோடு அழைத்தான் அஞ்சி மன்னன்.

இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி!
(புறநானூறு 89)

அவள் சிரித்தாள். மன்னனுடன் அரண்மனைக்குள் புகுந்தாள். அதற்குள் மன்னன் கட்டளைப்படி பெண்கள் மிகப் புளித்த கள்ளோடு வந்து சேர்ந்து விட்டார்கள். இதைக் குடி என்று மன்னன் அந்தப் பெண்ணிடம் மதுக் கிண்ணத்தை எடுத்து நீட்டுகின்றான். நான் வரும்போது உனக்குக் கள் போதாமல் இருந்தால் நீ குடிக்காமல் முழுவதையும் என்னிடமே தந்து விடுவாயே நிறைய இருந்தால் மட்டுமே எனக்கும் தந்து என்னைப் பாடச் சொல்லிவிட்டு நீயும் அதை அருந்திக் கொண்டு என் பாடலைக் கேட்டு மகிழ்ந்து இரசிப்பாயே இது கூடவா எனக்குத் தெரியாது என்று கேட்டுக் கொண்டே கள்ளை அருந்தி முடிக்கின்றாள் அந்தப் பெண்.

சிறிய கள் பெறினும் எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே
(ஆதாரம் புறநானூற்றுச் செய்யுள் 235)

இப்போது சற்றுப் போதையில் இருக்கின்றாள் அந்தப் பெண். அவளின் தமிழோடு விளையாட இதுதான் தருணம் என்பதை உணர்கின்றான் அஞ்சி. அவளிடம் கேட்கின்றான்

பெண்ணே! மிகப்பெரிய நாட்டிலே இருந்து எனது சிறிய நாட்டுக்கு நீ வந்திருக்கின்றாய். அது எனக்குத் தெரியும். ஆனால் உன் நாட்டிலே என்னுடன் போர் செய்து வெல்லக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதை முதலில் சொல் என்கிறான் மன்னன் கோபத்திலும் அவளின் தமிழ்ச்சுவையைப் பருகும் நினைவோடு.

மன்னனே நீ வேட்டையாடிக் கொண்டுவந்த விலங்குகளின் எலும்பையும் இறைச்சியையும் எங்களுக்கு உணவாக்கித் தந்துவிட்டு உனக்கு உணவு தேடி மீண்டும் வேட்டைக்கு செல்லும் எண்ணத்தோடு ஆயதங்களைத் தீட்டிக் கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவன். ஆதனால் உன் கேள்விக்குப் பதில் சொல்கின்றேன்.

என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!
(ஆதாரம் புறநானூற்றுச் செய்யுள் 235).

அடிக்கின்ற கோலுக்கு அஞ்சாது சீறி எழும் பாம்பு போன்ற வீரர்கள் என் நாட்டிலே கணக்கற்றோர் இருக்கின்றார்கள். அது மட்டுமல்ல மனைகளிலே தொங்கும்; போர் முரசிலே காற்று மோதுவதனால் எழும் இயல்பான ஓசையைக் கூட போருக்கான அழைப்பு என்று நினைத்து மகிழ்வோடு புறப்படும் படைத் தவைவர்களும் அங்கே பலர் இருக்கின்றார்கள் தெரிந்து கொள் என்று கூறுகிறாள் அந்தப் பெண்.

பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
எறிகோ லஞ்சா வரவி னன்ன
சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னு மென்னையு முளனே.

(புறநானூறு 89)

சங்க இலக்கியமான புறநானூறு காட்டும் இந்தப் பெண்தான் அன்றைய ஒளவை. ஓளவையார் என்றவுடன் கையிலே ஊன்றிய கோலும் நரைத்த முடியும் நெற்றியிலே திருநீறும் அணிந்து கூழுக்குப் பாடிக்கொண்டு தெருவெல்லாம் அலைந்த ஏழை மூதாட்டி ஒருத்திதான் எமது மனக் கண் முன்னே தோன்றுவாள்.

உண்மையும் அது தான். அந்தக் கோலத்திலும் ஒரு ஒளவை இருந்தாள். அவள் சோழர்கள் கோலோச்சிய 12ம் நூற்றாண்டிலே வாழ்ந்து வாக்குண்டாம் நல்வழி ஆத்திசூடி கொன்றை வேந்தன் போன்ற நீதி இலக்கியங்களைப் பாடிப் புகழ் பெற்றாள். இன்று வரை ஒளவை என்ற பெயருக்கு அவளே இலக்கணமாகத் திகழ்கின்றாள்.

ஆனால் சங்க காலத்திலே இருந்த ஒளவை இளமையானவள். ஆழகானவள். தன்னைப் புறத்தே அழகுபடுத்திப் பார்ப்போரைக் கவர்ந்தவள். கரிய கூந்தலும் கையிலே ஏடும் கண்ணுக்கு மையும் கழுத்திலே மாலையும் எனத் தினவட்டாகத் திரிந்தவள். மதுவையும் மாமிசத்தையும் விரும்பி உண்டவள். தெய்வத்தை மதித்தாலும் அதனைத் தூக்கிப் பிடிக்காதவள். தான் பாடும் பாடல்களுக்கு தானே நாடகம் புரிந்தவள். அவள் ஏழையும் அல்ல. மன்னர்களிடம் தன் தமிழ்ப் புலமையால் நட்புக் கொண்டிருந்தவள்.

அவளின் பாடல்கள் சங்க இலக்கிங்களான நற்றிணை குறுந்தொகை அகநானூறு புறநானூறு போன்ற நூல்களில் 59 பாடல்கள் உள்ளன. அவை சொல்லும் கருப் பொருட்கள் அவளின் புலமைக்கு மடடுமல்ல சங்க காலப் பெண் கல்வியின் உயர்நிலைக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன.

இரா.சம்பந்தன்

தமிழர் தகவல் சஞ்சிகையில் (5.8.2020) வெளியான எனது கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.