தமிழுக்கு ஒரு மதில்

 

 

அந்த வீட்டுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே சீமெந்துக் கற்களால் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. ஒரு முறை மாடு ஒன்று அந்த மதிலிலே முதுகு தேய்த்த போது அதற்குக் காயம் ஏற்படட்டது கரடு முரடான அந்தச் சுவரினால்! இன்னும் அப்படித்தான். வீட்டுக்காரச் சிறுமி தன் பிஞ்சுக் கைகளால் சிறிது தூரம் அந்த மதிலை விளையாட்டாகத் தடவிச் சென்றாள். பாவம். கைத்தோலை உரசி எடுத்து விட்டது மதில்.

 

வீட்டுச் சொந்தக்காரர்கள் சிந்தித்தார்கள். என்ன பாதுகாப்புக்கு ஏற்படுத்திய மதில் இப்படிக் கையைப் பதம் பார்க்கிறதே! மதிலும் வேண்டும். அதைத் தொட்டால் சுகமாகவும் இருக்க வேண்டும்! அதோடு பலமாகவும் இருக்க வேண்டும். கரடு முரடாக இருக்கக் கூடாது. என்ன செய்யலாம்? யோசித்தார்கள்!

 

 

ஓ! எந்தச் சீமெந்தைப் பாவித்து கற்களை ஒன்றோடு ஒன்று பொருத்தி மதிலைக் கட்டினோமோ அதே சீமெந்துக் கலவையைப் பாவித்து பொருத்தப்பட்ட கற்கள் தெரியாமல் மேலே பூசிவிட்டால் தொடுபவர்களுக்குச் சுகமாகவும் இருக்கும்! மதிலுக்குப் பலமாகவும் இருக்கும்! அழகாகவும் கூட இருக்கும்! அப்படியே செய்து வைத்துவிட்டுப் போனார்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள்!

 

இதையே நம் தமிழ் எழுத்து முறைக்கும் செய்து விட்டுப் போனார்கள் எம் முன்னோர்கள். உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் ஓசைக்காக இணைக்கும் நெறியை வகுத்து தந்தார்கள் அவர்கள். சண்முகம் என்ற தமிழ்ப் பெயரை எடுக்கிறோம்.  இதிலே ச்சும் உவும் சேர்ந்த ச என்ற உயிர்மெய் எழுத்தும் ண் என்ற மெய் எழுத்தும் ம்மும் உவும் சேர்ந்த மு என்ற உயிர்மெய் எழுத்தும் க்கும் அவும் சேர்ந்த க என்ற உயிர்மெய் எழுத்தும் ம் என்ற மெய்யெழுத்தும் என்று எட்டு எழுத்துக்கள் உள்ளன.

 

உயிர்மெய் எழுத்து என்ற ஒன்று தமிழில் இல்லை என்றால் சண்முகம் என்பதை நாங்கள் ச்அண்ம்உக்அம் என்று எட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தித் தான் எழுத வேண்டியிருக்கும். இதைத் தான் ஆங்கிலத்தில் செய்கிறார்கள். அவர்கள் சண்முகம் என்பதை எட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி sanmugam என்று எழுதுகிறார்கள். ஆனால் நாம் உயிர்மெய் எழுத்தைப் பாவித்து ஐந்து எழுத்துக்களில் எழுதி விடுகிறோம்.

 

இதில் நன்மை என்னவென்றால் எங்களுடைய ஐந்து எழுத்துச் சண்முகத்தை உச்சரிக்கும் போது பூசிய மதிலைத் தடவுவது போல சுகமாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆனால் உயிர் மெய் எழுத்து இல்லாத ஆங்கிலத்தில் எட்டு எழுத்துச் சண்முகத்தை உச்சரிக்கும் போது பூசாத மதிலைத் தடவுவது போல கரடு முரடாகவும் இனிமையின்றியும் அமையும்.

 

இதை உணர்ந்து தான் எம் முன்னோர்கள் தமிழுக்கு உயிர்மெய் எழுத்து ஒன்றை உருவாக்கினார்கள்! அவர்கள் மட்டும் உயிர்மெய் எழுத்தைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஐந்தெழுத்து சண்முகம் எட்டு எழுத்துக்கள் ஆனது போல எல்லாச் சொற்களும் எழுத்துக்களால் நீண்டு இன்றுள்ள புத்தகங்கள் எல்லாம் இரண்டு மடங்கு பக்கங்களுடன் இருந்திருக்கும்! கடல் என்பதை க்அட்அல் என்று எழுதியிருப்போம்.

 

ஆங்கிலத்தில் இருபத்தியாறு எழுத்துக்கள் இருப்பது போல தமிழிலும் எழுத்துக்கள் முப்பது மட்டுமே! ஆனால் உயிர்மெய் எழுத்தையும் சேர்த்துத்தான் இருநூற்று நாற்பத்தாறு  என்கிறோம்! உயிர்மெய் எழுத்துக்களே மொழி என்னும் மதிலுக்கு முன்னோர் செய்த பூச்சு வேலையாகும்! பூச்சு வேலை இல்லாவிட்டாலும் மதிலுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதில் அழகு இருக்காது.

 

அப்படிக் கல் அறுத்து மதில் கட்டி அதைப் பூசி அழகு படுத்தி எமக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டுப் போன முன்னோரை மதிக்காமல் கணணி வண்டிகள் இலகுவாகப் போக வேண்டும் என்பதற்காக மொழியென்னும் மதிலை இடிக்கப் பார்க்கிறார்கள் இன்று பலர்.

மதிலைச் சேதப்படுத்தாமல் என்ன செய்யலாம்? ஏற்கனவே இருக்கும் வாயிலை எப்படிப் பெரிதாக்கி நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்? ஓலைக் குடிசையில் கைவிளக்கு வெளிச்சத்தில் எந்த வசதியும் அற்ற திண்ணையில் இருந்து சிந்தித்துச் செதுக்கப்பட்ட மொழியைப் புதுமை என்னும் கடற்பாரை கொண்டு தாக்கத் தயாராகும் இன்றைய மொழியியல் வாதிகள் சற்று  நிதானமாக யோசிப்பார்களா?

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.