நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!
தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.4.2019) வெளியான எனது கட்டுரை. இது சங்க இலக்கியம்.
அது வயலும் வயல் சார்ந்த குடியிருப்புகளும் நிறைந்த மருத நிலம். மாலைப் பொழுது மெதுவாக நுளைகிறது. அவள் வீட்டு வேலைகள் எதிலுமே குறை வைப்பதில்லை. அவனுடைய கடமைகளிலும் தான். ஆனால் அவன் வீட்டுக்கு வருவதில்லை. காதலித்த போது காட்டிய கருணையை கைப்பிடித்த பின்பும் காட்டுவதற்கு அவனுக்கு ஏனோ மனது வரவில்லை.
கலப்பையின் பாரத்தை சுவரோரம் இறக்கி வைக்கும் தந்தையால் தனது பாரத்தை எங்கே இறக்கி வைப்பது என்று தெரியாமல் தவிப்பதும் அவளுக்குத் தெரியும். தந்தை அவளைக் குற்றம் சொல்வதில்லை. உழவன் ஆயிற்றே. மழைக்கு வாடும் பயிரைக் கண்டவன் ஆயிற்றே அதனால் போலும் வாய் திறப்பதில்லை.
வயலை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதையைச் சிலவேளை முற்றத்தில் நின்று பார்ப்பாள் அவள். ஆங்காங்கே அசையும் நெற்பயிர்கள் இணை தேடித் தாவும் தவளைகளை அவளுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். சுதந்திமாகப் பறக்கும் மின்னினிப் பூச்சிகள் மைனாக்கள் கூடத் தொழில் முடித்து கூடுகளுக்குச் சென்றுவிட்டன என்பதை அவளுக்கு அறிவிக்கும்.
வாய்கால் நீரிலே தலை புதைத்துச் சிறகடித்துக் குளிக்கும் காக்கையைக் காணும் போது இப்படித்தானே அவனும் ஒரு காலத்தில் ஓடையிலே குளித்துவிட்டு வீட்டுக்கு வருவான் என்று மனம் கனக்கும் அவளுக்கு. கூரையில் படர வேண்டிய கொடிக்கு முள்ளுத் தோடையில் ஆசை வந்துவிட்டால் அவள் தான் என்ன செய்வது?
வேறு என்ன குற்றத்தைச் செய்துவிட்டு வந்தாலும் அவள் மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஆனால் இன்னொருத்தியோடு வாழ்க்கையை பரிமாறிய ஒருவனைத் திரும்பவும் கணவனாக ஏற்றுக் கொள்ள அவள் மனது இடந்தரவில்லை.
தோழி வந்தாள். தண்ணீர் எடுக்கப் போவோமா என்றாள். அவளுக்கு விருப்பம் இல்லைத்தான். ஆனாலும் குடத்தோடு புறப்பட்டாள் எதுவும் பேசாமல். தோழி தொடங்கினாள். சரி சில காலம் தான் வராமல் தப்புச் செய்துவிட்டான். இனி வந்தால் என்ன செய்வாய்? அவள்; பதில் சொல்லவில்லை. தன்னுடன் இணைந்து வாழத் திரும்பவும் தோழி மூலம் அவன் முயல்வது அவளுக்குத் தெரியும்.
இப்போது குற்றம் செய்தாலும் முன்பு அவன் செய்த நல்லவற்றை எண்ணிப்பார். பெட்டியிலே கிடக்கும் சேலைகளை எண்ணிப்பார் என்றாள் தொழி. அப்போது அவள் வாய் திறந்தாள். உடுக்காமல் என்பதையும் அந்தச் சேலைகளோடு சேர்த்துக் கொள் என்றாள். அவள் என்ன சொல்ல வருகின்றாள் என்று தோழிக்குத் தெரியும். அவளும் பேசவில்லை.
அப்போது தோழியின் காலிலே முள் ஒன்று குற்றி விடுகின்றது. ஐயோ முள் என்றவள் குடத்தை வைத்துவிட்டு நிலத்தில் இருந்து விட்டாள். அது நெருஞ்சி முள். இப்போது தோழியைப் பார்த்துச் சிரித்தாள் தலைவி வேதனையோடு. குனிந்து அந்த முள்ளை அகற்றிவிட்டுச் சொன்னாள்.
இந்த நெருஞ்சி முன்பு சிறிய பச்சை இலைகளோடு துளிர்விட்ட போது எவ்வளவு அழகாக இருந்தது. பின்பு இதிலே மஞ்சள் நிறத்திலே பூக்கள் தோன்றிய போது இன்னும் எவ்வளவு அழகாகத் தெரிந்தது. அந்த மலர்கள் எல்லாம் காயாக உரு மாறிய போது எங்கள் மனத்தை எவ்வளவு கவர்ந்தது. இன்று அந்தக் காய் முள்ளாக மாறி உன் காலைப் பதம் பார்த்த போது தானே ஐயோ என்கிறாய்.
இப்போ உன் மனம் பச்சை இலையை நினைக்குதா மஞ்சள் பூவை நினைக்குதா இல்லையே பிடுங்கி எறிந்துவிட வேண்டும் என்றுதானே நினைக்கின்றது துன்பம் தாங்க முடியாமல். என் வாழ்க்கையும் அப்படித்தான். முன்பு நல்லது செய்தான். அழகாக இருந்தது என்ற கதையெல்லாம் இனி வேண்டாம்.
எனது மனம் நொந்து நொந்து சிந்திய கண்ணீர் போதும். இனி ஒரு பொழுதும் அவன் எனக்கு வேண்டாம். உன் காலிலே தைத்த நெருஞ்சி இது. என் நெஞ்சிலே தைத்த நெருஞ்சி அது. இந்தப் பேச்சை இன்றோடு விட்டுவிடு என்றாள் அந்தத் தலைவி.
இந்தப் பாடல் குறுந்தொகையிலே மருதத் திணையிலே அள்ளுர் நன்முல்லையார் என்ற பெண் புலவர் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே.
என் நெஞ்சு நோகின்றது. என் நெஞ்சு நோகின்றது. வயற்புறத்திலே முதலில் சிறிய இலைகளோடு துளிர்த்து கண்ணுக்கினிய பூக்களையும் கொடுத்து விட்டு நெருஞ்சிச் செடி பின்பு முள்ளாக மாறிக் காலைக் குற்றுவது போல என் காதலனும் கண்ணுக்கு இனியவனாக நடித்து என்னைக் கரம் பிடித்துச் சில காலத்திலேயே நெஞ்சில் முள்ளாகக் குற்றிவிட்டுப் போய்விட்டான். அதனால் என் நெஞ்சம் இப்போதும் நோகின்றது என்பது இதன் பொருளாகும்.
இரா.ஞானசம்பந்தன் (கனடா).