ஏற்பது இகழ்ச்சி!
ஏற்பது இகழ்ச்சி!
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்
அது சங்கம் மருவிய காலத்து ஒருநாள் மாலை! பவளச் செங்கால் பறவையங் கானத்து குவளை மேயந்த குடகட் சேதா முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்பக் கன்று நினை குரல மன்றுவழிப் படர என்பாரே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்!
ஆம்! பவளம் போன்ற சிவந்த கால்களை உடைய பறவைகள் நிறைந்த கானகத்திலே குவளைக் கொடிகளை மேயந்த அகன்ற கண்களை உடைய கன்று ஈன்ற பசுக்கள் தங்கள் கன்றுகளை நினைத்துக் குரல் எழுப்பி நடக்க அவற்றின் முலைகளில் இருந்து சுரக்கும் பசும் பால் தெருப் புழுதியை நனைத்து அடக்கியதாம்!
தன் வீட்டு வாசல் திண்ணையிலே அமர்ந்து அந்தப் பசுக்கள் தொழுவம் நோக்கிச் செல்லும் அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளுவர். அப்பொழுது அவர் எழுதிக்கொண்டிருந்தது வறுமை காரணமாக பிறரிடம் கைநீட்டி எதையாவது வாங்குவதற்குப் பயப்படுவதாகிய இரவு அச்சம் என்ற அதிகாரம்!
பசுக்களைக் கண்டதும் அவர் மனதிலே ஒரு எண்ணம் தோன்றியது. இந்தப் பசுக்கள் யாருக்கும் தீங்கு செய்வதில்லை! அதோடு பாலையும் பொழிந்து தருகின்றன. ஆனாலும் இதிலே ஒரு பசு தண்ணீர்த் தாகத்தினாலே நிலத்தில் வீழ்ந்து உயிர் பிரிவது போலத் துடித்தால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற தருமத்துக்காக நான் யாரிடமாவது போய் அதற்குத் தாருங்கள் என்று கேட்டால் கூட அதுவும் என் நாவுக்கு கெட்ட பெயர்தான்! எனக்காகக் கேட்காவிட்டாலும் ஏதாவது தரும்படி கேட்டாலே கெட்ட பெயர் தான் அது தான் உண்மை! எதுக்காவது யாரிடம் கையேந்துவது மானம் இழக்கும் செயல்! இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை
வள்ளுவர் எழுதினார்!
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்
ஆவிற்கு – தாகத்தினால் துடித்து உயிர் விடும் நிலையிலுள்ள பசுவுக்கு: நீரென்னு இரப்பினும் – யாராவது தண்ணீர் தந்து உதவுங்கள் என்று ஒருவன் யாரிடமாவது கேட்டால் கூட: நாவிற்கு – அப்படிக் கேட்ட அவனுடைய நாக்கிற்கு: இரவின் இழிவந்தது இல் – செய்வது தருமமானாலும் இனிமேல் வேறொன்று இல்லை என்கின்ற அளவுக்கு அவமானம் வந்து சேர்ந்து விடும்
தாகத்தினால் துடித்து உயிர் விடும் நிலையிலுள்ள பசுவுக்கு யாராவது தண்ணீர் தந்து உதவுங்கள் என்று ஒருவன் யாரிடமாவது கேட்டால் கூட அப்படிக் கேட்ட அவனுடைய நாவுக்கு செய்ய நினைப்பது தருமமானாலும் இனிமேல் வேறொன்று இல்லை என்கின்ற அளவுக்கு அவமானம் வந்து சேர்ந்து விடும்!
இந்த அளவுக்குக் கடுமையாக வள்ளுவர் எந்தக் குறளையும் எழுதவில்லை! உன்னிடம் இருந்தால் செய். யாரிடமும் கைநீட்டி இரக்கப் போகாதே! நீ வாங்கத் தேவையில்லை. கேட்டாலே உன்னுடைய நாவுக்கு அவமானம் வந்து விடும் தெரிந்து கொள் என்றார் அவர்.
வள்ளுவர் முகத்தில் மகிழ்ச்சி! சொல்ல வந்த கருத்தை ஆணித் தரமாகவும் பசுமாட்டு உதாரணத்தோடும் ஈரடிக் குறளிலே அடக்கிவிட்ட பெருமிதம் அவர் கண்களில்! அப்போது அங்கே அவரின் தமக்கையார் ஒளவை வருகிறாள். கூனல் பிறை போல கையில் தடியூன்றி வந்த பாட்டி தம்பியின் அருகே அமர்கிறாள்!
அக்கா! இப்படி ஒரு குறள் எழுதியிருக்கிறேன்! பார்! இந்தக் கருத்தை இதற்கு மேலும் யாராலும் சுருக்கமாக சொல்ல முடியாது! ஏட்டுச் சுவடியை எடுத்து நீட்டினார் வள்ளுவர். வாங்கிப் பார்த்தாள் ஒளவை! தனது பொக்கை வாய் திறந்து சிரித்தாள் அந்தத் தமிழ் ஆச்சி! என்ன சொல்லியிருக்கிறாய்?
ஏற்பது இகழ்ச்சி! அதைத்தானே! ஈரடிக் குறள் இரண்டு சொற்களாக இன்னும் குறைந்து விட்டதே! கருத்து மாறாமல்! திரும்பவும் சிரித்தாள் ஒளவை! சிலையாக இருந்தார் வள்ளுவர்!