அற்ற குளமும் அறுநீர்ப் பறவையும்!

 

 

வான் நிலவு கீழறங்கி வந்து விளையாடுகின்ற மீன் திரியும் வாவியது. கொட்டிக் கொடியும் கொடி பிடிக்கும் தாமரையும் கட்டிப் பிடித்தங்கே கதைபேசும் நெய்தலுமாய் எட்டிப் பார்ப்போர்க்கு எழில்காட்டும் குளமதிலே பெட்டைப் பறவையினப் பேடுகளும் அவையோடு தொட்டுக் கதைபேசித் துள்ளும் ஆணினமும்; குட்டிச் சிவப்பும் குயில் போல இளங்கறுப்பும் தட்டில் கரைத்தெடுத்த தயிர் போன்ற வெண்மையிலே இட்டுத் தெளித்தெறிந்த இளமஞ்சள் சந்தணமாய் பட்டுச் சிறகிடையே பலவண்ணப் புள்ளிகளும் கட்டிக் கொண்டங்கே குரல் காட்டும் குஞ்சுகளும் என்று பறவைக் குடும்பங்கள் பல வாழும் நீருலகம்.


நாடு விட்டு நாடு செல்லும் நடுக்காட்டு வழியினிலே வாடி விட்ட முகம் மலர நடனமிடும் பொய்கையினைத் தேடிவந்து தான் பார்ப்பாள் அந்தத் தென்நாட்டின் தமிழ்க்கிழவி. மூதுரையின் பேராலே மூன்றுநிலத் தமிழரசை தீதகற்றிக் காப்பாற்றும் தெய்வத் திருமடந்தை ஒளவை எனும் பெயர் கொண்டாள். சுட்டபழம் வெண்டுமென்று சுவாமியிடம் கேட்டதனால் சூடுபெற்றுப் பின் வாழ்வில் கெட்டதெலாம் தீண்டாத கேடற்ற உருவத்தாள். 
கரையெங்கும் நாணலது கைகோர்த்து அரண் செய்ய அங்கு நிரை செய்து தவளையினம் நெடுந்தாளில் ஒளித்திருக்க நுரைபொங்கும் நீர்ப்பரப்பில் மீன் நடத்தும் திருக்கூத்தை நரைகொண்ட தன்தலையில் நடுங்கும் கைசாத்திப் பறவைக்குலம் இரை கொள்ள இதையெல்லாம் இறைவனவன் ஏன் படைத்தான் என்பாள் கிழவியவள். என்றாலும் பார்த்திடுவாள். இதயம் மகிழ்ந்திடுவாள்.
காலமெலாம் தாமரையும் தண்ணீரும் மீன்களுடன் கோலமிட்ட பறவைகளும் குவிந்திருந்த பொய்கையிலே ஒரு காலம் வானம் பொய்த்து வழியெல்லாம் மரம் செத்து நாணல் சரிந்து நாற்புறமும் புதர் மண்டிப் பொருந்திக் கிடந்த பொல்லாத பறவையெலாம் விருந்தைத் தேடி வேறுகுளம் ஓடிவிடப் பருந்தின் இறக்கையெனப் பழுத்துவிட்ட இலைகளுடன் வருந்தி நீருக்காய் வாழ்விழந்து தவமிருக்கும் நீர்க் கொடிகள் கண்டாள். நெடுந்தமிழின் ஆச்சியவள்.
நீரில்லைக் குளத்தில். நின்று பிடிப்பதற்கும் மீனில்லை அதனாலே பறவையெலாம் அந்த ஊரில்லை என்பதனை கிழவி உளம் கொண்டாள். பலன் கிடைத்த காலமெல்லாம் படிந்திருந்து பின்நாளில் வளமிழந்த குளம் விட்டுப் பறவையெலாம் போனாலும் நீர்க் கொடிகள் போகவில்லை. அதையும் நினைத்தாள் ஒளவையவள் கணப் போதில்.
ஆதாயம் இருந்தால் அருகிருந்து சுவைத்துவிட்டு அதிலேதும் குறைவந்தால் அகன்றுவிடும் தன்மையெலாம் அழகான உறவா அழுக்கான உறவன்றோ கூடி இருந்தவர்க்குக் குறை வந்தால் ஓடாமல் வாடி அவரோடு வாழ்ந்திருத்தல் அது தானே உறவு முறை.
பகுத்தறிவு இல்லாத பறவைகள் தான் என்றில்லை சில வகுத்துரைக்க முடியாத மானுடரும் அப்படித்தான். நல்ல இடம் என்றால் நாலுமுறை வருவார்கள். நன்மை கிடைக்கும் என்றால் நாள் முழுதும் இருப்பார்கள். கிடைக்கும் பலன் குறைந்தால் கிட்ட நெருங்கார்கள். எட்டிப் போய் விடுவார் எத்தனையோ பொய் சொல்லி. காலம் மாறும். கலைந்ததெலாம் கூடாகும். கோலம் குலைந்ததெலாம் கோபுராமாய் எழுந்துவிடும் என்பதெலாம் நினையார்கள். எழுந்தே போய்விடுவர்.
தண்ணீர் குளம் தந்த தண்பொழுதில் அழகாக கண்ணில் தெரிந்த நீர்கொடிகள் இன்றைக்கு மண்ணில் நீர்வற்றிக் குளம் கிடக்கும் போதினிலும் அகலாமல் தாமும் அதனோடு அருகிருந்து துன்பம் சுமந்து குளம் போல அழகிழந்து சாவதனைப் போலன்றோ சரியான உறவமையும். துன்பத்தில் கைவிடாத் துணையன்றோ மெய்யுறவு.
பாடவேண்டும் இதை நான் பழுதான உறவகல. ஏடு எடுத்தாள் கிழவி. எழுதினாள் இப்படித்தான்.

 

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

பொதுவாக புலவர்களும் கவிஞர்களும் ஒரு காட்சிக்கு பல உவமைகளைத் தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒளவை ஒரு உவமையிலேயே இரண்டு செய்திகளைச் சொல்லி இருக்கிறாள். காலம் காலமாக குளத்திலே தண்ணீர் இருக்கும் போது பறவைகள் வருவதும் கொடிகள் பூப்பதும் குளம் வற்றினால் பறவைகள் போய் விடுவதும் தாமரைக் கொடிகள் நீரின்றிக் காய்வதும் எல்லோரும் காணும் காட்சி தான். ஆனால் அதை உண்மை உறவுக்கும் பொய் உறவுக்கும் உவமையாக்கிக் காட்டும் சிந்தனை யாருக்கும் வரவில்லை.

ஒளவையின் எந்தப் பாடலை எடுத்துக் கொண்டாலும் சனங்களுக்கு நன்கு தெரிந்த செய்திகளையே தான் சொல்ல வரும் கருத்துக்கு உவமையாகக் கையாளும் உத்தியை அங்கே காணலாம்.

இரா.சம்பந்தன்

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.