பாடினால் என்ன தப்பு?

 

சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம் முதல் எத்தனையோ இலக்கண நூல் வரம்புகள் பாதுகாப்பைக் கொடுத்தும் தமிழ் மொழியால் வெரூஉம் என்ற சொல்லைப் பயப்படும் என்ற மாற்ற நிலையை அடைய விடாமல் தடுத்து வைத்திருக்க முடியவில்லை.

இவ்வாறு எத்தனையோ ஆயிரம் பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து புதிய சொற்கள் அந்த இடத்தை இன்றைய தமிழிலே பிடித்துக் கொண்டு விட்டன. மறைமலை அடிகள் முதல் பல தமிழ் அறிஞர்கள் தனித்தமிழிலே பேசினார்கள். எழுதிப் பார்த்தார்கள். ஆனால் இவர்களை எல்லாம் வென்று கொண்டு கால மாற்றம் எத்தனையோ புதுச் சொற்களைத் தமிழுக்குச் சுமந்து கொண்டுதான் வருகின்றது இன்றும்.

 

புதிய சொற்களைக் காலம் எங்கிருந்தும் திருடிக் கொண்டு வந்து விடவில்லை. அறிவியல் வளர்ச்சியால் வியாபாரத்; தொடர்ச்சியால்  புலம் பெயர்ந்த வேற்று மொழி உறவுகளால் தமிழ்ப் பேச்சு வழக்கிலே கலந்து கொண்டு செல்வாக்குப் பெற்றுவிட்ட சொற்களை இனித் துரத்த முடியாது என்ற நிலையில் ஏற்றுக் கொண்டு கலப்புத் திருமணம் செய்த சோடிகள் பெற்றாரிடம் வருவது போல காலம் அழைத்து வரும் போது தமிழ் விரும்பாவிட்டாலும் மவுனமாக ஏற்றுக் கொள்கின்றது. அதுவே உண்மை.

தொல்காப்பியம் படித்தவர்களுக்குத் தெரியும். தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகார முடிவிலும் தான் சொன்ன இலக்கணத்துக்கு புறநடை சொல்லுவார். சில இடங்களில் நான் சொன்ன இலக்கணம் பொருத்தம் இல்லாதது போலத் தெரியும். அங்கேயெல்லாம் உலக வழக்கை உணர்ந்து காலத்தோடு ஒட்டி இலக்கணத்தைப் பிழையின்றி முடித்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் புறநடைகள் வரும்.

செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி,

இழைத்த இலக்கணம் பிழைத்தன போல

வருவ உள எனினும், வந்தவற்று இயலான்,

திரிபு இன்றி முடித்தல் தௌ;ளியோர் கடனே.

 

( தொல்காப்பியம் – பொருளதிகாரம் – செய்யுளியல் )

 

இது புறநடை என்ற பேரால் இலக்கண ஆசிரியர்கள் காலத்தோடு செய்து கொண்ட சமாதானம் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். காலமாற்றம் அது ஏற்படுத்தும் வாழ்வியல் மாற்றம் அந்த வாழ்வு ஏற்படுத்தும் மொழியியல் மாற்றம் போன்றவற்றோடு முரண்டு பிடிக்க இயலாது என்பதைத் தொல்காப்பியர் அறிந்தே இருந்தார்.

 

இருப்பினும் புதிதாக ஏற்றுக் கொண்ட சொற்களுக்கு தன் செல்வாக்கைக் காட்ட இலக்கணம் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில நிபத்தனைகளை விதித்துப் பார்த்தது. புதிய சொற்கள் அதிக காலம் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லை. சொல்வழி கேளாதவர்களுக்க அறிவுரை எதுக்கு என்று இலக்கணங்கள் ஒதுங்கிக் கொள்ள இன்று எத்தனையோ வேற்று மொழிச் சொற்கள் தாராளமாகப் புகுந்திருக்கின்றன தமிழில்.

 

இந்தப் புது வரவால் மொழி சிதைகின்றது என்று சிலர் கூவ இல்லை இது எவ்வளவு வசதியாக இருக்கின்றது என்று பலர் நினைக்கின்றார்கள். அதனால் புதுச் சொற்கள் வலிமை பெறத் தொடங்கின. அந்த வலிமைக்கு உதாரணமாக ஐஸ்கிறீம் என்ற சொல்லையே குளிர்களி என்று மாற்றிய ஈழத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் சில தகுதிப் பட்டங்களை கேணல் பிரிகேடியர் என்று தான் கடைசிவரை விட்டுவைக்க முடிந்தது பாவனைச் சுகத்துக்காக.

இப்படியான நிலையில் ஒரு கவிஞர் வருங்காலத்தை உணர்ந்து தன் கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அப்படியே கலந்து பாடினார். அவர் ஏதோ சாதரண கவிஞர் அல்ல. சாகித்திய மண்டலப் பரிசு வென்றவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் படித்துப் புலவராக வெளிவந்தவர்! அவர் இளவாலை மயிலங்கூடலைச் சேர்ந்த புலவர் பார்வதிநாதசிவம் அவர்கள்.

நாடியைப் பார்த்தார் இல்லை

நயனத்தைப் பார்த்தார் இல்லை

மாடியைப் பார்த்த வாறே

மருந்தினை எழுதித் தந்தார்

நாடியைப் பார்த்துத் தந்தால்

நன்றென்றேன் அயலில் நிற்கும்

லேடியைப் பார்க்க வேண்டும்

லேட்இப்போ செல்செல் என்றார்

 

புலவரின் இந்தப் பாடலைப் பாருங்கள். எளிமையான தமிழ். இலக்கணம் தவறாத செய்யுள். நோயென்று போன ஒருவரின் முகத்தை வைத்தியர் திரும்பிப் பார்க்கவில்லை. அவரின் நாடி நரம்பைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை. மாடியைப் பார்த்துக் கொண்டு மருந்து எழுதிக் கொடுக்கிறார். ஏன் கை நாடியைப் பிடித்துப் பார்த்து மருந்து தர மாட்டீர்களா என்று கேட்டால் பக்கத்திலே நிற்கிற பெண்ணைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே பிந்தி விட்டது நேரம். போங்கோ என்று சொல்கிறார் இது பாடலின் பொருள்.

 

இந்தக் கவிதையிலே லேடி லேட் என்ற இரு ஆங்கிலச் சொற்களைப் புலவர் பாட்டின் இடையிலேயும் அல்ல எதுகை மோனையாகவே பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். இது பாட்டின் எளிமையைக் கூட்டுவதோடு பொருளும் தெளிவாக புரியும் வண்ணம் இருக்கின்றது. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

 

இன்னொரு பாட்டில் புலவர் சொல்லுவார்

 

அம்மியில் பலத்த ஓசை

எழுந்திட அரைப்பதாலே

மம்மியின் இதய நோய்கள்

வரவரக் கூடு தென்பார்

 

அம்மாவைப் பெரும்பான்மையான குழந்தைகள் இப்போ மம்மி என்று அழைப்பதால் தானும் அந்தச் சொற்பிரயோகத்தை அப்படியே பயன் படுத்துகிறார் புலவர். சமுதாயத்திலே அந்தச் சொல் புகுந்து விட்ட பிறகு அதை தூர வீசுவதால் என்ன பயன் என்று புலவர் நினைத்திருக்கலாம்.

 

கொழும்பு நகரில் ஒரு பொழுது என்ற கவிதையில் புலவரின் ஆங்கிலத்தைப் பாருங்கள்.

 

கல்லொடு மண்ணும் சேர்த்துக்

கடையிலே செய்த தோசை

பல்லொடு செய்த போரில்

பலத்ததோர் வெற்றி காண

மெல்லவே எழுந்து அந்த

இலைப்பொருள் எறிந்தே பிள்ளாய்

பில்லினைக் கொணர்க என்றேன்

பெற்றனன் கொடுத்தேன் வந்தேன்

 

பில்லினைக் கொணர்க. ஏன் பற்றுச் சீட்டு என்று பாட மாட்டீர்களா புலவரே என்று நாம் கேட்டால் நான் பாடுவது இருக்கட்டும். நீ பேசும் போது உன்வாயில் பற்றுச் சீட்டு என்ற தமிழ்ச் சொல்லா வருகிறது? இல்லையே. பில் என்று தானே கேட்கிறாய்? நான் அதைக் கவிதையில் பாடினால் என்ன தப்பு? இப்படித்தான் புலவரின் ஆத்மா கேட்கும்!

தமிழர் தகவல் 5.5.15 இதழில் வெளியான எனது கட்டுரை

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.