திரை இசை இரகசியம்!
தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை!
திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர் இசைக்காக விரும்புவார்கள்! இன்னும் சிலர் பாடியவர்கள் குரலுக்காக விரும்புவார்கள்! ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் மனங்களில் தான் இந்தப் பாடல்கள் வேறுபட்ட சிந்தனைகளைத் தூண்டும்! அந்தச் சிந்தனைகள் தரும் நிறைவுக்காக அவர்கள் அந்தப் பாடல்களை விரும்புவார்கள்!
கருத்து இசை குரல் என்பதையெல்லாம் கடந்து சில திரையிசைப் பாடல்களை மிகவும் அருகிலே சென்று பார்த்தால் அவை மனித உள்ளங்களையும் கடந்து உயிரோடு பேசுவதைக் காணலாம்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் மறைந்து இருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்ற பாடலை ஆயிரம் தடவைகளுக்கு கேட்டவர்களும் பார்த்து இரசித்தவர்களும் இருப்பார்கள்!
அவர்களிடம் போய் இந்தப் பாட்டிலே மோகத்திலே என்னை மூழ்க வைத்து என்று ஒரு வரி வருகின்றதே! அதற்கு பத்மினி தன் தலைக்கு மேலே கையை உயர்த்தி மோகம் என்ற உணர்வுக்கு ஒரு அபிநயம் பிடித்துக் காட்டுவார்! அதைக் கவனித்தீர்களா? என்று கேட்டால் அதிகமானவர்கள் கையைப் பிசைவார்கள்! கவனித்திருக்க மாட்டார்கள்!
அது பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல கலையுள்ளம் படைத்தவர்கள் கண்களுக்குத் தெரியும் அகக் காட்சி என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சிறந்த உதாரணமாகும்!
தமிழிலே இருந்து இலக்கணத்திலே பேசப்பட்டு இன்று முற்றிலும் வழக்கொழிந்து போன சமாச்சாரம் அளபெடை என்பது! அதாவது எழுத்துக்கள் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவிலும் பார்க்க கூடி ஒலித்தல் தான் அளபெடை என்று இலகுவாக சொல்லி விடலாம்! அதன் வரி வடிவத்தைத் திருக்குறளில் இன்றும் காணலாம்!
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கு
எடுப்பதூஉம் எல்லாம் மழை
கொடுப்பது எடுப்பது என்ற இரண்டு சொற்களும் ஓசைக்காக கொடுப்பதூஉம் எடுப்பதூஉம் என்று நீண்டு அளபெடுத்து வருவதால் அளபெடை! இந்த அளபெடையையின் சுவையை திரையிசைப் பாடல்களில் எங்காவது கேட்டு உணர்ந்து இருக்கிறீர்களா? அது அளபெடை என்று தெரிந்து இரசித்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் பாசம் என்ற படத்திலே ஸ்ரீநிவாஸ் சுசீலா பாடிய பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு என்ற பாடலைக் கேளுங்கள்! வரிக்கு வரி சொற்கள் அளபெடுத்து சிலிர்க்கின்றன!
காஆர் வண்ணக் கூந்தல் தொட்டு தேஏர் வண்ணண மேனி தொட்டு
பூஉவண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
என்று சுசீலா அளபெடுத்து உச்சரிப்பதும் அதற்கு இணையாக ஸ்ரீநிவாஸ்
நாஅள் கண்டு மாலையிட்டு நாஅன் உன்னைத் தோளில் வைத்து
ஊஉர்வலம் போய்வர ஆசையில்லையா
என்று பாடுவதும் கேளுங்கள்! அதுவும் தனிமையில் அமைதியாக இருந்து கேளுங்கள்! அப்போது இனம் புரியாத இன்னொரு உலகத்துக்குச் சென்று வருவீர்கள்!
இந்தப் பாடலை எழுதிய கண்ணதாசன் சொற்களை அளபெடுத்து எழுதியது கிடையாது! அவர் வெறுமனே கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு என்று சாதாரணமாகத்தான் எழுதினார்! ஆனால் விஸ்வநாதன் காஅர் வண்ணக் கூந்தல் என்று அளபெடுக்க வைத்து இசையமைத்தார்! இது திரை இசையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியம்!
திரை இசையில் சொற்கள் அளபெடுத்துத் தான் வரும் என்பதில்லை! தமக்கு உரிய ஒலி அளவில் நின்று குறைந்தும் வரும்! அதைத் தமிழ் இலக்கணம் குறுக்கங்கள் என்று சொல்லும்! ஐ குறைந்து வந்தால் ஐகார குறுக்கம் ம குறைந்து ஒலித்தால் மகரக் குறுக்கம்! அது போல பகர குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்றெல்லாம் தமிழில் இருந்து வழக்கு ஒழிந்து அவை போய்விட்டன!
இசைக்காக குறுக்கங்களோடு விளையாடும் ஒரு இனிய குரல் சுசீலாவினுடையது! ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் சாக வரம் பெற்று அந்தக் குரல் நிற்கின்றது என்றால் அதற்கு இனிமை மட்டும் காரணம் அல்ல. இலக்கணமும் காரணம்! எழுத்துக்களை இசைக்காக தான் விரும்பும் இடத்தில் நிறுத்தும் கலையை சுசீலா நன்றாக உணர்ந்திருந்தார்!
பேசும் போது நிறுத்துவது இலகு! ஆனால் பாடும் போது? பாடிக்கொண்டு இருக்கும் போது திடீரென ஒலி அளவை சொல்லுக்கு அல்ல அதில் உள்ள எழுத்துக்குக் குறைப்பது என்பது எல்லோராலும் செய்ய முடியாதது! அதைச் சுசீலா சாதாரணமாகச் செய்தார்! அதனால் நிலைத்து நின்றார்!
கர்ணன் படத்திலே கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்ற சுசீலாவின் பாடலை பலரும் பலமுறை கேட்டு இருக்கின்றோம்! அதிலே இந்தக் குறுக்கங்களைச் செய்து காட்டுவார் சுசீலா! எப்படி?
மணிகொண்ட சரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்! என்ற இந்த வரியை இரண்டு முறை அவர் பாடுவார்! முதல் முறை பாடும் போது வெடிக்கும் என்ற சொல்லின் இறுதியில் வரும் ம் என்ற எழுத்து ம் என்று உச்சரிக்கப்படாமல் வெடிக்குங் என்ற சத்தம் வருமாறு மகரக் குறுக்கமாக முழுமை பெறாமல் வரும்! உடனேயே திரும்ப அதே வரி வரும் போது வெடிக்கும் என்று அறுத்துறுத்து ம் முழுச் சத்தத்தோடு முற்றி வரும்! கேட்டுப் பாருங்கள் இந்த இரகசியத்தை! மிகவும் நுண்ணிய ஒலி வேறுபாடு உயிரோட்டமான இசையாகி விடும்!
அது போல அதே பாட்டில் இனமென்ன குணமென்ன குலமென்ன அறியேன்! திரும்பவும் குலமென்ன அறியேன்! அறியேன் என்பதில் வரும் இறுதி ன் முதலில் தேய்ந்து வரும்! பின்பு முழமையாக வரும்! இப்படி எத்தனையோ இலக்கண விடயங்களைச் செதுக்கித் தான் திரை இசை உருவாக்கப் படுகின்றது!
அம்பிகாபதி படத்தில் ஒரு சொல் இசைக்காக பல துண்டுகளாக வெட்டப்பட்டு வருவதும் இன்னொரு திரை இரகசியம்! வாடா மலரே அருள் தேனே என்று இராமநாதன் முகாரி இராகத்தில் இசையமைக்க பாணுமதியும் சௌந்தரராஜனும் பாடினார்கள்! எப்படி?
தாரணி வணங்கும் மன்னன் தனிப்பெரும் தேனே என்ற வாக்கியத்தை தா- ர- ணி- வ-ண-ங்- கு- ம் என்று சௌந்தரராஜன் உடைக்க பாணுமதி காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி என்ற வரியை கா-வி-ய-ப்-பு-ல-வ-ரெ-ல்-லா-ம் என்று தானும் உடைத்து எறிவார்! கூர்ந்து கவனித்தால் ஒவ்வாரு எழுத்துக்கும் இடையில் சற்று இடைவெளி விட்டு இந்தப் பாடல் பாடப்பட்டிருப்பதைக் காணலாம்!
குரல் இசை கருத்து காட்சி இந்த நான்கையும் கடந்த இன்னொன்று ஒவ்வாரு திரை இசைப் பாடல்களிலும் மறைந்து கிடக்கின்றது! அது நயம்! அதைக் கண்டு பிடித்து இரசியுங்கள்! மனம் மிகவும் மகிழ்ச்சி அடையும்!