பெரிய புராணத்தில் ஒரு வழக்கு!

உடனே சுந்தரர் ஐயனே நான் தப்புச் செய்துவிட்டேன்! பூமிக்கு வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்! அதன்படி மணப்பந்தலிலே கிழ அந்தணனாக வந்து இறைவன் அடிமை ஓலையைக் காட்டி தடுத்து ஆட்கொண்டார் என்பதெல்லாம் நாம் படித்துப்; புளித்துப் போன பழைய கதைகள்!
எனினும் இந்தக் கதையிலே மிக முக்கியமான ஒரு சிவில் வழக்கு துல்லியமாக ஆராயப்பட்டு நீதிபதிகளாக ஊர்ப் பெரியவர்களே இருந்து தீர்த்து வைக்கப்பட்ட வரலாறு ஒன்று பக்தி மணலுக்குள் மறைந்து கிடக்கும் செய்தியை பலரும் அறிந்திருக்கவில்லை!இன்றைய சட்டப் புத்தகங்களும் வரையறைகளும் தோன்றுவதற்கு முன்பே அம்பலம் என்கின்ற கோவில் வெளி மண்டபத்திலே பொழுது போக்கக் கூடியிருக்கும் முதியவர்கள் ஒரு அடிமை வழக்கை எப்படி விசாரித்தார்கள் ! எதையெதையெல்லாம் ஆவணமாகக் கேட்டார்கள் ! எதையெல்லாம் சாட்சியாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை எல்லாம் சமூக இலக்கியமாக எழுதாமல் சமய இலக்கியமாக சேக்கிழார் பாடிவிட்டுப் போனதால் அதன் மதிப்பு எமக்குத் தெரியவில்லை!
நாம் சேக்கிழாரையும் இறைவனையும் சுந்தரரையும் விட்டு விடுவோம். ஒரு இளைஞன் கல்யாணம் கட்ட இருந்த மணப்பந்தலிலே ஒரு முதியவர் வந்து தம்பி உன் பரம்பரையே எனக்கு தொண்டு செய்யும் என்று உன் தாத்தா என்னோடு ஒப்பந்தம் போட்டு இருக்கின்றார். அதனாலே உன்னை எனக்குத் தேவை! நீ திருமணம் செய்து திசை மாறி போக முடியாது என்று தடுக்கிறார்!ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமை என்பது எங்கும் இல்லாத விடயம்! என் கல்யாண வேளையிலே இங்கு வந்து மடைத்தனமாக இந்தக் கிழவனார் குழப்பம் செய்கின்றார் என்று கோவிக்கின்றான் இளைஞன்! அவரிடம் இருந்த அடிமைப் பத்திரத்தையும் பறித்துக் கிழித்து விடுகின்றான்! வன்முறை தலையெடுக்கின்றது!
முதியவரும் விடுதாக இல்லை! பையன் இப்படிச் செய்வான் என்று தெரிந்து தான் போட்டோ கொப்பியைக் காட்டினேன்! நல்ல வேளை அசல் ஆவணம் பத்திரமாக என்னிடம் இருக்கின்றது என்கிறார்! வழக்கு திருவெண்ணைநல்லூர் பெரியவர்களிடம் வருகின்றது! முதியவர் வாதி! இளைஞன் பிரதிவாதி!
முதியவரே! இந்த வழக்கிலே உமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் ஆட்சி அல்லது காட்சி அல்லது ஆவணம் என்ற மூன்றில் ஒன்றை எமக்கு நீர் காட்ட வேண்டும் என்கிறார்கள் நீதிபதிகள்!
இந்த அடிமைப் பத்திரத்தை எழுதிய தாத்தா உயிரோடு இருந்து அவரை அடிமையாக நீர் ஆட்சி செய்வதை எமக்கு காட்ட வேண்டும்! அல்லது அவர் அடிமையாக இருந்ததற்கு யாராவது சாட்சி சொல்ல வேண்டும்! அல்லது ஏதாவது ஆவணப்பத்திரம் வேண்டும்!ஆவணம் தருகிறேன் என்றார் முதியவர்!
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன ‘முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன்’ என்றனன் மாயை வல்லான்!
ஆவணத்திலே அசைக்க முடியாத வரிகள்! சேக்கிழார் முதலமைச்சராக இருந்தவர் அல்லவா? சட்ட நுணுக்கங்களால் தோற்கடிக்க முடியாத உயில் ஒன்றை எழுதினார். இன்ன இடத்திலே இன்ன குலத்திலே பிறந்த இன்னாராகிய நான் இந்த ஊரிலே இந்த குலத்து பெரியவருக்கு நானும் என் வம்சமும் அடிமை செய்ய இசைந்து எழுதிக் கொடுக்கும் அடிமைப் பத்திரம் இது. சாட்சி கையெழுத்து!
அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.
நீதிபதிகள் விடவில்லை! இது தாத்தாவின் எழுத்துத் தானோ என்று தாத்தா வீட்டில் இருந்து அவர் எழுதிய பழைய ஓலைகளை எடுத்து வந்து ஆவண எழுத்துக்களோடு ஒப்பிட்டு சரிபார்க்கிறார்கள்! சரியாக இருந்ததால் முதியவருக்கு வெற்றி என்று அறிவித்து தீர்ப்பு வழங்குகிறார்கள்!
திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
‘இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை’ என்றார்
வழக்கு முடிந்து புறப்பட இருந்த முதியவரை நீதிபதிகள் திரும்பவும் அழைக்கின்றார்கள்! முதியவரே! உங்கள் ஆவணத்திலே நீங்களும் இந்த ஊர் என்று போடப்பட்டிருக்கிறதே! இந்த ஊரிலே நீர் வாழ்வதற்கு என்ன ஆதாரம்! எங்கே உங்கள் வீடு? எவ்வளவு காலமாக அதில் வாழ்கின்றீர்? இது என்ன பொய் முகவரியா? உங்களை யாரும் இதுக்கு முதல் இந்த ஊரிலே கண்டதாகத் தெரியவில்லையே! உங்கள் வீட்டைக் காண்பியுங்கள்! என்கிறார்கள்!
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
‘அருமுனி! நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில்
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக’ என்றார்.
முதியவர் அதையும் நிருபித்துத் தான் வழக்கிலே வெற்றியடைய முடிந்தது என்பார் சேக்கிழார்!
பன்னிரண்டாம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட இந்தச் செய்திகளில் முக்கிய ஆவணங்கள் இன்றைய போட்டோ கொப்பிகள் போன்று ஏதோ ஒரு வகையில் பிரதி எடுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டிருக்கின்றன! ஒரு எழுத்தை இன்னொரு எழுத்தோடு ஒப்பு நோக்கி ஆராயும் சிந்தனைத் திறன் இருந்திருக்கின்றது! வீட்டு முகவரிகளின் நம்பகத் தன்மை பரிசோதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த காலமும் உறுதி செய்யப்பட்ட வரலாறும் மனையும் நீடு வாழ்க்கையும் என்ற செய்யுள் வரிகளால் பதியப்பட்டிருக்கின்றது!
இவையெல்லாம் இன்றைய சட்ட வளர்ச்சிகள் உலகம் முழுவதும் செம்மைப்படுத்தப்பட முன்னரே தமிழர்களால் எங்கள் மூதாதையர்களால் கடைப்பிடிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகள்! இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சுந்தரர் இறைவனை பித்தா என்று ஏசினார்! பின்பு பித்தா பிறை சூடி என்று தேவாரம் பாடினார் என்ற அளவிலேயே எமது அறிவைக் குறுக்கிக் கொண்டு வாழ்ந்து மடிகின்றது தமிழ்ச் சமுதாயம்!
5.6.2014 தமிழர் தகவல் இதழில் வெளிவந்த எனது கட்டுரை!