வாசிக்க முடியாத கவிதை!
வாசிக்க முடியாத கவிதை!
நாம் மணம் முடித்து
இத்தனை ஆண்டுகள் கடந்தும்
உன் பழைய காதலியை நினைத்து…
நீ எழுதும் கவிதைகள்
மிகவும் அழகாகத்தான் இருக்கின்றன!
எதுவித அச்சமும் இன்றி
நீ விரும்பும் போது
விரும்பியதை எல்லாம்
பதிவு செய்துவிடுகிறாய்
இவள் என்னசெய்துவிட முடியும்
என்ற இறுமாப்போடு!
ஆனால் காதல்
யாருக்கும் தனியுடமை இல்லையே!
நானும் என்காதலை இழந்துதான்
உன்னைக் கரம் பிடித்தேன்!
அப்புறம் ஏன் உனைப்போல
காதல் கவிதைகள் எழுதுவதில்லை
என்று கேட்கின்றாயா?
நானும் என் பழைய காதலைப் பற்றிய
நினைவு வரும்போதெல்லாம்
என் வேதனைகளை வலிகளைக்
கவிதைகளாக எழுதிக் கொண்டுதான்
இருக்கின்றேன்!
அவை உன் கவிதைகளை விட
அழகானவை! ஆழமானவை!
சமைக்கும் போது குளிக்கும் போது
சாமி கும்பிடும் போதும்
எழுதியிருக்கிறேன்! ஏன்
உனக்குப் பக்கத்தில் இருந்து கூட
எழுதியிருக்கிறேன்!
உன் அருகே உறங்கும் போதும்
எழுதியிருக்கிறேன்!
குழந்தைகளைத் தாலாட்டும் போதும்
எழுதியிருக்கிறேன்!
உன்னை விட அதிகமாக!
ஆனால் உன் கவிதைகள் போல
அவற்றை யாரும் வாசிக்க முடியாது!
ஏனென்று கேட்கிறாயா?
பெருமூச்சை யாரால்
வாசிக்க முடியும்?
இரா.சம்பந்தன்