மண்ணாங்கட்டியும் பலாச்சருகும் – உருவகக் கதை

ஒரு காட்டில் பெரிய பலா மரம் ஒன்று நின்றது. அதன் முதிர்ந்த இலைகள் பல சருகாக கீழே விழுந்து கிடந்தன. அந்தச் சருகுகளுக்குப் பக்கத்தில் சில மண் கட்டிகளும் கிடந்தன.

அதில் ஓரு மண் கட்டி பலாச்சருகு ஒன்றுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டது. இந்த நட்பை மற்ற மண்கட்டிகளும் பலாச்சருகுகளும் கேலி செய்தன. போயும் போயும் வயது போய் விழுந்து கிடக்கும் பலாச்சருகுடனா உனக்குச் சினேகிதம்? இதனால் என்ன பயன்? என்று மற்ற மண்ணாங்கட்டிகள் கேட்டன.

நாங்கள் எத்தனையோ பேர் இருக்க இனம் மாறி மண்ணாங்கட்டியுடன் சினேகிதம் வைக்கிறாயே உனக்கு மூளை இல்லையா? இனப்பற்று இல்லாத துரோகி என்று பலாச்சருகுகளும் சத்தம் போட்டன.

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மண்ணாங்கட்டியும் பலாச்சருகும் நட்பை வளர்த்து வந்தன.

ஒரு நாள் காட்டிலே பெரிய புயல் வீசியது. வேகமாக வீசிய காற்று மரங்களை முறித்தது. சருகுகளை வாரியள்ளிச் சுழற்றி எறிந்தது. அப்போது நண்பனைக் காப்பாற்றும் முயற்சியில் ஒன்றுக்கும் உதவாத மண்ணாங்கட்டி இறங்கியது. அது மெதுவாக உருண்டு போய் நண்பனான பலாச்சருகின் மேல் இருந்தது. புயலால் அந்தச் சருகை மட்டும் அசைக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் புயல் ஓய்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மழை பெருகியது. எல்லா மண் கட்டிகளும் கரையத் தொடங்கின. புயலில் இருந்து தன்னைக் காப்பாற்றிய நண்பனைப் பாதுகாக்கும் முயற்சியை முதிந்து பயனற்ற பலாச்சருகு எடுத்தது. சிரமப்பட்டு எழுந்து மண்ணாங்கட்டிக்கு மேல் ஏறி கூரை போல இருந்தது. வெள்ளத்தில் எல்லா மண்கட்டிகளும் கரைந்தும் அந்த மண்ணாங்கட்டி மட்டும் தப்பியது.

அப்போது வயது முதிர்ந்த பலாச்சருகு சொன்னது

யாருக்கு கீழே இருக்கிறோம் யாரை ஆதரிக்கிறோம் என்பதல்ல முக்கியம். ஆபத்து வரும் போது எப்படித் தப்பிக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.