பெரியபுராணத்தில் தமிழ்ச் சுவை
சிறியவர் பெரியவரான கதை
குயவர் குலத்திலே பிறந்த திருநீலகண்டர் பானை சட்டி செய்யும் தொழிலோடு சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து உண்பதற்கு திருவோடு என்கின்ற மண் பாத்திரத்தையும் இலவசமாகச் செய்து கொடுத்து வந்தார்.
சிவனிடம் பற்று சிவடியாரிடம் மிகுந்த பற்று என்று வாழ்ந்தாலும் பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீனமுள்ளவராக இருந்தார் அந்தக் குயவர்.
அளவிலா மரபின் வாழ்க்கை மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளம் திங்கட் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க ஓடளித்து ஒழுகும் நாளில்
இளமைமீ தூர இன்பத் துறையினில் எளியர் ஆனார்
ஒரு முறை திருமகளை விட அழகான மனைவி வீட்டில் இருக்க அவளை விடுத்து விலைமகள் வீடு சென்று வந்த அவரை இனித் திருத்த முடியாது என்று கண்ட மனைவி தனது கடமைகள் எல்லாவற்றையும் குறைவின்றி அவருக்கு செய்து படுக்கையில் சேர்ந்து உறங்குவதற்கு மட்டும் மறுத்து வந்தார்.
ஆனதங் கேள்வர் அங்கோர் பரத்தைபால் அணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடனுறைவு இசையார் ஆனார்
தேனலர் கமலப் போதின் திருவினும் உருவம் மிக்கார்
மனைவியின் கோபத்தை நீக்குவதற்காக அருகிலே சென்ற குயவர் அவளிடம் அன்பான வார்த்தைகளால் பேசி மன்றாடிக் கட்டி அணைக்க முற்பட்ட போது மனைவி திருநீல கண்ட இறைவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நீர் என்னைத் தொடக்சுகூடாது என்றார்.
மூண்டவப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல் பொற்கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திருநீல கண்டம் என்றார்
திருநீல கண்ட இறைவன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த குயவனார் மனைவி அந்தக் கடவுள் பெயராலேயே மனைவி தொடக்கூடாது என்று சத்தியம் செய்த போது அந்தக் கணமே அவளை விட்டு விலகி எழுந்து உன்னை மட்டுமல்ல இனி எந்தப் பெண்ணையும் மனத்தால் கூடத் தீண்ட மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
இது வரைக்கும் அவரை குயவர் இளையவர் அன்பர் என்று குறிப்பிட்டு வந்த சேக்கிழார் பெரியவர் என்ற சொல்லாலே முதன் முறையாக அழைத்தார். குறைகள் நீங்கிக் குயவனார் நல்லவர் என்று ஆகிவிட்ட போது சேக்கிழார் தனது சொல்லையும் பெரியவர் என்று மாற்றிக் கொண்டார்.
ஆதியார் நீலகண்டத்து அளவுதாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் எந்தன் மனத்தினும் தீண்டேன் என்றார்
எத்தனை பேருக்கு இந்தத் தமிழ்ச் சிறப்பை சுவைக்கத் தெரியுமோ நான் அறியேன். ஆனால் நான் பலமுறை அனுபவித்தேன் ஒரு சொல் பெரியவர் பெரியவர்! அது திருநீல கண்ட நாயனார் வரலாற்றையே தனக்குள் அடக்கி நிற்கின்றது.