புதிய புறநானூறு!
முதுமையின் காரணம் இதுதான்!
யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல்
காண்பது ஏனென வினவுவீர் ஆயின்
நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த
வீட்டையும் இழந்தேன் கொண்டவள் மதியாப்
பேச்சையும் கேட்டேன் பின்புறம் குத்திய
ஆட்களை நானும் அதிகமாய்க் கண்டேன்
பிள்ளைகள் உதவாப் பிழையையும் அவர்கள்
நல்லவ ராக வாழ்ந்திடா நிலையொடு
தள்ளியே சென்ற உறவுகள் பேசிய
தாங்கிட முடியாக் கதைகளைக் கேட்டேன்
கல்லொடு மண்ணணும் காண்பதன் முன்னே
நல்நிலை பெற்றவென் தாய்மொழி தமிழைக்
செல்லாக் காசெனப் புலம்பெயர் நாட்டில்
செலுத்தவே முடியாத் சிறுமையும் கண்டு
புல்லெனக் காய்ந்து புறநிலம் இருந்தேன்
எல்லோ ரோடும் பேசுதல் தவிர்த்தேன்
தனிமையும் கவலையும் என்துணை யாகிட
இனியென்ன வாழ்வு எனக்கென நினைத்தே
பொல்லா முதுமை புகுவதன் முன்னே
வில்போல் கூனி விழுந்தனன் யானே!