பிழைவேண்டாம்
பிழைவேண்டாம்
தெருவிளக்கு ஒளிகொடுக்கும் இரவு நேரம்
தேவதையே அண்ணனுக்குப் பயந்து செத்தாய்!
ஒருவகுப்பில் படித்திட்ட போதும் அன்று
உன்மனதில் அதிபருக்குப் பயந்து செத்தாய்!
கருவறையைக் கோயிலிலே சுற்றும் போது
கண்ணாலே அம்மாவைக் காட்டிச் செத்தாய்!
தருகடிதம் வாங்காமல் அப்பா என்றே
தலைகுனிந்து கண்கலங்கி அழுது செத்தாய்!
திருமகளே செத்ததெலாம் போதும் நீதான்
திருடனைப்போல் பயந்ததுவும் போதும் என்றே
இருவிழியும் உனைத்தேடி அலைந்த போதும்
இருக்கின்றேன் காணாமல் கணவன் என்று
பெருமையுறக் கிடைத்தார்க்கும் பயந்து சாகும்
பிழைவேண்டாம் உன்வாழ்வில் சரியோ அன்பே!