தொல்காப்பியப் புற நடையும் இக்காலத் தமிழ் நடையும்!
காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு வரும் அவர்கள் என்ற சொல் பன்மைப் பொருளில் வரவில்லை. கலாம் என்ற ஒருவரையே குறிக்கின்றது.
முன்பு அமைச்சர்கள் பலர் வந்திருந்தனர் என்று எழுதிய வழக்கு மறைந்து இன்று பல அமைச்சர்கள் வந்திருந்தனர் என்று எழுதுகின்றோம். இங்கே அமைச்சர்கள் என்ற உயர் திணையோடு பல என்ற அஃறிணப் பலவின் பால் கலந்து வருகின்றது. இந்த மாற்றம் தேவார காலத்திலேயே தொடங்கி விட்டது.
இனி எண்ணுப் பெயர்களைப் பார்த்தால் மூன்று மாடுகள் மூன்று மேசைகள் என்று எழுதுவதைப் போலவே மூன்று மனிதர்கள் இரண்டு குற்றவாளிகள் ஆறு இராணுவத்தினர் என்று தயங்காமல் எழுதுகின்றோம். இதையெல்லாம் மனிதர்கள் மூவர் குற்றவாளிகள் இருவர் என்று என்று எழுதினால் தான் சரி என்று அடம்பிடிக்கும் பழைய இலக்கணம்.
அதை எழுதியது நான் அல்ல என்று எழுதினால் பிழை நான் அல்லேன் என்று எழுதுங்கள் என்று சொன்னால் இன்றைய தமிழ் சிரிக்கும்! அதுபோல க் என்ற மெய்யெழுத்து கடைசியில் வராது என்பது பழைய கதை. இப்போ அசோக் குணவர்தனா என்று க் இறுதியில் வர எழுதுகின்றோம். முன்பு ப் என்ற மெய் தனித்து முதலில் வராது. இன்று ப்ரதீபன் என்று எழுதுகின்றோம்.
இன்னொன்று நான்தான் சுட்டேன் அவன்தான் எடுத்தான் என்னதான் செய்ய என்பதெல்லாம் பரவாயில்லை. தான்தான் எழுதினாளாம் என்கிறோமே இதுக்கு இலக்கணம் என்ன? ரயில் ஓடாது சரி ரயில்கள் ஓடாது வகுப்புகள் நடக்காது என்று இன்று எழுதுகிறோமே இது எந்த இலக்கணத்தைச் சார்ந்தது?
தமிழிலே இன்று த என்ற எழுத்தை எடுத்தால் தொண்டு என்ற சொல்லிலே த என்ற உச்சரிப்புக்கும் தொளாயிரம் என்பதிலே வரும் த என்ற உச்சரிப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தொண்டு வ சத்தத்தோடும் தொயாயிரம் ன சத்தத்தோடும் உச்சரிக்கப்படுகின்றன.
எந்தத் தமிழ் விற்பன்னர்களாலும் க என்ற ஆங்கில எழுத்தின் உச்சரிப்பை எந்தத் தமிழ் எழுத்துக்களை ஒன்று கூட்டியும் அதே ஓசையைத் தமிழில் கொண்டுவந்துவிட முடியாது. எனவே தான் சுப்பிரமணிய பாரதியார் வெளிநாட்டவர்கள் பெயர்களையும் ஊர்களையும் அதே உச்சரிப்போடு தமிழுக்குக் கொண்டுவர தமிழ் எழுத்துக்கள் போதவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
இக்காலக் கவியுலகம் கூட பழைய யாப்பு இலக்கணத்தையெல்லாம் தாங்கள் சொல்ல வரும் செய்திக்கும் உணர்வுக்கும் தடையானது என்று கூறிப் புறக்கணித்து விட்டது.
இப்படிப் பல வழிகளாலும் செல்லாத காசாகி விட்ட பழைய இலக்கண நூல்களும் நியதிகளும் இன்று தமிழுக்குச் சுமை போல உணரப்படும் போக்கு மலிந்து காணப்படுகின்றது. தமிழுக்குப் புதிய இலக்கண நூல் ஒன்று தேவை என்னும் குரல் பல மட்டத்திலும் உரத்துக் கேட்கத் தொடங்கியுள்ளது.
இப்படி ஒரு நிலை ஒருநாள் ஏற்படும் என்பது பழைய இலக்கண வாதிகளுக்குத் தெரியுமா? குறிப்பாக தொல்காப்பியருக்குத் தெரியுமா என்று கேட்டால் ஆம்! தொல்காப்பியருக்கு அது தெரிந்து தான் இருந்தது என்பது மட்டுமல்ல அதற்கான தீர்வு என்னவென்றும் அவருக்குத் தெரிந்து இருந்தது என்பது மிகவும் ஆச்சரிப்பட வைக்கும் செய்தியாகும். அந்தத் தீர்வுதான் அவர் தன் இலக்கண நியதிகளுக்குப் பின்னால் எழுதி வைத்த விதிவிலக்குகள் என்று கூறப்படும் புறநடைகள்.
எனவே புதிய தமிழ் இலக்கணம் அந்த மனிதரின் விதி விலக்குகளில் இருந்து தோற்றம் பெற்றால் ஒழிய வேறு எந்தத் தனித்துவமானதாகத் தோன்றினாலும் அதில் முழுமை இருக்காது. ஏனெலில் தான் வகுத்த தமிழ் இலக்கணம் கால மாற்றத்தால் பயனின்றிப் போகாமல் எதிர்கால உலக வழக்கோடு எப்படி இணைக்கப்பட வேண்டும் என்று அவர் நூல் வழிகாட்டிச் செல்கின்றது.
எழுத்து சொல் பொருள் என்று பிரிக்கப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து அதிகாரத்துப் புறநடை சொல்லும் செய்தி இது.
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்,
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும்,
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்,
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்,
நன் மதி நாட்டத்து! என்மனார் புலவர்.
(தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்)
இவ்வதிகாரத்து விபரித்து சொல்லப்படட்ன அல்லாதனவாய்ச் செய்யுளின்கண் திரிந்து முடிவனவும், இருவகை வழக்கின் கண்ணும் வழங்குமிடத்தான் மருவித் திரிவனவும், இவ்வதிகாரத்துக் கூறிய இலக்கண மரபினின்று வேறுபடக்காணின் அவற்றை நல்லளவையாகிய ஆராய்ச்சியான் வழக்கு நடக்குமிடத்தை உணர்ந்து, கூறப்பெற்ற இலக்கண நெறியொடு பொருந்த நடத்துக என்று கூறுவர் புலவர் என்பது இதன் பொருள்.
இங்கே தான் எழுதிய எழுத்து இலக்கணம் ழுழுவதும் பொருந்தாக் காலமொன்று வரும். அப்போதெல்லாம் உலக நடையறிந்து புதியதையும் நான் சொன்னவற்றையும் ஆசிரியர்கள் ஆராயந்து கற்பியுங்கள் என்றால் தொல்காப்பியம் எதிர்காலத்துக்கும் வழி விட்டுத்தானே எழுதப்பட்டிருக்கின்றது.
இனிச் சொல் அதிகாரத்துப் புறநடையைப் பார்த்தால் அது பின்வருமாறு காணப்படுகின்றது.
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
சொல் வரைந்து அறிய, பிரித்தனர் காட்டல்!
(தொல்காப்பியம் – சொல்லதிகாரம்)
செய்யுளிடத்தனவாயும் வழக்கிடத்தனவாயும் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொற்களையெல்லாம் பல்வேறு பட்ட செய்கைகளான் எழுத்திலக்கண முறைமை பிறழாமல், உரைப்போர் அச்சொற்களை வரையறைப்படுத்து உணருமாறு அவற்றின் இலக்கணக் கூறுகளை வகைபடப்
பிரித்து எடுத்துக் காட்டுக.
இங்கே புதிதாகச் சேர்க்கப்பட வேண்டியவை ஏதும் இருந்தால் அதைச் செய்யப் போகின்றவன் எனது இலக்கணத்தோடு முரண்படாமல் செய்து கொள்க என்கிறார் தொல்காப்பியர். இதற்கு மேலும் அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்று புதிய இலக்கண வாதிகள் எதிர்பார்க்கிறார்கள்?
இறுதியாக செய்யுள் இலக்கணத்தில் வெளிப்படையாகவே தொல்காப்பியர் ஒன்றைச் சொல்லுவார்.
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி,
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும், வந்தவற்று இயலான்
திரிபு இன்றி முடித்தல் தௌ;ளியோர் கடனே.
(தொல்காப்பியம் – பொருளதிகாரம் – செய்யுளியல்)
செய்யுள் மரபுகளை எல்லாம் ஆராய்ந்து நான் இயற்றிய செய்யுள் இலக்கணத்தோடு முரண்பட்டு பிழையானது என்று எண்ணக் கூடியதாக எதிர்காலத்தில் பாடல்கள் தோன்றும். அவற்றையும் என் இலக்கணத்தோடு மாறுபடாமல் சேர்த்து உரைக்க வேண்டியது பின்னால் வரப் போகும் தமிழ் அறிஞர்கள் கடமையாகும்.
இப்படிச் சொன்ன பழைய இலக்கண வாதியை தன் மொழியை அதன் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவை அதற்காக தான் எழுதிய எழுதிய இலக்கணமே முழுவதும் பொருந்தாத தமிழ் உலகம் ஒன்று தோன்றும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு விதி விலக்குகளை புறநடை என்று காட்டிச் சென்ற மேதையை நாம் குறை சொல்வோமானால் அது எம் மொழிக்குச் செய்யும் மிகப்பெரிய தவறாகவே முடியும்!
தமிழர் தகவல் 25வது ஆண்டுவிழா (7.2.2016) மலரில் வெளியான கட்டுரை