திருக்குறள் காட்டும் காதல்!

திருக்குறளிலே இந்தக் காட்சி வருகின்றது. அவர்கள் நீண்ட காலம் காதலித்து மணந்து கொண்டவர்கள். பணம் படைத்தவர்களும் அல்ல. உழவு அவர்களின் தொழில். அவன் மீது அவளும் அவள் மீது அவனும் மிகுந்த அன்புடையவர்கள். அன்று வயல் வேலைகளை முடித்துக் கொண்டு அவன் வீடு வருகின்றான். வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவளும் அவனை எதிர் கொள்கின்றாள்.

அவள் முகத்திலே வழமையான சிரிப்பு இல்லை. எதுவும் பேசாமல் உணவு பரிமாறுகிறாள். அவன் உண்டபின் விளக்கை அணைக்காமலேயே பாயில் சரிந்து விடுகிறாள் அவள். அவள் மனத்தில் ஏதோ கோபம் இருக்கின்றது என்று தெரிகின்றது அவனுக்கு. ஆனால் அது எதற்காக என்று அவனுக்கு விளங்கவில்லை.

மெதுவாக அவள் பாதங்களைத் தொட்டான் அவன். துள்ளி எழுந்தவள் கால்களை இழுத்துக் கொண்டு அவனை நேரே பார்த்தாள். இப்போது அவள் கண்களில் முத்து முத்தாகக் கண்ணீர் அரும்பி முத்துக் கட்டியிருந்தது.. துடித்துப் போனான் அவன். ஏன் ஏனென்று கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான்.

காலையிலே வயலுக்குப் போகும் போது என்ன சொல்லிவிட்டுப் போனீர்கள் இந்தப் பிறப்பிலே என்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று சொன்னீர்களா இல்லையா? என்றாள் அவள். இப்பவும் தான் சொல்கின்றேன் இந்தப் பிறப்பிலே உன்னை விட்டுப் பிரியமாட்டேன். இதிலே என்ன தவறு இருக்கு நீ ஏன் அழுகிறாய் அவனும் சிரித்துக் கொண்டே கேட்டான்.

அவளின் கோபமும் அழுகையும் அதிகமாயிற்று. இந்தப் பிறப்பிலே பிரிய மாட்டேன் என்றால் அடுத்த பிறப்பிலே என்னைக் கைவிட்டு விடுவீர்களா? அடுத்த பிறப்பிலே நான் தேவையில்லை அப்படித்தானே. நல்லாக இருக்கையா உன்னுடைய அன்பும் காதலும். நான் ஏமாந்து போய்விட்டேனே என்று அழுதாள் அவள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர் கொண்டனள்

(திருக்குறள் புலவி நுணுக்கம் குறள் 1315)

அப்போது தான் அவனுக்கு அவள் அன்பின் ஆழம் புரிந்தது. உடனே அவன் சொன்னான் இங்கே பார். எனக்கு வேறு யாரிலும் காதல் இல்லை. நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன். எதையாவது நினைச்சு வீணாக அழாதே என்றான்.

ஓகோ ஐயாவுக்கு மற்றவர்களிடத்திலே காதல் இல்லையாம். யார் அந்த மற்றவர்கள். யார் யாரை விட என்னிலே அதிகம் அன்பு அவர்களின் பெயரை சொல்லுங்கோ இன்னும் எத்தனை பேர் எனக்கு பின்னாலே உங்களின்ரை மனத்திலே இருக்கின்றார்கள் பார்ப்போம் என்று அவள் இன்னும் கோபம் அடைந்தாள்.

யாரிலும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

(திருக்குறள் புலவி நுணுக்கம் குறள் 1314)

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இங்கே பார் உன்னை வயலிலே எத்தனை தடவைகள் நினைத்துப் பார்த்திருப்பேன் தெரியுமா அப்படிப் பட்ட என்னை இப்படிச் சந்தேகின்றாய் இல்லையா கேட்டான் அவன்.

அடிக்கடி நினைக்கிற அளவுக்கு அடிக்கடி என் நினைவு அடிக்கடி மறந்து போகிறது அப்படித்தானே. பாவம் போட்டும் எல்லாம் என்று பேசாமல் விடுவோம் என்று பார்த்தேன். இப்பதானே தெரியுது. என்னை மறக்கின்ற அளவுக்கும் நிலைமை வந்தாச்சு என்று . தள்ளிப் படும் நீர் என்றாள் அவள்

உள்ளினேன் எனறேன் மற்றென் மறந்தீரென்று என்றென்னை
புல்லாள் புலத்தக் கனள்

(திருக்குறள் புலவி நுணுக்கம் குறள் 1316)

அவனுக்குத் தும்மல் வந்து விட்டது. தும்மினான் உடனே உம்முடைய பழைய ஆட்கள் யாரோ நினைக்கிறார்கள் அது தான் தும்முகிறீர்கள் என்றாள். அடுத்து வந்த தும்மலை அவன் அடக்கிப் பார்த்தான் உடனே அவள் அவளவை நினைக்கிறதை தும்மலை அடக்கி ஏன் எனக்கு மறைக்கிறீர்கள் என்று சத்தம் போட்டு அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று.

(திருக்குறள் புலவி நுணுக்கம் குறள் 1318)

இப்போது அவனுக்குக் கோபம் வந்து விட்டது. அவன் எதுவுமே பேசவில்லை. விளக்கை அணைத்துவிட்டு பாயின் ஒரு மூலையில் சரிந்து படுத்தான். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவள் உறங்காமல் தான் படுத்திருக்கின்றாள் என்று அவனுக்கு தெரியும். அவனுக்கும் அவள் அணைப்பின்றி உறக்கம் வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தான். ஒரு எண்ணம் வந்தது.

இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பெருங்குரலில் தும்மினான். துடித்து எழுந்தவள் தனது கோபத்தை மறந்து போய் அவன் தலையைத் தடவிக் கொண்டு நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துச் சொல்லிவிட்டாள். மறுகணமே தன் காதலன் தன்னை இப்படி ஏமாற்றிப் பணிய வைத்து விட்டானே என்று நினைத்து வெட்கப்பட்டாள் அவள்.

டி இருந்தோமா தும்மினார் யாம் தம்மை
நடுPவாழ் கென்பாக் கறிந்து

(திருக்குறள் புலவி நுணுக்கம் குறள் 1312)

இப்போது அவளுக்கு அவனிடத்திலும் அவனுக்கு அவளிடத்திலும் கோபம் இல்லை என்று முடித்தார் திருவள்ளுவர்.

(தமிழர் தகவல் June 2018)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.