சொல்வலை வேட்டுவர்கள்!

அந்தக் கிராமரத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந்தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில் இளம் பெண்கள் ஆற்றிலே தண்ணீர் எடுக்கக் குடங்களோடு வருவார்கள். அவர்கள் அழகானவர்கள். அவர்களிலே திருமணம் ஆனவர்களும் உண்டு. மணவாழ்வினை எதிர்நோக்கி இருப்பவர்களும் உண்டு.

காலையும் பகலும் வீட்டிலே அடைபட்டுக் கிடந்த வாழ்வு மாலை வந்ததும் ஆற்றங்கரையில் நீர் பிடிக்கும் இடத்தில் தடைகள் அகன்றுவிடும். அருவியை இருள் அணைக்கும் வரை பெண்கள் கூடியிருந்து பேசிக் கொள்வார்கள். ஆனால் அவர்களிலே ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உலகியல் கதைகளில் நாட்டம் இல்லாது இருந்தது.

அவள் தினந்தோறும் மாலை வேளையில் ஒரு பாறையில் அமர்ந்து ஆற்றுக்கு மறுகரையில் தெரிந்த அந்த ஆச்சிரமத்தைப் பார்ப்பாள். ஓலையால் வேயப்பட்ட அந்தச் சிறு குடிலின் முன்னால் மணமுள்ள பூக்களை வழங்கக் கூடிய செடிகளும் கொடிகளும் நிறைந்து காணப்பட்டன.

சில வேளைகளில் ஒரு முதிய துறவி ஒருவன் தாளி இலைகளைக் கொய்து கொண்டிருப்பான். தினமும் அருவி நீரிலே நீராடுவதால் அவன் தலை முடி எல்லாம் தன் கருமையும் வெண்மையும் நீங்கி தில்லைச் செடியின் இலைபோல மண்ணிறமாவும் ஈரப்பிடிப்பற்றும் அழகில்லாமல் இருக்கும்.

அவன் ஒருபோதும் குடங்களோடு வரும் பெண்களைத் திரும்பி நோக்கியது கிடையாது. அவர்களில் பலர் பேசும் காம சுகம் கலந்த பேச்சுக்களில் கூட அவனுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. அவன் அமைதிக்கு இடையூறு செய்யும் குடநீர்ப் பறவைகளின் பேச்சொலியும் சிரிப்பும் அவனை கூட அவனை ஒன்றும் செய்வதில்லை.

அவனின் அலட்சியப் போக்கு அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருந்தது. கிராமத்துச் சலசலப்புக்கு அஞ்சி ஆற்றின் மறு கரைக்குப் போய் குடிலிட்டு வாழும் அவனது தனிமை அதைவிடப் பிடித்திருந்தது அவளுக்கு. ஒரு முறையாவது ஆற்றின் மறுகரையில் இருக்கும் அவனைத் தரிசிக்க வேண்டும் என்ற நினைவை வளர்த்துக் கொண்டாள் அவள்.

அந்த நாளும் வந்தது. பெற்றாரும் அண்ணன்மாரும் தினை விதைப்பில் மூழ்கி வயலில் கிடந்த நேரம் பார்த்து காலையிலே நீராடி வாழையின் இலையிலே சில பூக்களைப் பறித்து எடுத்துக் கொண்டு முற்றத்தில் பழுத்துக் கிடந்த மாதுளையில் இருந்து ஒரு கனியையும் பறித்துக் கொண்டு புறப்பட்டாள் துறவியை வழிபட.

அவளின் நல்ல காலம் ஆற்றைக் கடக்கும் நிலை அவளுக்கு ஏற்படவில்லை. துறவி நடு ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்தான். சாமி உங்களைப் பார்ப்பதற்காகத் தான் வந்தேன் என்றாள் அவள். நிமிர்ந்து பார்த்த துறவி மகளே உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் கழுத்து விரைவில் மங்கலநாணைச் சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று கையுயர்த்தி வாழ்த்தி விட்டு மகளே என்னிடம் ஏன் வந்தாய் என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லும் முன்பே ஆரடி அவள் அவனோடு என்ன பேச்சு என்று ஒரு குரல் எழுந்து அது ஒன்று பத்தாகி பல குரல்களாகி விட்டது. துறவி வேகமாக சென்று ஆச்சிரமத்துக்குள் மறைந்து கொண்டான். நடுங்கிப் போனாள் அவள். ஊரே கூடிவிட்டது அரிவாள் கத்தி கம்புடன். அம்மா தலையில் அடித்து அழுதாள். வாடி வீட்டுக்கு என்று அண்ணன் தலை முடியைப் பிடித்து இழுத்தான்.

வீட்டிலே அப்பா மட்டும் நிதானமாகப் பேசினார். மகளே அவன் சாமி என்று நினைத்துப் போனாயா? இது தான் முதல் தடவையா? அல்லது முன்பும் போயிருக்கின்றாயா? இல்லை அப்பா இதுதான் முதல் தடவை. பூவும் பழமும் எடுத்துக் கொண்டு வழிபடப் போனேன்.

கும்பிடப் போனாயா? அவனையா சரி. இனி அங்கே போகாதே. அவனைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் துறவியும் அல்ல. சாமியும் அல்ல. எங்கள் நல்ல காலம் ஆச்சிரமத்திலே இருந்து எங்கள் பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று நாம் யாரையும் கெஞ்சும் நிலை ஏற்படவில்லை.

அவள் எதுவும் பேசவில்லை. அன்று மாலை தண்ணீர் எடுக்கவும் அவள் ஆற்றுக்குப் போகவில்லை. பாட்டியின் மடியிலே அழுது கொண்டு படுத்திருந்தாள். பாட்டி சொன்னாள். உனக்கு அவனின் முந்தைய வாழ்வு தெரியாது. இளம் வயதிலே அவன் மிகவும் அழகாகப் பேசுவான். அவனின் பேச்சு அனைவரையும் வசிகரிக்கக் கூடியது.

பொதுவாக அழகான பெண்களைக் குறிவைத்து இனிமையாக பேசுவான். திருமணம் ஆகிக் கணவனுடன் வாழும் பெண்கள் தனியாக இருப்பவர்கள் என்ற பேதம் கிடையாது. தயவு தாட்சண்யம் இன்றி வேடுவர்கள் வலை விரித்து விலங்குகளைப் பிடிப்பது போல அழகான பெண்கள் பலரை அவன் வார்த்தைகளை வலையாக விரித்து இந்த ஊரில் அனுபவித்திருக்கின்றான். இளம் வயதில் பெண் வேட்டை அவன் தொழில். அதனால் தான் உன்னிடம் எல்லோரும் கோபப்பட்டோம். அழாதே கவனமாக இரு என்றாள் பாட்டி.

இப்படி ஒரு சம்பவம் பற்றிச் சங்க இலக்கியமான புறநானூறும் ஒரு செய்தியைச் சொல்லுகின்றது. தன் செய்யுளிலே தான் கோடிட்டுக் காட்டிய காமுகர்களுக்கு சொல்வலை வேட்டுவர்கள் என்று ஒரு பட்டத்தைக் கொடுத்து இனம் காட்டினார் மாற்பித்தியார் என்று ஒரு புலவர். ஆம் அந்தக் காலத்திலும் இன்று போல இனிய பேச்சு வல்லமையாலேயே அழகிய படித்த பெண்களைத் தம் பக்கம் இழுத்துக் கொண்ட போலி ஒழுக்க மானுடர்கள் இருந்திருக்கிறார்கள்.

எனவே இன்று நாம் காணும் மடங்கள் சார்ந்த பெண்ணியல் அவலங்கள் எல்லாம் சங்க காலத்திலே தொடங்கித் தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் புறநானூறு ஒரு வலுவான சான்றாகும்.

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே.

(புறநானூறு பாடல் 252)

தமிழர் தகவல் 5.6.2020 இதழில் வெளியான எனது கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.