சுதந்திரப் பறவைகளுக்கு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இதோ விடுதலை ஆகின்றார்கள் என்ற அரசியல் சூழ்நிலை ஒன்று தோன்றிய போது எழுதிய கவிதை இது. (18.2.2014)
பறவைகளே! பறவைகளே!
எத்தனையோ துயர் கடந்து
உங்கள் சிறகுகள்
வான்பரப்பில் விரிகின்றன
நீண்ட போராட்டத்தின் பின்!
அன்னை மகிழ்கின்றாள்
பெற்றெடுத்த காரணத்தால்!
மற்றவர்கள் மகிழ்கின்றார்கள்
மனிதாபிமான உணர்வுகளால்!
எழுத்துலகம் மகிழ்கின்றது
நீதி சாகவில்லை என்று!
அதெல்லாம் சரி
நீங்கள் அடைக்கப்பட்ட கூடும்
உங்களை அடைத்த கைகளும்
பத்திரமாகத் தானே
இருக்கின்றன இன்றும்!
திறக்கப்பட்ட கதவால்
வந்துவிட்டோமே ஐயோ!
உடைக்கப்பட்ட கதவால்
வரமுடியவில்லையே இன்று
அதைச் செய்யக் கூடிவர்களும்
போய்விட்டார்களே என்று
உங்கள் சிறகுகள் பறக்கும் போது
வெட்கத்தால் கனக்கா விட்டால்
நீங்கள் கூட்டில் இருப்பதும் ஒன்றுதான்!
வெளியே வந்து
நாட்டில் இருப்பதும் ஒன்றுதான்!
இப்படி எழுதுகிறாயே அவர்கள்; மீது
இரக்கமே இல்லையா?
என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள்!
அந்த இரக்கம் எல்லாம்
எங்கள் மண்ணுக்கு
இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்ற
வருத்தத்தில் கரைந்து
எத்தனையோ ஆண்டுகள்!
ஆம்! மக்காள்! இன்றுடன்
எத்தனையோ ஆண்டுகள்!! ம்!!!
எத்தனையோ ஆண்டுகள்!