சிவ பார்வதி நடனம்
சிவ பார்வதி நடனம்
பார்வதி:
பால்நினைந் தூட்டும் தாயென பதிகப்
பைந்தமிழ் உன்னைப் பாட – எந்தன்
கால்தனில் சதங்கை காலனை உதைத்த
கடவுளே என்றுனை நாட – அன்று
ஆல்நிழல் இருந்து அறமெடுத் துரைத்த
ஐயனே எந்தன் ஈசா! – ஒரு
கோல்துணைக் கிழவி கூவிட நீயும்
கோயிலில் இருப்பதும் முறையோ? (பால்நினைந்து)
அடிமுடி தேடி அலைந்தவர் முன்னால்
அனல்மலை யாகவே நின்றாய் – பெரும்
இடியென அதிரும் இடபத்தில் வந்தே
என்னையும் ஆட்சி கொண்டாய்! – தோல்
துடியொடு மழுவும் தொல்மதி மானும்
தோன்றிடும் கோலம் கண்டாய்! – இன்று
கொடியென துவளும் முதுமகள் துயரக்
குறையினை மறப்பதும் தகுமோ? (பால்நினைந்து)
கரையுடை அணையைக் கட்டுதல் செய்யக்
காவலன் ஆணையாம் அங்கே – தலை
நரையுடை முதுமகள் நம்மவள் எம்மை
நாள்தொறும் நினைப்பவள் வந்தி – அவள்
திரையுடை அலைகடல் பூமியில் பிள்ளைத்
திரவியம் இழந்தவள் அன்றோ – என்னை
வரையுடை இமயத்தில் வளைக்கரம் பற்றிய
வள்ளலே வழியினைக் காட்டாய்! (பால்நினைந்து)
சிவன்:
பாண்டியர் நாட்டில் பரவிடும் வைகை
பார்வதி என்னருட் செயலே! – என்னை
வேண்டுதல் செய்வார் வேண்டுவ செய்வேன்
விதிகளை என்னருள் மாற்றும்! – தேவி
தீண்டுதல் செய்யா என்னையே எதுவும்
தெய்வங்கள் முதல்வனும் நானே! – என்றும்
மாண்டவர் பிறப்பார் பிறந்தவர் மாழ்வார்
மாற்றத்தைக் கடந்தவன் நானே! (பாண்டியர் நாட்டில்)
செம்மனச் செல்வியாள் செய்திடும் துதியினைச்
சிந்தையில் விரும்பிய தாலே – நான்
அம்மகள் துயரினை ஆற்றவே சற்று
ஆறுத லாயினேன் தேவி – அங்கே
வெம்மணல் வைகையை விரைவினில் அடைக்க
வேண்டிய செய்குவேன் நானும் – என்னை
இம்மையில் காணும் இயல்பினை பெற்றார்
இல்லையே மதுரையில் இன்றே! ( பாண்டியர் நாட்டில்)
ஆவணி மாதத்து அழகிய மூலத்தில்
அடியவன் ஒருவன் வருவான் – அவன்
மாவணிப் பிட்டுக்கு மண்ணினைச் சுமந்தே
மன்னனின் தடியடி பெறுவான்! – அங்கு
பாவணி மாணிக்க வாசகன் பொருட்டாய்
பரியென நரிக்குலம் மாற – நாம்
தாவணி மாதுநின் மாநகர் கூடலில்
தனிவிளை யாடலைப் புரிவோம்! (பாண்டியர் நாட்டில்)