ஞானபண்டிதன்

சம்பந்தனின் நந்தவனம் தமிழுக்கு ஒர் வரம்

ஈழத்தில் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு சம்பந்தனது இயற்பெயர் ஞானசம்பந்தன் ஆகும். இரா. சம்பந்தன் என்ற பெயரில் தமிழ் இலக்கிய உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவரது தந்தையார் திரு இராசையா அவர்கள் ஒரு தமிழ்ப் பண்டிதராவார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது தமிழ்ப் பழமொழி. அதற்கேற்ப சம்பந்தன் அவர்கள் பட்டம் பெறாத ஒரு பண்டிதர் என துணிந்து கூறலாம். யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக் கல்லூரியில் தனது உயர்;; கல்வியைப் பெற்ற சம்பந்தன் அவர்கள் எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல தமிழ் ஆசிரியராக விளங்கியவர். இவரது மாணவர்கள் இவரை மாஸ்டர் என அழைத்து பின்னாளில் மாஸ்ரர் என்பதே இவரது இன்னுமொரு பெயராக ஆயிற்று. இன்றுவரை பெரும்பாலானவர்கள் இவரை சம்பந்தன் மாஸ்ரர் என்றே அழைத்து வருகின்றனர்.

இவரது பத்தொன்பதாவது வயதில் 1980ம் ஆண்டு இவர் எழுதிய முதலாவது சிறுகதையான இதயத்தின் கதவுகள் தினகரன் பத்திரிகையில் வெளியானது. தேசியப் பத்திரிகையொன்றில், அதுவும் இளம் வயதில் எந்தவொரு படைப்பும் பிரசுரமாவது என்பது மிகப் பெருமைக்குரிய சாதனையாகும். 1983ம் ஆண்டு வரை இலங்கையில் தினகரன், ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள், கவிதைகள் என்பன வெளியாகி ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் வளர்ந்து வரும் படைப்பாளியாக இவரை இடையாளம் காட்டி நின்றன. தவிர அன்றைய தலைசிறந்த ஈழத்துக் கவிஞர்கள் பலருடனும் பல மேடைகளில் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றி தனது கவித்துவ முத்திரையைப் பதித்துக் கொண்டவர்.

1983ம் ஆண்டு இலங்கை இனக்கலவரத்திற்குப் பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வந்த இரா.சம்பந்தன், 91ம் ஆண்டு முதல் இன்றைய கனடா ஈழநாடு ஆசிரியர் திரு ரி.கே. பரமெஸ்வரன் அப்போது ஆசிரியராக விளங்கிய தமிழோசை பத்திரிகையில் எழுத ஆரம்பித்தவர். கதைகள், சிறுகதைகள், இலக்கிய திறனாய்வுக் கட்டுரைகள் மட்டுமல்லாது காவியங்கள், நாடகங்கள், விமர்சனங்கள் என எழுத்துலகின் பலமுனைகளிலும் தன்னை ஒரு பண்பட்ட எழுத்தாளனாக நிருபித்துக் காட்டியவர்.

1990களின் ஆரம்பத்தில் ரொரன்ரோவில் ஒலிபரப்பாகி வந்த தமிழரங்கம் வாராந்த வானொலியில் வாராந்தம் ஒலிபரப்பாகிய குறள் தரும் விளக்கம் இவரது ஆழ்ந்த இலக்கிய அறிவுக்கும், தமிழ்ப் புலமைக்கும் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கிய நிகழ்ச்சியாகும். இவரது வித்தும் நிலமும் சிறுகதைத் தொகுப்பு ஈழநாடு பிரசுரமாக வெளியாகி இலக்கிய ஆர்வலர்களின் பாராட்டை பெற்றது.

இரா சம்பந்தன் அவர்கள் உலகத்தரம் வாய்ந்த தமிழ்ப் படைப்பாளி. எனினும் சம்பந்தன் மாஸ்ரர் அவர்களிடம் காணக்கூடிய எளிமையும், தன்னடக்கமும் இவருக்கே உரிய அசாதாரணமான, தனித்துவமான பண்புகளாகும். கனடாவில் சாதாரணமாக முதலாந் தலைமுறைக் குடியேற்றவாசிகளுக்கு இருக்கக் கூடிய எல்லா விதமான சவால்களுக்குள்ளும் காலத்தால் அழியாத மிகச்சிறந்த படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்துள்ளார், மொழியை மூலதனமாக்காமல், தமிழைத் தன் படைப்புக்களால் செழுமைப்படுத்தும் ஒர் படைப்பர்ளி சம்பந்தன் மாஸ்ரர் அவர்கள். மொழிக்கு சேவை செய்வது என்பது பிரதிபலன் பாராமல் அந்த மொழியில் சிறந்த படைப்புக்களை உருவாக்கித் தருவதும் ஒன்றாகும்.

நந்தவனம் இணையத்தளம் தமிழுக்கு ஓர் பூங்காவனம். நந்தவனம் இணையத்தளம் இன்னும் முற்றுப்பெறாத சம்பந்தனின் இலக்கியப் பயணம். நந்தவனம் மீண்டும், மீண்டும் வாசிக்கத் தூண்டும் கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் தாங்கிவரும் இணையத்தளம். வாழ்த்துவதை விட, சம்பந்தன் அவர்கள் தொடர்ந்தும் தனது படைப்புக்களாளால் தமிழையும், சமூகத்தையும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதை ஒரு வரமாகக் கேட்பதே பொருத்தமாகும்.

நந்தவனம் தமிழுக்கு ஒர் வரம்.

அன்புடன்
ஞானபண்டிதன்.

One Comment

  1. ஞானபண்டிதனுக்கு நன்றி!
    எழுத்துலகில் தவறானதை எழுதும் போது நண்பனுக்கு அஞ்சும் நட்பு என்பது பலருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் ஞானபண்டிதன் என்ற நண்பனின் நட்பு மூலம் அது எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய தவமாகும். எனது இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் பின்புலத்தில் இருந்து ஊக்கம் தருவதோடு மட்டுமல்லாமல் எனக்கு இந்த இணையத் தளத்தையும் வடிவமைத்துத் தந்து காலத்துக்கு காலம் ஏற்படும் தொழில் நுட்ப மாறுதலுக்கு ஏற்ப அதைப் புதுப்பித்துத் தந்து கொண்டிருக்கும் பண்டிதருக்கு நான் என்ன கைமாறு செய்வேனோ தெரியாது.
    1995ம் ஆண்டு எனது வித்தும் நிலமும் நூலுக்கு பண்டிதர் அட்டைப்படம் வடிவமைத்துத் தந்தார். கணணித் தொழில் நுட்ப வசதிகள் குறைந்த காலத்திலே பண்டிதரால் வடிவமைக்கப்பட அந்த நூல் அந்த ஆண்டு நிகழ்ந்த கனடிய எழுத்தாளர் இரவு என்னும் நிகழ்ச்சியில் பல ஆங்கில எழுத்தாளர்களையே வியக்க வைத்தது.
    முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் பண்டிதரின் இந்த நட்பு நான் மறையும் வரை நிலைத்து இருக்க வேண்டும் என்பதே நான் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனையாகும். நன்றி பண்டிதர்! நன்றி! நன்றி!!
    அன்புடன் இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.