கொக்கும் – நரியும்


சூரியனும் புகமுடியாக் காடு – அங்கே
சுற்றுகின்ற விலங்குகட்கு அதுதானே வீடு
காரியத்தில் கண்வைத்தோர் நரியார் – அந்தக்
கானகத்து ஏரியிலே மீனொன்றைக் கண்டார்

ஏரியிலே அதைப்பிடித்த நரியார் – அதனைக்
எடுத்துண்ட வேளையிலே முள்பற்றி அறியார்!
நெடுந்தொண்டைக் குழிக்குள்ளே முள்ளும் – குத்தி 
நின்றுவிடத் துடித்தாரே வலியாலே நரியார்.

தொண்டையில் நின்றதோர் முள்ளால் – எதையும்
தொடக்கூட முடியாமல் சிலநாட்கள் அழுதார்
குண்டாக இருந்திட்ட நரியார் – பசியால்
கூனாகிப் பிறைபோல குடலொட்டிப் போனார்!

பரியாரி கிடையாத காட்டில் – என்ன
பரிகாரம் பண்ணலாம் தேடினார் நரியார்
பிரியாத பனங்கிழங் காக – சொண்டு
பெரிதான வெண்கொக்கு நண்பரைக் கண்டார்

கூரான உம்சொண்டி னாலே – உள்ளே
குடிபோன முள்நீங்கி குறைதீர்க்க வேண்டும்
நீரென்றும் மறவாத ஒன்றை – நானும்
நினக்காக செய்கிறேன் என்றாரே நரியார்!

ஆவென்று தொண்டையைக் காட்டும் – முள்ளை
அலகாலே எடுக்கிறேன் எனக்கொக்கார் கூறி
கூவென்று நரியாரும் கத்த – அந்தக்
குறைமுள்ளை எடுத்திட்டு நரியாரைக் கேட்டார்

மறக்காத உதவியைச் செய்வேன் – என்று
மன்றாடிச் சொன்னீரே நரியாரே அதனால்
இறக்காமல் காப்பாற்றி விட்டேன் – எனக்கு
இனிச்செய்யும் முன்சொன்ன உதவியினை என்றார்

நெடுங்கால நட்பான கொக்கை – நரியார்
நிறைவான மனத்தோடு கைகூப்பிச் சொன்னார்
கடுங்கோபப் பசியாலே நண்பா – உன்னைக்
கடித்துண்ண நினைத்திட்டேன் முள்நீக்கும் போது

செய்நன்றி மறக்காத மனத்தால் – கொலை
செய்யால் விட்டேனே அதுதானென் உதவி
பொய்சொல்லி ஏமாற்றி நானும் – உன்னைப்
போவென்று சொன்னாலோ அதுவன்றோ பாவம்

நான்தந்த தலையாலே தானே – உலகை
நன்றாகப் பார்க்கின்றீர் கொக்காரே இப்போ
தீன்தந்தார் இறையென்று எண்ணித் – தலையைத்
தின்னாமல் விட்டேனே அதுதானென் உதவி

நரிவார்த்தை கேட்டாரே கொக்கார் – தேகம்
நடுங்கவே சொன்னாரே நரியார்க்கு நன்றி
பெரியோர்கள் சிலரிந்த நரியாய்த் – தம்பி
பின்னாலே நாமெல்லாம் கொக்காக நிரையாய்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.