கூழுக்கு ஒரு பாட்டு!
இறை உணர்வை மனித வாழ்வுடன் இணைத்து இறைவனிடம் பயம் கலந்த பக்தியை ஏற்படுத்திய பல்லவர் காலத்தில் இருந்து வேறுபட்டு இறைவனை உலகியல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக கொண்டு வாழ்வின் ஒரு பகுதியை இறையுணர்வுக்கு விட்டுக் கொடுத்து வாழும் சமூக நெறி துளிர்விட்ட காலத்தில் தோன்றியவன் கம்பன்!
மனித வாழ்வில் எல்லாக் குற்றங்களையும் கடிந்து இறைவனைத் துதிக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்து மாறுபட்டு மனித வாழ்வில் ஏற்படும் குற்றங்களைத் தவிர்த்துக்கொள்ள உதவி புரிபவன் தான் இறைவன் என்ற கோட்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டு காவியம் பாடியவன் அவன்!
உலகியலுக்கு தெய்வம் உடந்தை என்ற கம்பன் காவியம் இல்லை என்றால் பெரியார் இல்லை! அண்ணா இல்லை! மு.க இல்லை! இவர்கள் எல்லாம் கம்பன் என்ற காற்றின் உதவியால் இலக்கிய வானிலே மேலெழுந்த பட்டங்கள்! இவர்களுக்கத் தெரிந்த குற்றங்கள் கம்பன் அறியாதவை அல்ல!
அவன் உலகியல் சுவைகளை தானும் சுவைத்தான்! தன் காவியத்திலும் மற்றவர்கள் சுவைக்க வைத்தான்! அப்படிப்பட்ட கம்பனுக்கும் சிலம்பி என்ற பெண்ணுடன் நட்பு இருந்தது! அது எந்த வகையான நட்பு என்று வர்ணம் தீட்டாமல் வரலாறு நட்பென்று முடித்துக் கொண்டது!
வரையறை இல்லாத மகளீர் என்று வள்ளுவர் ஒரு அதிகாரம் வகுத்தாரே அந்த வரைபின் மகளீர் குடியைச் சேர்ந்தவள் அந்தப் பெண்! இடைக்காலத் தமிழில் தாசி என்றும் இக்காலத் தமிழில் விலைமகள் என்றும் அடையாளம் காட்டப்பட்ட அந்தப் பெண்ணுடன் தான் கம்பன் நட்பாக இருந்தான்!
ஒருமுறை அந்தப் பெண் கம்பனைக் கேட்டாள்! புலவரே! நீங்கள் மன்னரையும் மற்றவர்களையும் புகழ்ந்து பாடுவது போல என்னைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாட மாட்டீர்களா? எனக்கொன்றும் இலவசமாக வேண்டாம்! பொற்காசு தருகிறேன்! பாடித் தர முடியுமா? என்றாள்!
பெண்ணே! நான் புலவன்! பாட்டு என் தொழில்! அதனால் கிடைக்கும் வருமானம் என் வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்தும் குதிரை! நான் உன்னைப் புகழ்ந்து பாடுகிறேன்! ஆயிரம் பொன் தருவாயா?
ஒரு பாட்டுக்கு ஆயிரம் பொன்னா? கம்பரே! இது அதிகம் இல்லையா?
சிலம்பி! இதோபார்! என் கவிதையின் பெறுமதி தெரியாமல் பேசுகின்றாய்! என் ஒவ்வொரு பாட்டும் இந்த உலகத்தை விடவும் உயர்ந்தன!
புலவரே இதோ இந்த ஐந்து நூறு பொன்னையும் வைத்துக் கொண்டு என்னைப்பாடுங்கள்!
இடுப்பில் இருந்து ஏட்டுக் கட்டை எடுத்தான் கம்பன்! பாடல் பிறந்தது!
தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
பாடலின் இருவரிகளையும் எழுதி விட்டு பெண்ணே! சிறந்த தண்ணீர் எதுவென்றால் அது எங்கள் காவிரி ஆற்றின் தண்ணீர் தான்! வெற்றிமாலை அணிந்த சிறந்த அரசன் யாரென்று பார்த்தால் அதுவு ம்எங்கள் சோழ மன்னன் தான்! நல்ல சிறப்பு வாய்ந்த மண் எது என்றால் அதுவும் எங்கள் சோழ மண்டலம் தான்! அது போல பெண்ணாகிய நீயும் என்று இவ்வளவும் எழுதி இருக்கின்றேன்!
நீ மீதி ஐநாறு பொன்னையும் தரும்போது உன் பெயர் வரும்படியாக பாடலை முடித்துத் தருகின்றேன்! அது வரை இந்த ஏடு உன்னிடமே இருக்கட்டும்! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் கம்பன்!
சிலம்பி மிகுந்த கவலை அடைந்தாள்! அவளிடம் பணம் இல்லை! அந்த இரு வரிகளையும் பத்திரப் படுத்திக் கொண்டாள்! நாட்கள் ஓடின!
ஒருநாள் ஒவையைத் தெருவிலே கண்டாள் சிலம்பி! ஆச்சி! என் வீட்டுக்கு வாறியா சாப்பாடு போடுறேன்!
அடியே! அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும் கொம்பை முலைபகர்வார் கொண்டாட்டம்! சரி பரவாயில்லை வருகிறேன்! கூழ் தருவியா?
கூழ் தருகிறேன்! வா! அது போகட்டும்! இப்ப அம்மி துணையாக என்று என்னவோ சொன்னியே என்ன ஆச்சி அது!
இது ஒன்றுமில்லை! அம்மிக் கல்லைக் காலிலே கட்டிக் கொண்டு ஆற்றைக் கடக்க வெளிக்கிடுவது போல தான் உன் சினேகிதம் என்று சொன்னேன்!
ஆச்சி! வாயைத் திறந்தவுடனே உனக்குப் பாட்டு எப்படித்தான் வருகுதோ!
சித்திரமும் கைப்பழக்கம்! செந்தமிழும் நாப்பழக்கம்! வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்!
ஆச்சி! இம்புட்டு நல்லாப் பாடுறியே! என்னைப் பற்றிப் பாடச் சொன்னதுக்கு கம்பர் ஐநாறு பொன் வாங்கிக் கொண்டு பாதிப் பாட்டு பாடித் தந்திருக்கிறார்! பார்க்கிறியா ஆச்சி! இதோ!
என்னடி எழுதியிருக்கிறான் அந்தக் கிறுக்குப் பயல்! கொண்டுவா இப்படி!
தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
எடியே மீதியை நான் சொல்லுறேன் எழுதிக்கோ!
ஆச்சி என்னிடம் ஐநாறு பொன் இல்லை ஆச்சி!
யாரடி இவ? பொன் பொன் என்று பேசிக்கொண்டு! நீ கூழ் ஊத்துவியா? அதுக்காக நான் பாடுறேன்! எழுதிக்கோ!
தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு!
ஆச்சி இந்தப் பாட்டிலே என் பேர் கூட வருகுது!
எடியே! சிறந்த தண்ணீர் எதுவென்றால் அது எங்கள் காவிரி ஆற்றின் தண்ணீர் தான்! வெற்றிமாலை அணிந்த சிறந்த அரசன் யாரென்று பார்த்தால் அதுவுத் எங்கள் சோழ மன்னன் தான்! நல்ல சிறப்பு வாய்ந்த மண் எது என்றால் அதுவும் எங்கள் சோழ மண்டலம் தான்! அது போல பெண்ணாகிய சிலம்பியின் தாமரைப் பாதத்திலே அணியப்பட்ட சிலம்பு தான் சிலம்பு என்று சொல்லக் கூடிய சிறப்பு வாய்ந்தது என்று எழுதியிருக்கிறேன்!
அந்தப் பய வந்தா காட்டு என்றாள் ஒளவை!!
ஜனவரி 5.2015 தமிழர் தகவல் இதழில் வெளியான எனது கட்டுரை!