குறளில் சில நாடகங்கள்!
இந்த ஊரும் எனது காதலும்!
தோழி – என்ன இன்றைக்கும் தூங்கவில்லையா
தலைவி – இல்லை
தோழி – அது தான் ஏனென்று கேட்கிறன்.
தலைவி – தூங்கவில்லை என்றால் விடன்.
தோழி –
இங்கே பார் காதலிக்கும் போது சொன்னனான்
தலைவி – தொடங்கி விட்டியா
தோழி –
இல்லை ஒருவனைக் காதலித்தால் முதலிலே நம்பிக்கை இருக்கணும்.
தலைவி – யார் நம்பிக்கை இல்லை என்று சொன்னது
தோழி –
நம்பிக்கை இருந்தால் ஏன் இப்படிக் கண் மூடாமல் இருக்கிறாய்
தலைவி –
நான் கண் மூடாமல் இருக்கிறதுக்கு காரணம் என்ன என்று நீ நினைக்கிறாய்.
தோழி –
பயம்! போனவனைக் காணவில்லை. வராமல் போய்விடுவானோ என்ற பயம்
தலைவி –
அப்படியில்லை. என் கண்ணுக்குள்ளே அவன் உருவம் இருக்கிறது. கண்ணை மூடினால் அது மறைந்து போகும். அது எனக்கு விருப்பமில்லை. அதனாலே தான் இமையாமல் இருக்கின்றேன் போதுமா. நீயும் இந்த ஊர்ச் சனம் போல அவன் அன்பில்லாதவன் ஏமாற்றி விட்டுப் போய்விட்டான் அவள் நித்திரை இல்லாமல் தவிக்கிறாள் என்று விளங்காமல் கதைக்காதே
இமைப்பில் கரப்பார்க்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்
(திருக்குறள் – காதல் சிறப்பு உரைத்தல் – குறள் 1129)
இதன் பொருள்
இமைப்பில் கரப்பார்க்கு அறிவல்:
கண் இமைத்தால் அவன் உருவம் மறைந்துவிடும் என்று என்று தெரிந்து நான் இமைக்காமலேயே இருக்கின்றேன்.
அனைத்திற்கே: இந்தச் சின்ன விசயத்துக்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்: என் காதலனை என்மீது அன்பில்லாதவன் என்று சொல்லி இந்த ஊர் என்னவோ எல்லாம் கதைக்கின்றது.