காப்புக்கு இருந்த கற்பு
என்னை உண்மையாகவே காதலிக்கின்றாய். என்றும் என்னை விட்டுப் பிரியமாட்டாய் என்று நம்பி நீ கேட்ட போது மறுக்காமல் உன்னைக் கட்டியணைத்தேன். இப்போது நீ என் கூட இல்லை. உனக்கு மணமாகி இன்று மனைவி பிள்ளைகள். சரி பரவாயில்லை.
உனக்கு ஞாபகம் இருக்கா? உன்னை நான் அன்று இறுகக் கட்டித் தழுவிய போது என் கையிலிருந்த காப்பு ஒன்று கழன்று ஓடிப்போய்த் தூரத்தில் வீழ்ந்து கிடந்ததே. நீ கூட விடு பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னாயே காரியத்தில் கண்ணாக இருந்து கொண்டு!
அன்று என் காப்பு ஏன் கழன்று ஓடியது என்று எனக்குப் புரியவில்லை. மனத்திலே அன்பில்லாதவனை நீ வேண்டுமானால் கட்டித் தழுவிக்கொள். நான் அதைச் செய்யமாட்டேன் என்று அந்தக் காப்பு என் கையை விட்டுக் கழன்று போய்விட்டதை நான் இப்போது உணர்கின்றேன். கற்புள்ள காப்பு .
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
(திருக்குறள் காமத்துப்பால் குறிப்பு அறிவுறுத்தல்)
தண்ணந் துறைவன் – குளிந்த நீர் நிறைந்த ஊரில் வாழும் என் காதலன்
தணர்ந்தமை – உடலால் என்னுடன் சேர்ந்திருக்கும் போதே மனத்தால் பிரிந்து இருந்ததை
வளை – எனது காப்பு.
முன்னம் உணர்ந்த – எனக்கு முன்னரே தெரிந்து கொண்டு கழன்று போய்விட்டது
குளிந்த நீர் நிறைந்த ஊரில் வாழும் என் காதலன் உடலால் என்னுடன் சேர்ந்திருக்கும் போதே மனத்தால் பிரிந்து இருந்ததை எனது காப்பு எனக்கு முன்னரே தெரிந்து கொண்டு கழன்று போய்விட்டது