கவிதையில் ஒரு புகைப்படம்!

 

 

திருக்குறள் எப்படித் தனிமனித ஒழுக்கத்துக்காகப் போராடியதோ அது போல தனிமனித அன்புக்காகப் போராடிய இலக்கியம் பெரியபுராணம். புராணம் என்ற உடனேயே அது சமய நூல் என்று ஒதுக்கி விடாது அது காட்டும் வரலாற்றுத் தொன்மையை நாம் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.

 

தன் மந்திரிப் பதவியை தொன்னெறி ஆய்வுக்கு முழுமையாகப் பயன்படுத்தி அதன் மூலம் அறுபத்திமூன்று வரலாறுகளில்  எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியவர் குன்றத்தூர்ச் சேக்கிழார் என்னும் தமிழ் அறிஞர்!

 

தான் எடுத்துக் கொண்ட பொருளை நூலாக்கிக் கொள்ள பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து அந்த இடத்து மக்களுடன் கலந்து பேசி வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரித்த பின்புதான் அதைச் சமயநெறியோடு கலந்து செய்யுள் ஆக்கினார் சேக்கிழார்.

 

 

எனவே அவர் கலந்துவிட்ட சமய உணர்வுகளைப் பறம் தள்ளிவிட்டு வரலாற்று நோக்கோடு பெரியபுராணத்தைப் புரட்டினால் பக்கத்துக்குப் பக்கம் அரிய செய்திகள் புதைந்து கிடப்பதைக் காணலாம்.

 

அவர் எழுதிய கண்ணப்பர் வரலாறு வேட்டுவ மக்கள் வாழ்வு பற்றியது. இறைவனுக்கு மாமிசம் படைத்தது. கண்ணிலே இரத்தம் வடிந்தது. தன் கண்ணை எடுத்து அப்பியது. இறைவன் தடுத்தது போன்ற செய்திகளை ஒதுக்கி வைத்துவிட்டு மீதியைப் பார்த்தால் எமக்கு வியப்பு மேலிடும்!

 

வாரணச் சேவ லோடும் வரிமயில் குலங்கள் விட்டு

தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்

போரணி நெடுவே லார்க்குப் புகழ்புரி குரவை தூங்கப்

பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்பு

 

தோரணம் கட்டி குரவை ஆடி பெரிய விழா கொண்டாடிய காலத்திலே நெடுவேல் முருகனுக்கு காணிக்கையாக சேவலையும் மயிலையும் நேர்ந்து விட்டார்களாம்! கொலை செய்யவில்லை. நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொலைக்கு அஞ்சாத வேட்டுவர்களே செய்யாத பாவம் தெய்வத்தின் பெயரால் உயிர்க் கொலை!

 

வாரணச் சேவலோடும் வரிமயில் குலங்கள் வெட்டி என்று சொல்லாமல் விட்டு என்ற சொல்லைப் பாவிக்கிறார் சேக்கிழார். எனவே வேள்வியில் உயிர்ப்பலியை யார் எந்தக் கோவிலில் செய்தாலும் அது தமிழர் வாழ்வியல் நெறிக்கு மாறானது என்பதே சேக்கிழார் கருத்தாகும். இதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும்!

 

அடுத்து ஒரு நிகழ்ச்சி காட்டப்படுகின்றது கண்ணப்பர் கதையில்! முதன் முதல் வேட்டைக்குப் புறப்படுகின்றார் கண்ணப்பர். அதற்காக காட்டை வணங்கி மகிழ்விக்க ஒரு வழிபாடு நடத்தப்படுகின்றது. அதை நிகழ்துவதற்காக  தேவராட்டி என்ற முது குறத்தி அழைக்கப்படுகின்றாள். அவள் கோலத்தைப் பாருங்கள்!

 

கானகத்திலே வரிவரியாக கணுக்கள் தாங்கி நிற்கும் தளிர்களின் கண்ணிகளை ஆய்ந்து சூடிக்கொண்டு இருக்கிறாள் அந்த மூதாட்டி! மான் கொம்பை அறுத்து அதனாலே செய்த வளையங்களைக் காதில் அணிந்தும் இருக்கிறாள். மானிடத்து இருந்து எடுத்த அரிதார மையைக் கொண்டு நெற்றியிலே திலகம் இட்டிருக்கிறாள் அவள். நீலமும் பச்சையும் கலந்து கோர்த்த மணிமாலையை மயிலின் கழுத்துப் போல நீண்ட தன் கழுத்திலே அணிந்திருக்கிறாள் அந்தத் தாய்! முதுமையினால் அவள் மார்பகங்கள் சாய்ந்து தொங்குகின்றது. இலை தழைகளால் அதை மறைத்திருக்கிறாள் அவள். இடுப்பிலே மரவுரி அணிந்தும் அள்ளி முடிந்த சடையிலே பூக்களைச் சூடிக்கொண்டும் அந்தக் குறத்தி வேட்டுவ அரசனை வணங்கி நிற்கின்றாள்.

 

அவளை  வேட்டுவர் தலைவன் நாகன் கேட்கின்றான். அன்னையே நீ ஒரு குறையும் இல்லாமல் இருக்கின்றாய் தானே!

 

அரசே! உன் கட்டளைப்படி எனக்கு நல்ல இறைச்சி கிடைக்கின்றது. ஈசல் பூச்சிகள் இடப்பட்ட கள் குடிப்பதற்குக் கிடைக்கின்றது. மற்றவை எல்லாம் குறைவறக் கிடைக்கின்றது. நான் நன்றாக வாழ்கிறேன் என்று பதில் சொல்கிறாள் அந்தத் தாய்!

 

கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்

கலைமருப்பின் அரிந்தகுழை காதில் பெய்து

மானின்வயிற்று அரிதாரத் திலக மிட்டு

மயிற்கழுத்து மனவுமணி வடமும் பூண்டு

தானிழிந்து இரங்கிமுலை சரிந்து தாழத்

தழைப்பீலி மரவுரிமேல் சார எய்திப்

பூநெருங்கு தோரைமலி சேடை நல்கிப்

போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.

 

நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை

நோக்கிஅன்னை நீநிரப்பு நீங்கி இங்கே

நன்றினிது இருந்தனையோ?என்று கூறும்

நாகனெதிர் நலம்பெருக வாழ்த்தி நல்ல

மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்

விளைவளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம்

அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்

அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.

 

முதிய குறத்தி அதுவும் சமூகக் கடமைகள் செய்பவளின் கோலம் அன்று எப்படி இருந்தது என்பதற்கு கவிதையில் புகைப்படம் எடுத்துத் தருகின்றார் சேக்கிழார்!  அதைக் கூட தன் கற்பனையால் மிகைப்படுத்தி விடாது உள்ளதை உள்ளபடியே பாடிவைத்த அவரது வரலாற்று நோக்கு போற்றத் தக்கதாகும்!

 

பெண்கள் நன்றாகக் கள் அருந்திய செய்தி மட்டுமல்ல அதிலே ஈசல் பூச்சி கலந்து குடித்த வரலாறும் சேக்கிழாரால் தரப்படுகின்றது. சமய இலக்கியம் என்று உண்மைகள் மறைக்கப் படவில்லை! சமுதாயத்தில் பெரியவர்களை அக்கால அரசுகள் எப்படிப் பேணிக் கொண்டன என்பதற்கு வேட்டுவ அரசனின் நலம் விசாரிப்பும் குறத்தி சொன்ன பதிலும் சான்றாக அமைந்து விடுகின்றன.

 

சேக்கிழாரின் இந்தக் கவிதை நடையில் மனத்தைப் பறிகொடுத்த காரணத்தால் கவியரசு கண்ணதாசன் தான் இயற்றிய யேசுகாவியத்திலே பல இடங்களில் சேக்கிழாரின் கவிதை நடையைப் பின்பற்றி அழகாண கவிதைகளை இயற்றினார்!

 

வீரரெலாம் சூழ்ந்தவளைப் பிடித்தார்கள் கூட்டத்தின்

வெளியெ தள்ளி

ஓரமுற விட்டார்கள் இயேசுவிடம் உயிர்வைத்த

உத்தமப் பெண்

நீர்வடியும் கண்களுடன் அத்துண்டை இல்லத்தே

நிமிர்ந்து பார்த்தாள்

கார்முகிலின் திருமுகத்தை முழுவடிவில் அதிலேயே

கண்டு கொண்டாள்!

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.