கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!
தமிழர் தகவல் 3.5.17 இதழில் வெளியான எனது கட்டுரை
சோழ மன்னனின் தளபதியான கருணாகரத் தொண்டைமான் தற்போது ஒரிஷh மாநிலம் என்று அழைக்கப்படும் அன்றைய கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு காஞ்சிக்குத் திரும்பிய போது அந்த வெற்றியைப் புகழ்ந்து சயங்கொண்டான் என்னும் புலவன் பாடிய இலக்கிமே கலிங்கத்துப் பரணியாகும்.
கலிங்கத்துப் பரணியில் திருக்கடை திறப்பு என்று ஒரு பகுதி உண்டு. அதில் கலிங்கம் மீது போர் செய்யப் புகுந்த வீரர்கள் குறித்த காலத்தில் போர் முடித்து வராமல் காலம் தாழ்த்தி வர அவர்களின் காதல் பெண்கள் தங்கள் வீட்டுக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு ஊடி இருந்தனர். அவர்களைக் கதவுகளைத் திறக்கும்படி ஆடவர்கள் மன்றாடி வேண்டினர். அதைக் காமச் சுவை மிகுந்த பாடல்களாக சயங்கொண்டான் பாடிவிட்டுப் போனான்.
ஒரு போர் வீரன் கலிங்கப் போர் முடித்து தன் வீட்டுக்கு வருகின்றான். அவன் மனைவி அவனிடம் கோபமாக இருக்கின்றாள். அவன் கதவைத் தட்டினான். மீண்டும் மீண்டும் தட்டினான். அவள் திறக்கவில்லை. அப்போது அவன் தங்கள் வாழ்வில் நடந்த ஒரு பழைய செய்தியை அவளுக்கு நினைவூட்டினான்.
பெண்ணே! உனக்கு ஞாபகம் இருக்கின்றதா? ஒரு முறை நான் உன்மீது தீராத ஆசையோடு நீ உடுத்திருந்த சேலையைப் பற்றி இழுத்தேன். நீயோ மிகுந்த கோபத்தோடு என் சேலையை விடுங்கள் என் சேலையை விடுங்கள் என்று சொன்னாய். ஆனால் உன் குரலிலே கோபம் இருக்கவில்லை அது மழலை மொழியாக இருந்தது. அதுவும் அன்றி நீ சேலையை விடுவித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடவும் இல்லை. அதனாலே நீ விடுங்கள் விடுங்கள் என்றது சேலையைப் இன்னும் பிடித்து இழுங்கள் இழுங்கள் என்ற குறிப்பு பொருளை எனக்குத் தந்தது.
அந்த அளவுக்குச் சுகம் தேடும் நீ இப்போது கதவைப் பூட்டி வைத்திருப்பது என்மீது வெறுப்பினால் அல்ல என்பது எனக்குத் தெரியும் கதவைத் திற என்றான்.
விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
வெகுளி மென் குதலை துகிலினைப்
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்கடைகள் திறமினோ.
(சயங்கொண்டான் – கலிங்கத்துப் பரணி)
சயங்கொண்டானின் இந்தப் பாடலை சினேகிதி என்ற சினிமாப் படத்துக்காக கொண்டுவந்தார் கண்ணதாசன். தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா என்று சௌந்தரராஜனும் நடிகை பாரதியும் பாடிய அந்தப் பாடலிலே
ஆடை தொட்டு இழுக்கும் போது
போதும் போதும் என்பதில்
இன்னும் வேண்டும் என்பதன்றி வேறு
அர்த்தம் காண முடியுமா?
(கண்ணதாசன் – சினேகிதி)
என்ற அடிகள் வரும். இது முழுமையான சயங்கொண்டானின் பாடலின் மறு உருவமாகும். ஆனால் கருத்து ஒன்றாகவே இருக்கின்றது. தமிழ் இலக்கியக் காட்சிகள் எல்லாம் எவ்வளவு ஆழமாக கண்ணதாசன் மனத்தில் இடம் பிடித்திருந்தால் இப்படியான பாடல்கள் தோன்றும் என்பதை நாம் எண்ணிப் பார்த்து அந்தக் கவிஞனைப் போற்ற வேண்டும்.
இன்னொரு போர் வீரன் தன் மனைவியிடம் சொன்னான். பெண்ணே உன்னை நான் இரவு வேளையில் முன்பு கட்டித் தழுவும் போதெல்லாம் என் நகத்தினால் காயங்கள் உன் உடலில் ஏற்பட்டு விடும். அந்தக் காயங்களை ஒரு செல்வமும் இல்லாதவன் திடீரென்று பெற்ற புதையலைப் போல யாரும் இல்லாத இடத்தில் போயிருந்து பார்த்துப் பார்;தது மகிழும் உன் அன்பு எனக்குத் தெரியாதா? கதவைத் திற என்றான் கலிங்கத்துப் பரணியில்.
முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர் கடைதிறமினோ
(சயங்கொண்டான் – கலிங்கத்துப் பரணி)
இந்தச் செய்தியை எங்கள் தங்க ராஜா படத்துக்குப் பாட்டு எழுதும் போது கையில் எடுக்கின்றார் கண்ணதாசன். இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேளை என்றபாட்டி இப்படி எழுதுவார் கண்ணதாசன்.
காலை வேளையில் காயங்கள் பார்த்துக்
களிப்ப தென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவதோ மஞ்சம்
(கண்ணதாசன் – எங்கள் தங்க ராஜா)
இவ்வாறாக இலக்கியப் புலவர்களின் காம நயங்களை நாகரீகமான முறையில் சினிமாவுக்குக் கொண்டுவந்தவர் கண்ணதாசன். சயங்கொண்டான் பச்சையாகச் சொன்ன செய்திகளை கண்ணதாசன் பக்குவப்படுத்தித் தந்தார். கம்பன் சொன்ன காது கூசும் செய்திகளுக்குக் கவித்துணி நெய்து போர்த்தினார் கண்ணதாசன்.
பெண்புலித்தோல் போர்த்துலவும் கவிதைப் பூக்கள் என்று சொல்லக் கூடிய பெண் திரைப்படப் பாடலாசிரியர்கள் நான் காமத்தைப் பாட மாட்டேன் ஆங்கிலம் கலந்து பாட மாட்டேன் என்று வீராப்பு பேசிக் கண்ணகி வேடம் போடும் இந்தக் காலத்தில் ஓசைப்படாமல் பழைய இலக்கியச் செய்திகளைப் பண்பாட்டு வரம்புக்குள் தன் திறமையால் கொண்டு வந்த கண்ணதாசன் என்றும் தமிழ் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் அவர் பாடல்களைப் போல!
அருமையான பதிவு.
சங்கப் பாடலில் வரும் காமச் சுவையை கண்ணதாசன் கவித்துணி நெய்து போர்த்தினார் என்றுரைத்திருப்பது அருமை. ஆனால் சங்கத்தில் காமமும் காதலுணர்வுடன் அழகாகத்தான் தெரிகிறது. நாகரிகம் குறைந்ததாக எம் கண்களுக்குப் புலனாகவில்லையே!
”போதும் போதும் என்பதில்
இன்னும் வேண்டும் என்பதன்றி வேறு
அர்த்தம் காண முடியுமா?”.