! கனவாய்ப் போன கனவுகள்
ஆண்டென்று பலகூடி அடுக்காகக் கழிந்தாலும்
அலைசோர்ந்து போவதில்லை – கடலென்றும்
ஆழத்தில் குறைவதில்லை!
தூணென்று நிமிர்ந்திட்ட தொடுவான மலையென்றும்
தோற்றத்தில் குறைவதில்லைப் – புயல்தாக்கித்
தோற்றதாய்க் கதையுமில்லை!
வீணாகிப் பலகாலம் விரைவாகக் கடந்தாலும்
வெடிக்காமல் தணிவதில்லை – எரிமலைகள்
விறகாகி மடிவதில்லை!
வான்நீளம் ஆனாலும் வலஞ்செய்ய நிலவென்றும்
வாழ்க்கையில் மறுப்பதில்லை – முகில்கண்டு
வழிமாற்றிக் கொண்டதில்லை!
தேன்தேடித் திரிகின்ற திரளான தேனீக்கள்
தென்றலை இரசிப்பதில்லை – திசைமாறித்
தேவையை மறப்பதில்லை!
கான்பூத்த மலர்கண்டு களவேங்கைப் புலியென்றும்
களிப்புற்று நின்றதில்லை – முட்கீறும்
கவலைக்கும் பணிந்ததில்லை!
தானாகி ஐம்பதெனும் தடங்காட்டும் வயதொன்றும்
தமிழீழப் புலிகட்கில்லை – பகைமீது
தாவிட வயதொன்றில்லை!
களமாடி நின்றாலும் கடலோடிச் சென்றாலும்
கவலைகள் குறையவில்லை – தமிழீழம்
கனகாலம் சிரித்ததில்லை!
வளமான வாழ்வியலை வரலாற்றை வர்த்தகத்தை
வளர்க்கவும் முடியவிலை;லை – பகையெம்மை
வாழவும் விடவுமில்லை!
குளமோடும் மீனுக்கும் கொக்குக்கும் ஒருபோதும்
கொள்கைகள் இணைவதில்லை – சுவைகண்ட
கொலையெண்ணம் மறைவதில்லை!
பிளவாக்கிப் பிரதேசப் பகையூட்டும் நரிபோன்ற
பெரியோர்கள் குறையவில்லை – நப்பாசைப்
பெருச்சாளி அழியவில்லை!
இளவேங்கைப் புலியாகி ஈழத்தின் தாய்போல
இருப்போர்க்கு வயதும் இல்லை – அதைநாமும்
எண்ணியும் பார்த்ததில்லை!
தளமோடிப் பகைசாய்கும் தமிழீழ மறவருக்குக்
தனியான வயதுமில்லை – அதுவெங்கள்
தமிழீழ நெறியிலில்லை!
குறிபார்த்த படையோடு குலங்காக்க நிற்கின்ற
கொள்கையின் வயதை எண்ணித் – தமிழர்கள்
கொஞ்சுதல் வழக்கமில்லை!
இரா.சம்பந்தன் (கனடா ஈழநாடு 2005)a