கண்ணம்மா!
காவிளாய் இழுத்தனையோ கண்ணம்மா! – ஐயோ
கைசிவந்து போச்சுதடி கண்ணம்மா!
ஓவியமாய் இருந்தநெற்றி கண்ணம்மா – வியர்வை
ஓடியதால் பொட்டழிய கண்ணம்மா
தாடிமுள்ளுக் குத்துமென்று கண்ணம்மா – நான்
தள்ளிநின்ற கன்னமெலாம் கண்ணம்மா
கோடிமுள்ளால் குத்துதடி கண்ணம்மா – நெஞ்சைக்
கூட்டியள்ள வைக்குதடி கண்ணம்மா!
தாவுமுயல் குட்டிரண்டு கண்ணம்மா – உந்தன்
தாவணிக்குள் இருக்குதடி கண்ணம்மா!
கூவுகுயில் கருமைநிற கண்ணம்மா – அதைக்
கூடவைத்து மேய்கிறியே கண்ணம்மா!
நெருஞ்சிக்கு நாலுமுள்ளு கண்ணம்மா – நீ
குறிஞ்சியெடி இரண்டுமுள்ளு கண்ணம்மா!
வெறுஞ்சொற்கள் தேவையிலைக் கண்ணம்மா – அன்பே
வேண்டுமெடி நீயெனக்கு கண்ணம்மா!
உறுஞ்சிக் கூழ்குடித்தும் கண்ணம்மா – நாங்கள்
ஒற்றுமையாய் இருந்திடனும் கண்ணம்மா!
சாதிமதம் வேண்டாமடி கண்ணம்மா – அரசியலாம்
சாக்கடையும் வேண்டாமடி கண்ணம்மா
பாதிநிலம் உழவுசெய்து கண்ணம்மா – நாங்கள்
பாய்கிடந்தால் போதுமடி கண்ணம்மா!
ஊதியடுப் பெரித்துணவு கண்ணம்மா – நீயும்
ஊட்டிவிட்டால் போதுமடி கண்ணம்மா!
சரையவிழ்ந்த சக்கரைநீ கண்ணம்மா – நானும்
சந்துலவும் எறும்பானேன் கண்ணம்மா
கரைகிழிந்த வேட்டியடி கண்ணம்மா – இரவுக்
கருமிருட்டில் கரையெதுக்கு கண்ணம்மா
திரையிடுவோம் இத்துடனே கண்ணம்மா – எல்லாம்
தேவையிலை எழுத்தில்வர கண்ணம்மா!