கண்ணப்பர் கதையும் இந்து தத்துவமும்!
காட்டிலே வேட்டையாடச் சென்ற கண்ணப்பர் தங்கள் வலைகளை விரைந்து அறுத்துக் கொண்டு ஓடும் ஒரு பன்றியைக் கண்டார்! அதனை வேட்டையாடி விடவேண்டும் என்ற எண்ணத்தோடு பின்னால் ஓடினார் அவர்! அவரைத் தொடர்ந்து நாணன் காடன் என்ற இரு பாதுகாப்பு மந்திரிகளும் ஓடினார்கள்! இவர்களுக்குப் பின்னே வேட்டைக்கு உதவி புரிய வந்த முப்பத்தாறு வில் வீரர்கள் கல்லிலும் முள்ளிலும் பரந்து ஓடினார்கள்!
போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்
(கண்ணப்பநாயனார் புராணம்)
பன்றியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒவ்வொரு வேட்டுவ வீராகளாக நின்றுவிட கண்ணப்பர் மட்டும் விடாமல் ஓடினார்! அவரை விடாமல் நாணனும் காடனும் தொடர்ந்து ஓடினார்கள்! ஒரு கட்டத்தில் மேற்கொண்டு ஓட முடியாமல் பன்றி நின்றுவிட கண்ணப்பர் ஈட்டியால் குத்திக் கொன்றார்!
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்
(கண்ணப்பநாயனார் புராணம்)
நான் களைத்து விட்டேன் எனக்குத் தண்ணீர் வேண்டும் என்றார் கண்ணப்பர்! உடனே நாணன் சொன்னான்! திருக்காளத்தி மலையிலே மஞசள் தாழைகள் நிறைந்த பொன்முகலி ஆறு ஓடுகின்றது! அங்கே குடுமித்தேவர் என்ற சிவபெருமான் கோவில் கொண்டிருக்கிறார்! கும்பிடலாம்! வா போவோம்! தண்ணீரும் குடிக்கலாம் என்றான்!
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்
(கண்ணப்பநாயனார் புராணம்)
தண்ணீர் கேட்ட கண்ணப்பருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று நாணன் அழைத்துச் சென்று தீரும்பிவர இறந்த பன்றியை அறுத்து நெருப்பு மூட்டி வாட்டி வைத்துவிட்டு பசியோடு மலையடிவாரத்தில் காத்திருந்த காடன் எங்கடா போனீர்கள் இவ்வளவு நேரமும் என்று கோவித்து விட்டு பன்றி இறைச்சி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்
காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்
(கண்ணப்பநாயனார் புராணம்)
இங்கே கண்ணப்பர் கதையோடு சேக்கிழார் இந்து சமய தத்துவங்களை கோர்த்துக் கொண்டு செல்வது பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்! கண்ணப்பர் பன்றியைக் கலைத்துச் சென்ற போது எல்லா வேட்டுவர்களும் ஒவ்வொருவராக நின்றுவிட இருவர் மட்டும் கண்ணப்பரை விடாமல் தொடர்ந்து சென்றார்கள் இல்லையா?
அதன் பொருள் ஒரு உயிர் இறைப் பயணத்தைத் தொடங்கும் போது புறக் கருவிகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து போக நல்வினை தீவினை என்ற இரண்டும் விடாமல் அந்த உயிரைத் தொடரும்! இங்கே கண்ணப்பரைத் தொடர்ந்த நாணன் நல்வினை! காடன் அவரின் தீவினை! ஆதனால் தான் நல்வினையாகிய நாணன் கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் வா என்று அழைத்துச் செல்ல தீவினையான காடன் பன்றியைச் சுட்டுச் சாப்பிட வைத்து பாவத்தை மேலும் வளர்க்க முயன்றான்!
இறுதியில் இறைவனை மிகவும் நெருங்கி கண்ணப்பர் கட்டியணைத்துக் கொள்ள நாணனும் காடனும் ஒன்றாக அவரை விட்டு விலகி ஊருக்குப் போய் விட்டார்கள் என்று சேக்கிழார் தன் கதையை முடிப்பார். ஏனென்றால் உயிர் இறைவனை அடைந்த பின்பு அதாவது முத்தி அடைந்து விட்டால் நல்வினை தீவினை இரண்டும் அதற்குக் கிடையாது என்ற இந்துமத தத்துவத்தை விளக்க கண்ணப்பரைப் பிடித்துக் கொண்டார் சேக்கிழார்!