ஒளவை பேசிய அரசியல்!
அயல் நாடுகளை வென்று சோழப் பேரரசை விரிவு படுத்திய பின்பு அந்தச் சோழ மன்னனுக்குப் பெரும் பிரச்சனை ஒன்று எழுகின்றது. கைப்பற்றிய புதிய இடங்களைக் கட்டியாள்வதற்கு நிறைய நிர்வாகிகள் தேவைப்பட்டார்கள்.
யாரை நியமிப்பது. யாரை நியமித்தால் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் நடந்து கொள்வார்கள்.
அவன் காலத்திலும் நாட்டிலே பிராமணர் சைத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற நான்கு வருண மக்களுந்தான் இருந்தார்கள். அந்த நான்கு பிரிவிலும் படித்தவர்கள் நிறைய இருந்தார்கள்.
நூறாண்டுகளுக்கு முற்பட்ட ஆங்கிலேயர் போல அவன் ஒரு சாராரிடம் மட்டும் அதிகாரத்தை ஒப்படைத்து விடவில்லை. பலதடவைகள் சிந்தித்தான் அந்த மன்னன். முடிவு கிடைக்கவில்லை.
மந்திரிகளைக் கேட்டால் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயர்ப் பட்டியலைத் தருகின்றார்கள். அந்தப்புரம் சென்றால் அங்கும் ஆளுக்கு ஒரு பட்டியலை நீட்டுகின்றார்கள் மனைவிமார்கள். பெரும் போர்களை வென்று தந்த தளபதிகள் கூட யார் யாருக்காகவோ பதவி கேட்டுச் சிபார்சு செய்கின்றார்கள்.
யார் பேச்சைக் கேட்பது என்று மன்னன் தவித்துக் கொண்டிருந்த போது தான் மன்னனைக் காண்பதற்கு ஒளவை வருகின்றாள். அவளைக் கண்டதும் மிகவும் படித்த கிழவி அவளிடமாவது ஒரு முறை பேசிப் பார்க்கலாமா என்று தோன்றுகின்றது அரசனுக்கு.
யாருமில்லாத தனியிடத்துக்கு அவளை அழைத்துச் சென்று ஆச்சி எனக்கு இப்படியான பிரச்சனை வந்திருக்கின்றது என்று அனைத்தையும் ஒளவையிடம் சொல்லி எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லக்கூடிய அரசியல் அனுபவம் உனக்கு இருக்குமா என்று கேட்டான் அந்தச் சோழன்.
மன்னனே இந்த நான்கு வருணங்களதும் குணாதியங்களை முதலில் உனக்குச் சொல்லுகின்றேன் யாரை நியமிப்பது என்று நீயே முடிவு செய்து கொள்ளவேண்டும்.
முப்புரி நூலணிந்த பிராமணர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மிகவும் படித்தவர்கள். வடமொழியை மட்டுமே உயர்மொழியாகவும் தொன்மையானதாகவும் நம்புபவர்கள். வேதங்களைக் கற்று ஆகம நியதிப்படி நடப்பவர்கள். தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள். அவர்களை ஆட்சியதிகாரத்திலே இருத்தினால் ஒருநாட்டிலே மதச்சார்பின்மை படிப்படியாக மறைந்து ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரும்.
உன்னைப் போன்ற சைத்திரிய குலத்திலே பிறந்தவர்களுக்குப் பதவி கொடுத்தால் தங்கள் மூலதனமான அஞ்சாமையை வைத்துக் கொண்டு சின்னப் பிரச்சனைகளுக்கக் கூட கலகம் செய்து எப்பவும் பகையும் போர்களுமே நடக்க அதிகம் வாய்ப்பு ஏற்படுத்துவார்கள். சமாதானப் போக்கை எண்ண மாட்டார்கள் அது ஒரு நாட்டுக்கு நல்லதல்ல.
வைசியர்கள் வியாபாரிகளப்பா. அவர்கள் மனம் எப்போதும் செல்வத்தை பெருக்குவதிலும் பதுக்குவதிலும் தான் முனைந்து நிற்கும். ஆட்சியதிகாரத்துக்கு வந்தால் வரி விதிப்புகள் அதிகமாகும். மக்கள் வாழ்வு நலிவடைந்து வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடையும். மக்கள் உனது ஆட்சியை வெறுப்பார்கள்.
கடைசியாகக் காணப்படும் சூத்திரர்கள் என்பது பல குலப்பிரிவுகளை உள்ளடக்கியது. உழவுத் தொழில் செய்யும் வேளாளர்கள் முதற் கொண்டு கடினமான பல பணிகளைச் செய்யும் அடிமட்ட மக்களைக் கொண்ட பிரிவு அது.
அதிலே இருந்து அரசியல் பதவிகளுக்கு வருபவர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். அரசுடன் என்றுமே நல்ல வழிகளில் இணங்கி நடக்கத் தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.. அவர்களின் துணை ஒரு ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த நான்கு பிரிவினரைப் பற்றியும் நான் கொண்டிருக்கும் அபிப்பிராயம் இதுதான். இனி அரசன் என்ற முறையிலே நீ தீர்க்கமாக யோசித்து உன்னுடைய நாட்டுக்கும் ஆட்சிக்கும் மக்களுக்கும் யாரைப் பதவியில் அமர்த்தினால் அதிக நன்மை உண்டாகுமோ அவர்களை நியமனம் செய்வாயாக என்றாள் ஒளவை.
நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ அங்கே குடிசாயும் – நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு
(ஒளவையார் தனிப்பாடல்கள்)
இதன் பொருள்
நூலெனிலோ கோல்சாயும் – பூனூலணிந்த பிராமணர்களிடம் ஆட்சியதிகாரம் போனால் அவர்களால் நடுநிலையாக நிற்க வேண்டிய அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பக்கமே சாய்ந்து விடும்.
நுந்தமரேல் வெஞ்சமராம் – உனது அரச குலத்திலே பிறந்தவர்களுக்குப் பதவி கொடுத்தால் எதற்கெடுத்தாலும் தேவையற்ற கொடிய போர்கள் தூண்டப்பட்டு நாடு நலிவடையும்.
கோலெனிலோ அங்கே குடிசாயும் – நிறையை அளவிடும் தராசு கோலோடு சம்பந்தப்பட்ட வைசியருக்குப் பதவி கொடுத்தால் அனைத்துமே வியாபார எண்ணமாகி குடிமக்கள் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடையும்
நாலாவான் – நாலாவதாக இருக்கின்ற சூத்திரன்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் – மந்திரியாக பதவி வகிப்பதற்கும் பொருத்தமானவன் நம்பிக்கை உள்ளவனாக நடந்து ஒரு நல்லாட்சிக்கு வழித்துணையாகவும் வரக்கூடியவன்
அந்த அரசே அரசு – அவனை ஆட்சி மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசைத்தான் நல்ல அரசாங்கம் என்று சொல்ல முடியும்.
இது என்றோ ஒளவை பேசிய அரசியல். இன்றைய தென்னகச் சிக்கல்களுக்கு எல்லாம் என்றோ விடை சொல்லிப் போய்விட்டாள் அந்த மூதாட்டி.
இரா.சம்பந்தன்
(கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.2.2023) வெளியாகியிருக்கும் எனது கட்டுரை இது)