ஒற்றை ஈ!

ஈரநிலா! முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்களின் மகள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தந்தையைப் போலவே தமிழ் ஆர்வம் மிக்கவர். மனதில் பட்டதை எதுவித தயக்கமும் இன்றி எழுத்தில் கொண்டு வருபவர். வெல்லும் சொல் இன்மை அறிந்து எழுதும் ஈரநிலா சிலவேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் எழுதுவார். முகநூலில் ஒற்றை ஈ என்ற தலையங்கத்தில் அவர் எழுதிய நகைச்சுவைக் காட்சியொன்று இதுவாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. – இரா.சம்பந்தன்

அதோ அங்கே! இல்லை இங்கே இங்கே!
இப்படித்தான் நானும் இரண்டு நாட்களாக ஓர் ஒற்றை ஈயுடன் திருடன் போலீஸ் விளையாடிக் கொண்டிருக்கிறேன்!
இது நம் ஊர் களவாணிகளை விட சாதுர்யமானப் பிறவி! எப்படி உள்ளே நுழைந்தது என்றே தெரியவில்லை. எப்படியோ வந்துவிட்டது. என்ன செய்தாலும் வெளியே போவேனா என்று அடம் பிடிக்கிறது. அடித்து கொல்லலாம் என்றாலும் சிக்கமாட்டேன் என்கிறதே! பிடித்துவிட்டதாய் எண்ணி கசக்கினால் என் மூக்கின் முன்பு வந்து குத்தாட்டம் போடுகிறது. என்ன சமைத்தாலும் ,’நான் முதலில்’ என்று விருந்துண்ண வருகிறது. இரவில் ஈக்களுக்கு கண் தெரியாது என்பது உண்மையா? அப்படி ஒன்றும் தோன்றவில்லையே! நேற்று இரவு எங்களோடு நாற்காலியில் அமர்ந்து Wolf of Wall Street படம் பார்த்து விட்டு எங்கள் காதுகளில் விமர்சனத்தையும் ஓதிவிட்டுதான் எங்கோ உறங்கப் போனது. பொழுது விடிந்ததும் காபி குடிக்க குட் மார்னிங்குடன் வந்து சேர்ந்தது. வீட்டில் ஓர் உறுப்பினராய் தன்னை எண்ணிக்கொண்டிருக்கும் இந்தத் தொல்லையினை எப்படி வெளியே அனுப்புவது? கதவை திறந்து வைத்தால் துணைக்கு இதன் ஜோடியும் வந்து நுழைந்துவிடுமோ என்ற பயம் வேறு எனக்கு. அடச்சே …போயும் போயும் ஒரு ஈயைக் கூட துரத்த முடியாத நான் எதற்கு லாயக்கு? ஐயோ! அவமானம் தாங்க முடிய வில்லையே!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.