ஒன்றும் இல்லை உனக்கு!

வேலைவேலை வேலையென்று – விடியவோடி
வேலைக்கையில் வைத்ததெய்வ – விரத நாளில்
மாலைவந்து நேரமின்றிச் – சோறுசெய்து
மனைவிபிள்ளை அவர்களிடம் – கோபங்கொண்டு
சேலைகட்ட நூறுமுறை – ஏசிக்காரை
சீறவைத்து கோணடித்து – கோவில்சென்று
காலைவைத்த மறுகணமே – ஐயர்மீது
கடுப்புடனே அருச்சனையும் – ஒன்றுசெய்து
சாலையிலே முந்துகின்ற – காரைத்திட்டி
சாப்பாட்டு மேசைக்கே – முதலில் வந்து
மூலையிலே கிடந்ததெலாம் – கூட்டித்தள்ளி
முழுப்பசியும் தீர்ந்தவுடன் – முருகாவென்னும்
ஓலமுடன் முடிந்துவிட – விரதநாட்கள்
ஓராறு முகமுடையான் – சிரித்துக்கொண்டான்
ஓன்றுமிலை எனக்கையை – விரித்துக்கொண்டான்!
இரா.சம்பந்தன்