எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்!
எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்!
வேதிநெறி விநாயகரைக் கடலில் வீசும்
வேதனைநாள் சதுர்த்தியதன் முறைகேடு எல்லாம்
ஆதிநெறி ஈழமதில் இருந்த தில்லை…
அப்போதும் எப்போதும் எங்கள் வாழ்வில்!
கோதியணில் கொறிக்குமொரு மாவின் கோலம்
குடியிகுக்கும் அறுகின்புல் பிள்ளை யாரை
வீதிவழி எறிவதில்லை எங்கள் தேசம்
வீட்டினிலே பக்தியுடன் வைத்துக் கொள்ளும்!
பாதிவழி தனிலிப்போ புதிதாய் அந்தப்
பாதகத்தை செய்கின்றார் சிலபேர் அங்கே
நீதிநெறி தருமமெல்லாம் மறைந்த நாட்டை
நீங்கிவிட விநாயகரும் நினைத்தார் போலும்!
மோதுமலைக் கீரிமலைக் கடலில் வீழ்ந்து
முழுவதுமாய்த் தலைமூழ்கிக் கொண்டார் போலும்!
போதுமடா யாழ்ப்பாணம் போதும் என்று
போய்விடவே எண்ணிவிட்டார் போலும்! போலும்!
இரா. சம்பந்தன்.