எட்டு நிமிடங்கள் போதும்!
ஏணியெனத் தமிழ்மொழியைப் பிடித்து ஏறும்
ஏத்தனையோ மானுடர்கள் வாழும் நாட்டில்
கேணியென கால்நனைத்துச் சுகத்தைக் காணும்
கீழிருக்கும் மானுடன்யான் எனக்கு என்றும்
காணிநிலம் கேட்குமொரு எண்ணம் இல்லைக்
கடவுளிடம் ஒருபோதும்! மலரில் மேவும்
வாணியவள் நட்பொன்றே வாழ்வில் வேண்டும்
வரமாக அதைமட்டும் தருக என்பேன்
மேடைகளில் ஏறிநின்று குரைக்க மாட்டேன்
மேலவரை கீழவரைப் பிரித்தும் பாரேன்
கூடைகளில் புகழ்சுமந்து திரிய மாட்டேன்
கொள்கையிலா மனிதருடன் இருந்து பேசேன்
தாடையிலே மயிர்வளர்த்துச் சாமி போல
தமிழுக்கென் உழைப்பென்றும் சொல்ல மாட்டேன்
பாடையிலே போம்வரையும் உயிர்கள் கொன்று
படைப்பதெல்லாம் உண்ணாத நெறியில் நிற்பேன்!
பெண்கூந்தல் மணமுளதா என்று கேட்டு
பெரியதொகை ஆயிரம்பொன் மன்னன் வைக்க
மண்கூர்ந்த அறிவுமிகு கீரன் அந்தப்
மன்னனுக்குப் பாட்டெழுதாத் தன்மை போல
விண்கூந்த பரிசெனிலும் போட்டி என்றால்
விரலாலே தொடமாட்டேன் பேனா என்ற
பண்பாட்டைக் கொண்டவன்நான் அதனால் என்றும்
பரிசுகளைப் பெற்றதில்லை எழுத்துக் காக!
பட்டங்கள் கவிஞரெனச் சுமந்து வாழ்வோர்
பரிசுகளும் விருதுகளும் பெற்று சேர்ப்போர்
தொட்டதெல்லாம் புத்தகமாய் எழுதிப் போட்டு
தூதுவிட்டு முதல்பரிசு தட்டிக் கொள்வோர்
பெட்டியிலே பாம்பாகி மகுடி ஊதப்
பெரியபடம் எடுத்தாடும் அறிவில் மிக்கோர்
எட்டுவரை நாளெடுத்து எழுதும் பாட்டை
எழுதிவிடும் என்விரல்கள் நிமிடம் எட்டில்!