எங்கே நிற்கிறோம்?
தொல்காப்பியம் மரபியலிலே ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. குரங்கின் ஆணைக் கடுவன் எனவும் மரத்திலே வாழ்கின்ற கூகையைக் கோட்டான் எனவும் சிவந்த வாயினை உடைய கிளியை தத்தை எனவும் வௌ;விய வாயினை உடைய பூனையைப் பூசை எனவும் ஆண் குதிரையைச் சேவல் எனவும் கருமையான பன்றியை ஏனம் எனவும் ஆண் எருமையைக் கண்டி எனவும் குறிக்கும் சொற்கள் யாரும் மாற்ற முடியாமல் உலக வழக்கோடு கலந்து இருப்பதால் மொழிக்கு தாம் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்தவர்கள் இச் சொற்களையும் தவறு என்று விலக்கிவிட முடியாதவர்கள் ஆகிறார்கள்.
குரங்கின் ஏற்றைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும்
வௌ;வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமை ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த வழக்கின் உண்மையில்
கடியல் ஆகாது கடன் அறிந்தோர்க்கே!
இது தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முதல் சொன்ன செய்தியாகும். எமது தமிழ் மொழியிலே சில சொற்களை வேறு பெயர்களால் குறிப்பிட்டு அவை உலக வழக்கிலே பரவலாக ஏற்றக் கொள்ளப்பட்டு விட்டன. அவை எப்படி வந்தன என்பது முக்கியமல்ல. அவை எவ்வளவு ஆழமாக உலக வழக்கோடு கலந்து விட்டன என்பதையே பார்க்க வேண்டும். அதைக் சொன்னால் தான் பொருள் இலகுவாக விளங்கும் என்ற நிலை இருக்கும் போது மொழித் தூய்ம்மை வேற்று மொழி அது இது என்று சொல்லி இவற்றை விலக்கித் தமிழ் அறிஞர்கள் கடமை தவறக் கூடாது என்பது தொல்காப்பியர் கருத்து. அப்படி விலக்கினால் மொழி பின்தங்கி விடும்!
தொல்காப்யியம் எங்கள் சொத்து. தொல்காப்பியம் இல்லையென்றால் மொழி இல்லை நாங்கள் இல்லை என்று பெருமை பேசி தமிழ் ஆராய்ச்சி செய்யும் நாம் என்ன செய்திருக்க வேண்டும்? இதை ஏன் தொல்காப்பியர் சொன்னார் என்று சிந்தித்து அவர் காட்டிய வழியைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டும். புதிய மரபியலை பாடி தொல்காப்பியத்துக்கு வழி நூல் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யக கூடிய தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள்.
மையறு எழுதுகோல் பென்சில் என்றலும்
மையிடைத் தொடுவது பேனா என்றலும்
கணணிக் கடிதங்கள் ஈமெயில் என்றலும்
பேரூந்தென்பதை பஸ்சென உரைத்தலும்
கைத்தொலை பேசியை செல்லெனக் குறிப்பதும்
வான்பொழி பனியினைச் சினோ எனவழைப்பதும்
வறுபடு சோற்றினைப் புரியாணி என்பதும்
மோட்டார் வண்டியைக் காரெனக் குறிப்பதும்
படம்பயில் தட்டுக்கள் சிடி என்றலும்
வருகிறேன் என்பது இறங்குதல் ஆதலும்
எடுக்கிறேன் தொலைபேசி அடிக்கிறேன் ஆவதும்
மெய்யெழுத் தெல்லாம் மொழிமுதல் ஆவதும்
ஆழிப் பேரலை சுனாமி ஆனதும்
தமிழ்நிலம் விலக்pய வழக்காறு ஆகையால்
தடுத்தல் ஆகாது தமிழ் அறிந்தோர்க்கே!
என்று தமிழ் வழக்கிலே உள்ள வேற்று மொழிப் பிரயோகங்களை உலகம் முழுவதும் தேடி இலக்கணம் செய்திருக்க வெண்டும். நாம் ஆங்கிலப் பகுதியில் வாழ்வதால் உதாரணத்துக்க இப்படி ஆங்கிலச் சொற்களின் கலப்பைக் குறிக்கின்றோம்!
எத்தனையோ நாடுகள் எத்தனையோ மொழிகள் பேசும் இடங்களுக்கெல்லாம் நாம் துரத்தப்பட்டு இருக்கின்றோம். அங்கெல்லாம் உள்ள எங்களின் தமிழ் வழக்கையும் ஆராய வேண்டும். இவற்றுக் கெல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் இருக்கின்றனவே என்று பலர் சொல்லலாம். இருந்தாலும் வழக்கிலே அவைகள் பேசப்படுவது இல்லை. ஆங்கில மொழிச் சொற்கள் மட்டுமல்ல தமிழர் வாழும் அனைத்து நாட்டுச் சொற்களும் தமிழில் இன்று கலந்து உள்ளன. அவற்றின் எண்ணிக்கை கூடிக் குறையலாம். ஆனால் பிரிக்க முடியாதவாறு எம்முடன் கலந்துதான் இருக்கின்றன. அவற்றை நாள் தோறும் எம்மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
அவற்றுக்கு அறிமுகம் தேவை. சென்னைத் தமிழும் பல சொற்களைத் தோற்றுவித்து இருக்கின்றது. உதாரணமாக பிடிபட்டார் என்பதைச் சிக்கினார் என்கிறார்கள். அவை எப்படி உருவாயின என்று ஆய்வு செய்வதில் அர்த்தம் இல்லை. இன்றைய தமிழில் அந்தச் சொற்களின் பயன்பாடு தேவையாக இருக்கின்றது. அதை விலக்கினால் விளக்கமின்மைக்கு உள்ளாகும் சமூகம் ஒன்று இருக்கின்றது.
இதைச் செய்யத் தவறுவோமாகில் புலம்பெயர் தமிழ் என்று ஒன்று உருவாகி அது கிளைத் தமிழாக வழக்குப் பெற்று இப்போதுள்ள தமிழை எம் அடுத்த சந்ததியிடம் இருந்து அன்னியப் படுத்திவிடும்! இறுதியில் அடிப்படையே இல்லாத கிளைத் தமிழும் கரைந்து பழைய தமிழும் புரியாமல் புலம்பெயர் சமுதாயம் முழுவதுமே உலகம் முழுவதும் தாம் வாழும் நாடுகள் சார்ந்த மொழிகளை தம் வழக்காகக் கொண்டு இசைந்து வாழப் பழகிவிடும்!
ஒரு மொழி அடையும் மாற்றத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பது தான் இலக்கணம். இலக்கணத்துக்கு வளைந்து கொடுக்கும் மொழி உலகில் எங்கும் இல்லை. காரணம் இலக்கணத்துக்கு வளைந்து கொடுக்கும் மொழி உலகத்தில் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை! இதை உணர்ந்துதான் தொல்காப்பியர் தான் வகுத்த இலக்கணத்துக்கு தானே புறநடைகளும் சொல்லிவிட்டுப் போனார்!
தொல்காப்பியர் தூவிச் சென்ற புறநடை என்னும் வித்துக்களிலிந்து துளிர்விட வேண்டியதே வருங்கால இலக்கணம் என்பதை தமிழ் உலகம் உணர்ந்திருக்க வேண்டிய காலகட்டம் பலநூற்றாண்டுகள் தள்ளிப் போய்விட்டது என்பதே கசப்பான உண்மையாகும்.