இலட்சியங்கள் சாவதில்லை

 

 

கனரக ஆயுதங்களில் சிலவற்றையும் முப்பது போராளிகளையும் வைத்துக் கொண்டு திரும்பவும் இவ்வளவு சீக்கிரமாக அந்த முகாம் மீது தாக்குதல் தொடுக்க முடியுமென்று நவம் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

 

ஏற்கனவே அனுபவம் வாய்ந்த தளபதிகளால் இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட யுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது மட்டுமல்ல இயக்கத்துக்கும் பலத்த இழப்புகளை ஏற்படுத்தியிருந்தன

 

அந்த முகாமைப் பொறுத்த வரை இயக்கம் அடைந்து விட்ட பின்னடைவுகளை விட அந்த முகாமிலுள்ள இராணுவத்தினரின் அடாவடித்தனங்களே தலைவர் மனதைப் பெரிதும் பாதித்திருக்க வேண்டும்.

 

அதனாலோ என்னவோ அந்த பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலும் இறுதிவரை எதுவுமே பேசாமல் இருந்தவர் கடைசியி;ல் நவம் நீஙகள் கொஞ்சக் காலம் அந்தத் தளப் பொறுப்பை எடுங்கோ. நீங்கள் யாராவது அங்கே இருந்தால் தான் முறையான பாடம் ஒன்று படிப்பிக்கலாம் என்று இறுகிய முகத்துடன் சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார்

 

 

அவர் இவ்வளவு வேகமாகப் பேசியதை நவம் இதுவரை பார்த்ததில்லை. சரித்திரம் படைத்து விட்ட எத்தனையோ முகாங்களின் முழுமைத் தகர்ப்பிற்கு முடிவு செய்யப்பட்ட பரபரப்பான சுழ்நிலைகளில் கூட எதுவித சலனமும் இன்றி போய் அடிச்சுப் போட்டு வாங்கோ என்று சர்வசாதாரணமாக சொல்லி அனுப்பிய மனுசன் இப்படிக் கைகள் கூடத் துடித்துப் பேசியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

 

இராணுவம் கோழி பிடித்து ஆடு பிடித்து விளையாடிய போது எல்லாம் போனால் போகட்டும் என்று விட்ட இயக்கத்தால் பள்ளிக்குப் போன பிள்ளைக்குச் செய்த கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை.

 

நவத்திற்கு அந்த முகாமைப் பற்றி நன்றாகவே தெரியும். அவனின் சொந்த ஊரிலேயே அமைந்து விட்ட முகாம் என்பதை விட இயக்கத்திற்குச் சவாலாக அமைந்து விட்ட முகாம் என்ற வகையிலேயே அவன் கூடுதலாகத் தெரிந்து வைத்திருந்தான்.

 

அந்த இடத்திலே இராணுவத்தினர் முகாம் அமைக்கிறார்கள் என்று செய்தி வெளியான போதே இப்பொழுது அதனைத் தடுக்காது போனால் பின்னாலே அடிக்கிறது கடினமாகப் போய்விடும் என்று அவன் எழுதிய அவசரக் குறிப்புக் கூட இன்னமும் தலைமையகத்தில் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு இயற்கைச் சுழலால் பாதுகாக்கப்பட்டிருந்தது அந்த முகாம்.

 

மூலைவிட்டம் போலப் பரந்து வந்து ஓரிடத்தி;ல் கூராக முடியும் கடல். எத்தனை வள்ளங்களில் பரந்து வந்தாலும் முகாமை நெருங்கும் போது ஓரிடத்தி;ல் குவிந்துதான் ஆக வேண்டிய அவலம். சிங்களக் குடியேற்ற வாசிகளும் அவர்களுக்குச் சொந்தமான கரும்புத் தோட்டங்களும்; ஒருபுறம்.

 

முன்னணிக் காவலரண்களைக் கொண்டிராது ஒரே முகாமாக அமைந்து ஊடுருவல்களைத் தடுத்து நிற்கும் தந்திரம். மரங்களை வெட்டியும் வீடுகளை இடித்தும் சமப்படுத்தப்பட்ட முன்புறப் பரப்பு. அதிலே பெருமளவு போராளிகளைக் கொண்டு சென்று இறக்க முடியாத பரிதாபம்.

 

தாக்குதல் தொடங்கிய உடனேயே உதவிக்கு விரையக் கூடிய வகையி;ல் கட்டுப்பாடு மிக்க தரைப் பாதை என்று தாக்குதலுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத இடத்தில் அமைந்து சிரித்துக் கொண்டிருந்தது அந்த முகாம்.

 

நீங்கள் யாராவது அங்கே இரு;நதால் தான் என்று தலைவர் சொன்னது தன்மீது அவருக்கு இருந்த நம்பி;க்கை மட்டுமல்ல நம்பிக்கை என்ற சாக்கிலே தரப்பட்ட சுமையாகவும் தெரிந்தது நவத்திற்கு.

 

அந்தச் சுமையைக் கூட எடேய் நவம் அண்ணை அந்தத் தளப் பொறுப்பு எடுக்குது இனி ஆமிக் காரன் அங்கே இருந்த மாதிரித் தான். அந்தாள் சும்மா ஈழ நாதத்தையும் சுதந்திரப் பறவையையும் வாசிச்சுக் கொண்டு திரியும். ஆனால் கையிலே ஆயுதம் எடுத்தால் ஒரு ஆமி தப்பாது என்று போராளிகள் பேசிக் கொள்ளும் பேச்சுக்கள் மிகவும் எளிமை ஆக்கி விடும்.

 

முன்பு ஒரு முறை களம் செல்ல அனுமதி கேட்ட போது என்ன நவம் நீங்கள் எல்லாரும் இப்பவே களத்திலே இறங்கினால் இறுதி யுத்தத்தை யார் நடத்துறது? யாழ்ப்பாணத்தை ஆமியிட்டை அப்படியே விடுகிற யோசனையோ?

 

இப்ப ஒன்றும் வேண்டாம் என்ன? என்று முதுகிலே தட்டிவிட்டுப் போன தலைவரே வலியக் கூப்பிட்டு அனுப்பும் போது அந்த நம்பிக்கைக்கு நியாயம் காண்பிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது அவனுக்கு.

 

பலாலி அல்லது திருகோணமலைப் படையெடுப்புக்கு அநேகமாக நீர் தான் தலைமை தாங்க வேண்டி வரும் என்று தலைவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லும் போது எல்லாம் இடையிடையே களத்தில் இறங்கி இராணுவத்தின் பலத்தையும் பலவீனங்களையும் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணமும் அவனுள்ளே எழுவதுண்டு.

 

போராளிகள் இரு பிரிவுகளாகச் சென்று அந்த முகாமைச் சுற்றி வளைக்கத் தொடங்குகின்றார்கள். நீட்டிய ஆயுதங்கள் முகாமைக் குறி பார்க்கக் கரும்புத் தோட்டத்துள் நுழைந்த ஒரு பகுதியினர் அதனைக் கடந்து நாயுருவி, போத்தல் ஓடு, மாட்டுச் சாணம், சிறு கற்கள், ரின்பால் பேணி, தென் ஈக்கு என்று நிலங்கிடக்கும் அத்தனை பொருட்களிலும் மேனிபடத் தவழ்ந்து சென்று முள்ளுக் கம்பி வேலியுடன் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

 

இன்னொரு பிரிவினரும் கடற்கரைத் தாழை மரங்களையும் சதுப்பு நிலத்தையும் கடந்து தாங்கள் மட்டுமன்றிப் பாரிய ஆயுதங்கள் சிலவற்றையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு பின்புறமாகப் பதுங்கிக் கொள்கிறார்கள்.

 

துணைக்கு வந்த இரு தற்கொலைப் பிரிவினரும் கூட தாம் யுத்தத்தை ஆரம்பித்து வைக்க வெண்டிய இராணுவ இலக்குகளை இனங் கண்டு கொண்டு மோதுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.  இரு நிச்சயச் சாவுகளுடன் ஈழப் போர் ஒன்று தொடங்கப் போகின்றது.

 

அவர்கள் அனைவரையும் நுளம்புகள் மூக்கு நுனியிலும் காது மடல்களிலும் புறங்கைகளிலும் கடிக்கத் தொடங்கி விட்டன.  அவற்றைக் கூட அடித்து ஓசை எழுப்பி விடாது தடவி உருட்டிக் கொண்டு நவத்தின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.

 

நிமிடத்துக்கு ஒரு தடவை தன்னைக் கடந்து செல்லும் முகாமின் தேடுதல் வெளிச்சத்தில் சிக்கி விடாது அசைவற்றுக் கிடந்த நவத்தின் மனதிலே ஆயிரம் சிந்தனைகள். நேரம் எடுக்காமல் கடவுளே என்று இது முடிந்து விட வேணும். அழித்தொழிப்பு ஆயுதப் பறிப்பு சேதமற்ற படையணி என்று மூன்று வகையிலும் எனக்கு கடவுளே வெற்றியைக் கொடு

 

அண்ணே ஏன் தாமதிக்கிறம் விடிஞ்சால் இலக்கு வைத்துக் குண்டு போட்டிடுவான்கள் அண்ணே! முகாமைப் பின்புறமாக சுற்றி வளைத்திருக்கும் விக்கி என்ற போராளியிடம் இருந்து பதட்டமான குரல் தொலைக் கருவியில்.

 

நவம் எதுவுமே பேசவில்லை. நீண்ட பெருமூச்சு மட்டும் அவனிடம் இருந்து எழுந்து அடங்குகின்றது. இப்பொழுது எல்லாம் அவன் சிந்தனை அப்பு வருமா? என்ற கேள்வியிலேயே தரித்து நிற்கின்றது. அப்பு மட்டும் சொன்னபடி நடந்தால்?…

 

இந்த யுத்தத்தின் விளைவுகள் இராணுவ ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் அரசுக்கும் சிங்கள் மக்களுக்கும் ஒரு படிப்பினையைக் கொடுக்கும்.

 

அந்த முகாம் தாக்குதலுக்குக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு ஊரிலே அடிக்கடி நவம் தலைகாட்டத் தொடங்கிய சமயம், அம்மா தேடி வந்து ஒரு நாள் அழுதாள்.

 

மோனே பாப்பாத்தியின்ரை குஞ்சன் இருக்கிறானல்லே, அவன் தான் அப்பு. முந்தி எத்தனை பேரைச் சுட்டுத் தள்ளினவன். இப்ப திருந்தி குடியும் குடித்தனமுமாக இருக்கிறான் தானே. நீ ஏன் ராசா ஊர் ஊராக அலையுறாய்?

 

அம்மா தங்கச்சி ஆக்கள் இருக்கினம். படுத்த படுக்கைiயாய் அப்பா கிடக்கிறார் என்ற நினைப்புத் தான் இல்லாமல் போனாலும் உன்னை நம்பி ஒரு பெண்ணாய்ப் பிறந்தவளும் இரண்டு குஞ்சுகளும் எல்லோ இருக்கு. அதையாவது நினையன் ராசா. உனக்கு ஏன் இந்த வேலை எல்லாம்?

 

அம்மா அன்று சொன்ன அப்பு என்ற வார்த்தைகள் அவன் மனதை உலுக்கின. அப்பு திருந்தி விட்டானா? மாற்று இயக்கத்தில் இருந்து கொண்டு எம்மவர்களுக்கு இணையான வீரனாக விவேகியாக ஏன் தலை சிறந்த தளபதியாக விளங்கிய அப்பு பல வெளிநாடுகளில்; இராணுவப் பயிற்சி பெற்றவன்.

 

அவன் எங்கள் இயக்கத்திலே இருந்திருந்தால் பல முகாம்களின் தகர்ப்பிற்கு மூலகாரணியாக இருந்திருப்பான். அவன் வேறு இடத்திலே இருப்பது எனக்கு அவ்வளவு சந்தோசமில்லை. போகட்டும்! எங்கிருந்தாலும் அவன் கெட்டிக்காரன் தான் என்று நவம் மனந்திறந்து பாராட்டியிருக்கிறான் நண்பர்களிடம்.

 

அம்மா அப்பு என்ன செய்யறான்?

 

என்ன மோனை செய்யிறது. முடிச்சிட்டான். பொம்பிளைப் பிள்ளை ஒன்று. சாப்பாட்டுக் கஸ்டம் தான். கூலி வேலைக்குப் போறவன். ஏதோ கான்சரோ லோஞ்சரோ என்ன இழவோ அது அடிக்கிறதிலே அவனைக் கெட்டிக்காரன் என்றெல்லோ முந்திக் கதைச்சவை.

 

நான் அப்புவைப் பார்க்க வேணும் அம்மா.

 

நீ அங்கே போய் பாப்பாத்தியிட்டை ஏச்சு வாங்காதே மோனை.

 

அவனை நவம் தேடுறன் என்று ஒருக்கால் சொல்லு என்ன?

 

ஒரு காலத்திலே ஒரு கோப்பையிலே சாப்பிட்டு ஒன்றாய்க் கட்டிப் பிடிச்சுக் கொண்டு திரிஞ்ச நீங்கள் பிறகு இயக்கம் மாறி இருந்து கொண்டு உன்னை அவன் சுட்டுப் போடுறானோ? அவனை நீ சுட்டுப் போடுறியோ என்று கொஞ்சக் காலம் நெஞ்சை நடுங்கவல்லோ வைச்சனியள்.

 

பிறகு என்ன? அவரவர் பாட்டிலை இருங்கோ. அம்மா பழையதை மறக்காமல் அப்படியே சொன்னாள். நவத்திற்கு அந்தப் பகை நாட்கள் விருப்பமானவை அல்ல. கெட்ட கனவாக மறந்து போயிருந்ததை அம்மா ஞாபகப் படுத்தி விட்டாள்.

 

பள்ளிக் கூட நாட்களில் சந்தித்த அதே பவளக் குளம் படிக்கட்டு, தாமரைக் கொடி இப்போது இடிந்த கோயில் என்று அந்தச் சு10ழல் மாறிவிட்டாலும் அப்புவிடம் மாற்றமில்லை என்பதை அவன் குளப் படிக்கட்டிலே சாய்ந்திருந்த விதம் காட்டியது.

 

அப்பு!

 

சொல்லு நவம்.

 

நான் உன்னைக் கூப்பிட்டது இயக்கம் சம்பந்தமா ஒரு உதவி கேட்டுத் தான். செய்வியா?

 

நீங்கள் தானே பெரிய கில்லாடிகள்! என்னாலே செய்ய முடியாது என்று தெரிந்தால் நீ கேட்க மாட்டாய் தானே! என்ன என்று சொல்லு?

 

அப்பு பழைய பகையை மற! ஆயுதப் போராட்டத்திலே முந்துகிற கைக்கு வாய்ப்பு அது தான் உங்கள் விசயத்திலே நடந்தது.

 

அது சரியடா நவம். தரும நியாயங்களையும் நீங்கள் பார்த்திருக்க வேணும்! உங்களுடைய ஆட்கள் எத்தனை பேரை சந்தர்ப்பம் கிடைச்சும் நான் கொல்லாமல் விட்டிருப்பேன் தெரியுமா?

 

அப்பு இதைக் கேள்! எங்களிடம் உனக்கு விசுவாசம் இல்லை என்றாலும் இவ்வளவு உயிர்ச் சேதத்துக்குப் பின்பும் கூட போராடுகிறோம் என்ற வகையில் அனுதாபம் ஏதாவது உண்டா? இருக்குமா?

 

நிச்சயமாக!

 

அப்படியென்றால் நீங்கள் எமக்குச் செய்தது நாங்கள் உங்களுக்குச் செய்தது எல்லாவற்றையும் தூக்கி ஒருபக்கம் வைத்து விட்டு எனக்கு ஒரு உதவி செய்.

 

செய்யிறன் சொல்லு

 

இங்கே இருக்கிற ஆமியை அடிக்கப் போறம். ஆனால் ஆட்கள் முப்பது பேர் தான் இருக்கினம். இரண்டாகப் பிரிஞ்சு இரு வளத்தாலே அடிச்சாலும் உதவிக்கு வாற இராணுவத்தை தடுக்க வசதியி;ல்லை. மேலிடத்தைக் கேட்கவும் விருப்பமில்லை. அவர்களும் ஆட்கள் தட்டுப் பாடாக இருக்கினம். அதுதான்.

 

நவம் மெதுவாக இழுத்தான். பிறவி நட்புக்கு முன்னால் இயக்கப் பாரம்பரியத்தின் முதற் கொள்கையான இரகசியங்களை காப்பாற்றுதல் என்ற முக்கிய பழக்கம் காற்றில் பறக்க தளபதியாக இல்லாமல் சாதாரணமான மனிதனாக நின்றான் நவம். தான் செய்வது தவறா சரியா என்று கூட அவனுக்கத் தெரியவில்லை!

 

ஏய் நவம் இவன்களை நீங்கள் ஏன் இன்னமும் விட்டு வைத்திருக்கிறீர்கள் என்று நானும் சில வேளை யோசிக்கிறனான். இந்தச் சனங்களுக்கு இவன்கள் செய்யுற அட்டூழியம்! அடிச்சுக் கலைக்க வெணுமடா!

 

பார்த்தியே உனக்கே அந்த எண்ணம் இருக்கடா அப்பு.

 

 

நான் ஆயுதம் எடுத்தது இந்தச் சனங்களுக்காகத் தான் நவம். நான் இருந்த இயக்கத்திலே தவறுகள் இருக்கலாம். ஆனால் என்னைப் போல ஒருசிலரும் இருந்தார்கள். பின் யோசனை இன்றி எல்லாரையும் முடித்துப் போட்டீர்கள். அதுகளை விடுவோம்.

 

நவத்தார் இன்றைய சு10ழ்நிலையிலே உங்களைப ் பழிவாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எந்த இயக்கம் என்றாலும் செயற்பட்டால் அது தமிழ் மக்களைப் பழிவாங்கும் தன்மையிலே முடிகிறது. உண்மையும் அது தான். அதனால் நான் மக்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்க ஒதுங்கி இருக்கிறேன். சரி நீ கேட்கிறாய். செய்யிறன்.

 

ஊங்களிடம் இருந்து தப்பிய நாங்கள் பதின்மூன்று பேர் எங்கள் மக்களுக்காக எப்படி என்றாலும் உதவ வேண்டும் என்ற மன நிலையில் இருக்கிறம். இயன்ற வரை உதவிக்கு வாற படையைத் தடுக்கிறோம்.

 

அவ்வளவும் காணும் அப்பு. ஆயுதம் போதியளவு இருக்குது. தாக்குதல் எப்ப என்றாலும் முதல் நாள் இரவு போதிய ஆயுதம் உங்களுக்குத் தருவோம் சரிதானே!

 

அதுவரை நேரமும் சுயாதீனமாகத் தொங்கிக் கொண்டிருந்த தொப்பியின் பட்டியினை இழுத்து நவம் காதை மூடிக் கட்டும் போது தான் ‘கீக் கீக்’ என்று பச்சை வெளிச்சத்துடன் ஒலியெழுப்பியது தொலைக் கருவி.

 

கலோ நவம். அப்பு கதைக்கிறன். இறங்கும் ஓவர்.

 

புதிய தெம்பும் உறுதியும் கைகளில் தவழ தொலைக் கருவியில் விக்கி அடியும் என்று நவம் சொல்லி வாய் மூடுவதற்குள் முகாமின் பின்புறமிருந்து செல் ஒன்று சீறிக் கொண்டு சென்று முகாமின் நடுவில் விழுந்து வெடிக்கிறது.

 

இயந்திரத் துப்பாக்கியை இயக்கிக் கொண்டு முன்னேறத் தொடங்கினான் நவம். அவனின் உத்தரவு கிடைக்காததால் தற்கொலைப் பிரிவினர் இருவரும் பின்வாங்கி நகருகிறார்கள்.

 

நவம் அண்ணே! தற்கொலைப் போராளிகள் என்றான் ஒரு போராளி குழப்பத்துடன்.

 

அதுகள் பாவங்கள்! பின்னுக்கு போகச் சொல்லு. எங்களாலே முடியாவிட்டால் பார்ப்போம்.

 

தீப்பிழம்பு அவலம் சிங்களக் குரல்கள் எதையும் பொருட்படுத்தாமல் பின்புறமிருந்து தொடர்ந்து வரும் செல்களின் உக்கிரம் தாங்க முடியாமல் இராணுவம் சிதறத் தொடங்குகிறது. நவம் குறிபார்த்துச் சுடத் தொடங்குகிறான்.

 

அண்ணே! நாங்கள் உள்ளே போகிறோம் என்ற படியே அவனுடன் வந்தவர்கள் நகருகிறார்கள். அப்போது தான் நவம் பார்த்தான் வான் நோக்கி ஒரு லோன்சர் வெளிச்சம். அது செய்திக் கோபுரத்தைச் சாய்க்கிறது.

 

அப்பு! உனக்கு நன்றி அப்பு. தொடர்ந்து இராணுவ நிலைகளை நோக்கி ரோஞ்சர் ரொக்கட் தாக்குதல்கள். அது செல்லா மழையா என்று தெரியவில்லை.

 

முழுமையான வெற்றி. நிறைந்த ஆயுதங்கள் தற்கொலைப் பிரிவினர் உட்பட பலருக்கு காயங்களே தவிர உயிரழிவு இல்லை. நவம் உத்தரவு பிறப்பிக்க தாக்குதல் நிறுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்குகிறது. ஒரு பகுதியினர் இராணுவத்தை; தேடி அழிக்க  இன்னொரு பிரிவினர் ஆயுதங்களை அள்ளிக் கொள்கிறார்கள்.

 

தூரத்தே பயங்கர யுத்தம் நிகழ்கிறது. ஆம்! இராணுவம் தரை வழியாக நகர்வைத் தொடங்கி விட்டது. இனி எல்லாம் அப்புவின் கையில். அவன் அவர்களை எவ்வளவு நேரம் தடுத்து வைக்கிறானோ அந்த அளவிற்கு ஆயுதங்களும் போராளிகளின் உயிரும் இறுதி நிலையிலும் காப்பாற்றப்படும். இராணுவம் நெருங்கும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்ற கருத்தோடு நின்ற நவத்திக்கு எந்;த வித முடிவும் தெரியவி;ல்லை.

 

ஒரு போராளியை அழைத்துக் கொண்டு அங்கு நின்ற வண்டியொன்றில் முகப்பு வழியாக புறப்பட்டு சில மைல்கள் நகர்ந்து பார்த்த போது அவனால் எதையுமே நம்ப முடியவில்லை.

 

உதவிக்கு வந்த பல நூற்றுக் கணக்கான ஆயுதம் தாங்கிய இராணுவ வீரர்களும் கவச வாகனங்களும் சின்னாபின்னாபடுத்தப்பட்டிருந்த காட்சி மனதை தம்பிக்க வைத்தது. சீனத் தயாரிப்புகளான பீரங்கிகள் பல ரொக்கட் தாக்குதலுக்கு இலக்காகி எரிந்து கொண்டிருந்தன.

 

வாகனத்தில் எழுந்து நின்று கொண்டு விக்கி எல்லாரும் நகருங்கோ என்று உத்தரவு கொடுத்துவிட்டு விரைவாக அப்பு சொன்ன ரகசிய நம்பருக்கு தொடர்பு கொண்டான்

 

கலோ அப்புவா

 

இல்லை அண்ணே அவர் விழுந்திட்டார். உடல் எடுக்க முடியாமல் போட்டுது. அவர் முன்னுக்கு நிலை எடுத்தவர். எல்லாம் முடிஞ்ச பிறகுதான் எதிர்பாராமல் தாக்குப் பட்டிருக்கிறார். சோகம் கப்பிய குரலோடு அவர்கள் சொன்னார்கள்.

 

தம்பிகாள்! நீங்கள் பாதுகாப்பாக உங்கள் இடங்களுக்குப் போங்கோ. நான் ஆறுதலாகக் கதைக்கிறன்.

 

ஆயுதங்களைப் போட்டு விட்டு இருக்கையில் சாய்ந்தான் நவம். உலகமே இருண்டு போனது போல இருந்தது அவனுக்கு. அப்பு நீ எங்கேயடா என்று நினப்பதற்குள்ளாகவே கண்களில் இருந்து உருண்டது கண்ணீர்.

 

தற்கொலைத் தாக்குதல் வேண்டாம் நான் இருக்கிறன் என்று சொன்னியே அப்பு. இப்ப நாங்கள் எல்லாரும் இருக்க நீ போய் விட்டியே! அப்பு அழிஞ்சது நீ மட்டும் இல்லையடா. நான் கட்டிய ஒற்றுமைக் கோட்டையும் அழிஞ்சு போச்சே.

 

இயக்கங்கள் என்ற பேதம் விடுத்து இன்னலுறும் தமிழ்ச் சாதிக்கு உழைக்க நீ முன்வந்து விட்டது ஒரு திருப்பு முனையென்று நினைத்தேனே! எல்லாம் முடிந்து விட்டதே என்று நினைக்க என்னாலே பொறுக்க முடியவி;ல்லையே. அப்பு நீ எங்கள் உடையவன்.

 

நீ எந்த இயக்கம் என்றாலும் இன்று முதல்  எங்கள் உடையவன். நவம் வீராவேசத்துடன் தொலைத் தொடர்புக் கருவியைக் கையில் எடுத்தான்.

 

விக்கி இந்த ஊரிலே எங்கே எங்கள் இயக்கக் கொடி பறந்தாலும் உடனடியாக அரைக் கம்பத்துக்கு இறக்கச் சொல்லும்.

 

ஆயுதங்களைக் களஞ்சியப் படுத்தும்படி அறிவுறுத்தி விட்டு தன் இருப்பிடம் சென்ற நவத்துக்கு மனம் கனத்துக் கொண்டே இருந்தது. பாப்பாத்தி அக்கா குழைத்துத் தந்த பழஞ்சோறு ஞாபகத்துக்கு வருகிறது. இலாம்பு வெளிச்சத்தில் அப்புவோடு இருந்து படித்தது நினைவுக்கு வருகின்றது.

 

எங்களைப் பத்திரப்படுத்தி விட்டு தன்னுயிரைக் கொடுத்த அப்புவை அன்றைக்கே நான் சுட்டுக் கொன்றிருந்தால் ஒரு வீரம் தமிழ்த் தேசத்துக்கப் பயன்படாமல் தானே போயிருக்கும்?

 

ஒரு இதயத்தைப் புரிந்து கொள்ளாமல் தானே போயிருப்போம்? கொள்கை முடிவுகள் எடுக்கும் போது சில தனிமனித உணர்வுகளை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை?

 

நாம் அழித்த நல்லவர்கள் எத்தனை பேர்? படை கொண்டார் நெஞ்சம் எப்பவும் நல்லதை நினைக்காது என்று வள்ளுவர் சொன்னது இதைத் தானா? கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக நவத்தைத் துளைத்து எடுத்தன.

 

மறுநாள் தலைமைச் செயலகத்துக்கச் செல்லும் போது தெருவெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப் பார்த்தான் நவம். கேணல் அப்பு என்ற கனகசுந்தரம் அம்பிகைபாகனுக்கு வீர வணக்கம் என்றிருந்தது.

 

கடவுளே அப்பு இருந்த இயக்கத்தின் கொடியோடு எங்கள் இயக்கத்தின் கொடியையும் இணைத்து மாற்று இயக்கத்தில் இருந்து கொண்டு ஒரு கிராம மக்களின் நலனுக்காக போராடி உயிர் துறந்த மாவீரன் கேணல்.அப்பு என்ற  கனகசுந்தரம் அம்பிகைபாகன் அவர்களுக்கு வீரவணக்கம் என்று அந்த சுவரொட்டி எழுதப்பட்டிருக்குமானால் அது தான் அப்புவுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருந்திருக்கும்!

 

அப்படி எழுத விடாமல் தடுத்தது எது? நிச்சயமாக அது ஒரு மன உணர்வு தான்! முகாம் அழிப்புக்கு முதல் நாம் எம் மனதில் முகாமிட்டிருக்கும் இந்த உணர்வுகளைத் தான் முதலில் அழித்திருக்க வெண்டும்! இதை யாருக்குச் சொல்வது?

 

சில மனிதர்கள் அழிந்து போகலாம் அவர்கள் விதைக்கும் இலட்சியங்கள் செத்துப் போவதில்லை. தீர்க்கமான மனத்துடன் சுவரொட்டியில் இருந்த அப்புவை பார்த்துக் கொண்டே இருந்தான் நவம்! போராளியாக அல்ல. மறைந்து போய்விட்ட நண்பனாக!

 

 

 

-முற்றும்-

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.