இரட்டைத் திருக்குறள்கள்!

தமிழர் இனத்தையும் குணத்தையும் துல்லியயமாக எடைபோட்ட இலக்கியவாதி திருவள்ளுவர். கயவரையும் காமுகரையும் கள்வரையும் ஏமாற்றுக் காரரையும் நம்பிக்கைத் துரோகிகளையும் திருக்குறள் எதிர்த்த அளவுக்கு வேறு எந்த நூலும் தமிழில் எதிர்க்கவில்லை.

குற்றங்களிலே பிராயச்சித்தம் இல்லாத குற்றம் என்று செய்நன்றி மறத்தலைச் சொன்ன இலக்கியம் திருக்குறள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்று எழுதிவிட்டுப் போனவர் திருவள்ளுவர்.

ஒரு தேவையைப் போய்ச் சொன்ன உடனேயே நல்லவர்கள் உதவுவார்கள். இந்தக் கெட்டவர்;கள் அப்படியல்ல. அவர்;களை தொழிற்சாலையிலே கரும்பு பிழிவது போலப் பிழிந்து கொன்றால்தான் சரிப்பட்டு வருவார்கள் என்று எந்தவித தயவும் காட்டாமல் எழுதியவரும் வள்ளுவர்தான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்!

திருவள்ளுவருக்குத் தெரியாத சமுதாயக் குறை நிறைகள் இல்லை. இன்றைக்கு சாமியார்களின் அலங்கோலத்தைப் பரவலாகப் பார்க்கின்றோம். இந்த லீலைகளை எல்லாம் வள்ளுவர் தெரிந்து வைத்திருக்கின்றார்.

மனத்திலே அழுக்கை வைத்துக் கொண்டு தாம் ஏதோ பெரிய துறவி போல தூய நீரிலே குளித்து மறைவாக பல இழிசெயல்களில் ஈடுபடும் பலரைத் தனக்கத் தெரியும் என்கிறார் வள்ளுவர்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
என்று சாமியார் விடயத்தில் அலுத்துக் கொண்டவர் திருவள்ளுவர்.

மனிதனாக இருந்தாலும் சரி பிற உயிர்களாக இருந்தாலும் சரி எல்லாரும் நினைப்பது போல பிறக்கும் போது சாதி முத்திரையோடு பிறப்பது கிடையாது. ஆனால் செய்கிற தொழிலை வைத்து சாதி ஏற்றத்தாழ்வு வந்து விடுகிறது. பிறப்பிலே இல்லாத சாதிக்கு தனியான அதிகாரம் வகுத்து குறள் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பாமல் விட்டவர் வள்ளுவர்.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வாது
செய்தொழில் வேற்றுமை யான்

சாதிக்கு பிறப்பு பிரச்சனை அல்ல. தொழில்தான் பிரச்சனையாக இருக்கிறது என்ற திருக்குறள் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் யாராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை.

அப்படிப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ச் சமுதாயத்திலே ஒரு பிரச்சனையைச் சந்தித்தார். படிப்பு வாசனையே இல்லாத சிலருக்கு படித்தவர்கள் மத்தியில் புகுந்து தாமும் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்றிருந்த ஆசையே அது.

அப்படிப்பட்டவர்கள் கற்றவர்கள் முன்னிலையில் மேடையைப் பிடித்துக் கொண்டு எதைiயாவது சொல்லி முட்டாள்கள் என்று தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து கற்றவர்களால் இகழப்படுவது அன்றைய சமுதாயத்திலும் ஒரு வியாதியாகவே இருந்தது.

வள்ளுவர் அதற்கு ஒரு வழி சொன்னார். உனக்கு படித்தவன் மேடையிலே ஏற வேண்டும். புகழ் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கு நான் ஒரு நல்ல வழி சொல்கிறேன். அந்த மேடையிலே நீ வாயைத் திறக்காமல் இரு! எல்லாரும் அசந்து போவார்கள். அவர் நிறை குடம்! தளம்பவில்லை என்று உனக்குப் புகழ் கிடைக்கும் என்றார் அவர்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.

தமது அறிவின் குறைபாட்டை உணர்ந்து கற்றவர்கள் முன்னிலையில் எதுவும் சொல்லாமல் இருந்தால் படிக்காதவனும் மிகவும் சிறந்தவன்தான் என்பது இந்தக் குறளின் பொருளாகும்.

இப்படிக் குறள் எழுதிய வள்ளுவர் படித்தவர்கள் மத்தியில் மௌனமாக இருந்து கொண்டு ஏமாற்றுபவர்களையும் கண்டுபிடிக்க ஒரு வழி சொன்னார். அப்படி ஒருவன் உன்னை ஏமாற்றினால் அவனைச் சும்மா விடாதே! பக்கத்திலே போயிருந்து கொண்டு எதையாவது கேள்.

சேஷ;பியர் எழுத்திலே உங்களுக்குப் பிடித்தது எது என்று கேள். சேஷ;பியரா அவர் யாழ்ப்பாணத்து ஆளா? என்று திருப்பிக் கேட்டால் இவர் நம்ம ஆளுதான் என்று முடிவு பண்ணிக்கொள் என்றார் வள்ளுவர்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

நூல்களைக் கல்லாத ஒருவன் நான் மிகுந்த அறிவு உடையவன் என்று தன்னைத் தானே மதிக்கும் குணம் அவற்றைக் கற்றவன் வந்து உரையாடும் போது பிரச்சனையை ஏற்படுத்தும்.

கல்லாமை என்ற ஒரே அதிகாரத்தில் இந்த இரட்டைத் திருக்குறள்களையும் ஒன்றாக வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.