இயற்கை நிகழ்வுகளும் இலக்கிய வாதிகளும்!
பெண்கள் தங்கள் அழகிற்கு அணிகலங்களை அணிந்து கொள்வது போல கவிதைகளும் தங்கள் அழகிற்கு உவமை உருவகம் போன்ற அணிகலங்களை அணிந்து கொள்கின்றன.
காசு வசதிக்கேற்ப பெண்களின் நகைகள் மாறுபடுவது போல கவிஞர்களின் கற்பனைத் திறமைக்கு ஏற்ப அவர்கள் பயன்படுத்தும் செய்யுள் அணிகளும் மாறுபடுகின்றன.
கவிஞர்கள் பயன்படுத்தும் அணிகளில்
தற்குறிப்பு ஏற்ற அணி என்பது மிகவும் சுவையானது. தற்குறிப்பு ஏற்றம் என்பது தன் குறிப்பு ஏற்றம் என விரியும்.
கவிஞர்கள் இயற்கையாக நடைபெறும் சம்பவம் ஒன்றில் தம் கருத்தையும் ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணியாகும்.
இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்திலே கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும் வழியிலே இந்த அணியைப் பயன்படுத்திக் காட்டுவார். காவிரிப்பூம் பட்டிணத்திலே செல்வமெல்லாம் இழந்து இரவோடு இரவாக மதுரைக்கு வந்த கண்ணகியும் கோவலனும் மதுரையின் தென் கரையிலே ஒரு அகழியின் அருகாக நடந்து செல்கின்றனர்.
பனிபொழியும் காலை வேளை. மிகுந்த குளிர். அந்த அகழியிலே கரிய தண்டினை உடைய குவளைச் செடிகளும் செவ்வாம்பல் கொடிகளும் தாமரைக் கொடிகளும் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் பூக்களிலே தேனுக்காக அமர்ந்த வண்டுகள் குளிரால் கால்கள் நடுங்க இரைகின்றன. அந்தப் பூக்களில் இருந்து தேன் துளிகளாக வெளியேறுகின்றது. பல போர்களிலே பகைவரின் நாடுகளை வென்ற பாண்டியரின் மீன் கொடியானது காற்றிலே அங்கும் இங்குமாக ஆடி உயர்ந்து பறந்து கொண்டிருக்கின்றது.
இந்தச் சம்பவங்கள் இயற்கையாகவே தினமும் நடைபெறும் நிகழ்சிகள் தான். ஆனால் இளங்கோவடிகள் இந்த இயற்கை நிகழ்ச்சிகளை தன் இலக்கியத்தோடு பொருத்திப் பேசுகின்றார். ஐயோ இந்த இளம் சோடிகள் எவ்வளவு நம்பிக்கையோடு மதுரையில் காலடி வைக்கிறார்கள். இந்த மண்ணிலே தான் இந்த ஆடவணின் மரணமும் அந்தப் பெண்ணுக்கு ஆறாத துயரமும் நிகழ இருக்கின்றனவே என்று வண்டுகள் அழுது கால் நடுங்குகின்றனவாம். அதைப் பார்த்து தாமரை போன்ற கொடிகளின் மலர்க்கண்ணில் இருந்தும் கண்ணீர் சிந்துகின்றதாம்.
உயர்ந்து பறக்கின்ற மதுரையின் கொடியோ கண்ணகி கோவலனைப் பார்த்து உங்களாலே எங்கள் நாடு புகழும் இழந்து தீயாலும் எரிந்து மிகவும் கொடிய விளைவுகளைச் சந்திக்க இருக்கின்து. அதனாலே தயவு செய்து நீங்கள் எங்கள் நாட்டுக்குள் வராதீர்கள். திரும்பிப் போய்விடுங்கள் என்று மறிப்பது போல பறந்து கொண்டிருந்தது என்று எழுதினார் இளங்கோவடிகள்.
கோடி காற்றினால் அசைவது இயற்கை நிகழ்ச்சி. அந்த இயற்கை நிகழ்வு கோவலன் கண்ணகியை வரவேண்டாம் என்று மறிப்பது போல இருக்கின்றது என்று சொல்வது தற்குறிப்பேற்றம்.
கரு நெடுங் குவளையும், ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போல
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி
வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட
(சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதை)
இந்தத் தற்குறிப்பேற்ற அணியை கம்பன் சீதை பிறந்த மிதிலையிலே பயன்படுத்துகின்றான். இளங்கோவைப் போல ஒரு துன்ப நிகழ்ச்சிக்கு அதைப் பயன்படுத்தாமல் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகச் சொல்கின்றான்.
இராமன் இலட்சுமணன் விசுவாமித்திர முனிவன் ஆகிய மூவரும் மிதிலை நகர வீதியிலே மெதுவாக நடந்து போகின்றார்கள். மிதிரை நகரத்திலும் உயரக் கட்டப்பட்டிருந்த கொடிகள் காற்றிலே பறந்து கொண்டிருக்கின்றன. கம்பன் சொன்னான்.
தாமரைப் பூவிலே கோவில் கொண்டிருக்கும் திருமகள் நான் செய்த பெருந்தவத்தின் பயனாக சீதையாகப் பிறந்து உனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றாள். நீ என்ன இப்படி மெதுவாக நடந்து கொண்டிருக்கின்றாயே . இராமா விரைவாக நடந்து அவளிடம் வந்து சேர் என்று மிதிலை நகரம் தனது கொடிகளாகிய கைகளை அசைத்து இராமனைக் கூப்பிட்டதாம். இது கம்பனின் தற்குறிப்பேற்றம்.
மையறு மலரின் நீங்கி யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பது போன்ற தம்மா
(கம்பராமாயணம் – மிதிலை காட்சிப் படலம்)
இவர்கள் எல்லோரும் இப்படி எழுதும் போது வள்ளுவர் என்ன தரம் குறைந்த இலக்கியவாதியா. அவர் எழுதினார் ஒரு பெண் தன் காதலனைப் படுக்கையில் கட்டி அணைக்கிறாள். அப்பொழுது அவள் கையில் இருந்த காப்பு கழன்று கீழே விழுந்த விடுகின்றது. அதை எடுத்து ஓரமாக வைத்து விட்டு காதலனோடு சேருகின்றாள். அவள் தேகத்தை அனுபவித்துவிட்டுப் போன காதலனை பல நாட்களாகக் காணவில்லை. மிகுந்த கவலையோடு அவள் கழன்று விழுந்த காப்பிடம் சொன்னாள்.
எனது காதலன் உடலால் கூடியிருந்தும் உள்ளத்தால் பிரிந்து இருந்ததை நான் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் நீயோ உள்ளத்தில் அன்பில்லாதவனைக் கட்டி அணைக்க மாட்டேன் என்று முன்னரே கழன்று ஓடிவிட்டாய். இதை நான் உணராமல் போய்விட்டேன் என்றாள்.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
(திருக்குறள் காமத்துப்பால் குறிப்பு அறிவுறுத்தல்)
காப்பு கழன்று விழுந்த இயற்கை நிகழ்சியை காதலனிடம் கொண்ட வெறுப்போடு பொருத்தி வள்ளுவன் செய்த குறளும் தற்குறிப்பு ஏற்ற அணிதான்.
கொடியிலே இருந்து தானாக உதிர்ந்து விழுந்த பூவை கவிஞர் வைரமுத்து கொடியை விட்டுக் குதிச்ச மல்லிகையே என்று குறுக்குச் சிறுத்தவளே பாடலில் சொல்லுவதும் தற்குறிப்பு ஏற்ற அணிதான்.
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் 5.9.2022 வெளியான எனது கட்டுரை இது.