இன்னுமொரு கணவன்
தவறு என்னுடையதாக இருக்குமோ? இந்துவைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கேள்வியே அரவிந்தன் மனதில் பலமாக எழுந்தது. இந்து அழுது கொண்டிருந்தாள். அவள் உதட்டில் இருந்து கசிந்த இரத்தம் தலையணையிலும் உறைந்து போயிருந்தது!
நேற்று முதல் அவள் அழுது கொண்டிருந்தாள். ஐயோ அம்மா என்று முனகியபடி அவள் எழுந்து குழந்தைக்குப் பால்கரைக்க முற்படும் போதெல்லாம் எட்டி உதைக்க வேண்டும் போலிருந்தது அரவிந்தனுக்கு!
அதுவும் இன்று மாலை வரை தான். ஆனால் அருளைக் கண்ட பிறகு அவனோடு கதைத்த பின்பு இந்துவின் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் அவனை ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தன. நல்லாக அடித்து விட்டேனா?
கட்டிய மனைவியைப் படுக்கையில் இன்னொருவனுடன் பார்த்தால் யாருக்குத் தான் கோபம் வராது. நானாவது அடியோடு விட்டேன்! வேறு யாரும் என்றால் இரண்டு பேரையும் கொலையே பண்ணியிருப்பான்கள்!
தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு சோபாவில் சாய்ந்தான் அரவிந்தன். மனம் இன்னும் ஒரு நிலைக்கு வரவில்லை. வருமா? வராமலே போய்விடுமா? அரவிந்தன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
ரி.வி.க்கு மேலே படமாக இருந்து சிரித்தாள் இந்து. பக்கத்திலே குழந்தை அனு! இந்தக் குழந்தையைக் கூட அவள் நினைத்துப் பார்க்க வில்லையே!
அரவிந்தன் மனத்தில் முதல் நாள் நிகழ்ச்சிகள் படமாக ஓடுகின்றன. மீண்டும் அடிமனத்திலே ஒரு பதட்டம். நரம்புகளிலே அவமானமும் கலந்து ஓடுவது போன்ற உணர்வு. கைகள் குளிர்ந்து நடுங்கின.
அன்று வெள்ளிக் கிழமை. அரவிந்தனுக்கு வேலை ஓடவில்லை. கட்டிய மனைவியும் குழந்தையும் என்று மகிழ்வாக இருக்க வேண்டிய மாலை நேரத்தில் சாப்பாட்டுப் பையையும் எடுத்துக் கொண்டு வேலைக்கு ஓடுவதும் அதிகாலைக் குளிரில் நடுங்கியபடி வீட்டுக்கு வருவதும் என்ன வாழ்க்கை இது?
ஊரிலே கல்யாண வயதைத் தாண்டிவிட்ட தங்கைகள். எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்நோக்கும் வயதுக்குரிய பெற்றோர்கள். ஆமிக்குப் பயந்து வேலைக்குப் போகாத அத்தான். காசு கிடைத்தது என்று எழுதும் கடிதத்தின் கீழேயே காசு அனுப்பு என்று எழுதும் அண்ணன்.
இங்கே உழைக்கும் காசை வரியாகப் பிடுங்கிக் கொள்ளும் அரசாங்கம். வேலைக்குப் போனால் கரும்பு பிழிவதைப் போலப் பிழிந்தெடுக்கும் நிர்வாகம். இனிக் கல்யான வீடு பிறந்த நாள் சாமத்தியச் சடங்கு என்று சொல்லுவோருக்கு காசு. ஆரவிந்தனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. இன்று வேலைக்கு வராமலேயே விட்டிருப்பான். ஆனால் சம்பளம்!
இரவு ஒன்பதரை மணிக்கே வருத்தம் தலையிடி என்று லீவு கேட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். சட்டைப் பைக்குள் வைத்த சம்பளச் செக்கைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். பஸ் பாஸை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.
பனித்துகள் பரவலாக விழுந்து கொண்டிருந்தது. தினமும் ஊர் அடங்கிய பின்பு அங்கொருவரும் இங்கொருவருமாக ஆட்களைக் கண்டு பழகிய அவனுக்கு அந்த ஒன்பதரை மணிச் சனமே மனத்துக்கு இதமாகத் தெரிந்தது. நல்ல குளிர். ஆனால் தெரியவில்லை. பஸ் தரிப்பை நோக்கி நடந்தான்.
பஸ் வந்தது அதனால் கூட விரைவாக ஓட முடியவில்லை. அதன் சக்கரங்கள் மெதுவாகத்தான் உருண்டன. இந்து அவள் தூங்கியிருக்க மாட்டாள். அவள் கெண்டக்கி சிக்கின் பைத்தியம். வீட்டுக்கு முன்னாலே கடை என்ற படியால் அடிக்கடி சாப்பிட்டுப் பழக்கம். வெள்ளி செவ்வாய் வேறுபாடு கிடையாது.
இன்றைக்கு ரகுவும் நிற்பான். வியாழன் வெள்ளி அவனுக்கு வேலை இல்லை. தமிழ்க் கடைகள் பத்து மணிக்குப் பூட்டிப் போடும். இல்லாவிட்டால் ஏதாவது தமிழ்ப் படம் எடுத்துப் பார்க்கலாம். கெண்டக்கி சிக்கினோடு நடந்தான்.
கதவைத் திறந்தான் அரவிந்தன். கோலிலே ரி.வி. பார்ப்போர் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தது. ரகு எங்கோ போட்டுது போல இருக்கு. அறைக்குள் நுளைந்தான். இந்து துள்ளி எழுந்தாள். ரகு உடையை எடுத்துக் கொண்டு மிரண்டு பார்த்தான்.
புத்தரே புராலைத் தின்னும் போது பூசாரி நீ என்ன பண்ணுவாய் தம்பி! நீ போ ராசா! ரகு வெளியே போய்விட்டான். எல்லாம் கனவு போல இருந்தது அரவிந்தனுக்கு. இந்துவைப் பார்த்துக் கொண்டு நின்றான். குழந்தை அமைதியாகத் தொட்டிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்தது.
என்னை மன்னியுங்கோ குஞ்சு!
இது ஒரு நாள் பிரச்சனை அல்ல. நான் வேளைக்கு வந்திராவிட்டால் யாரிடம் மன்னிப்புக் கேட்டிருப்பாய் சொல்லு? இந்து மௌனமாக நின்றாள்.
வாயைத் திறந்து கதையனடி! உன்னைக் கூப்பிட்ட காசுக்கு நான் இப்பவும் வட்டி கட்டிக் கொண்டு திரியுறேன்! நீ திமிர் கூடி அலையுறாய் என்ன?
அவள் தலை மயிரை எட்டிப் பிடித்தான் அரவிந்தன். அதற்கு மேல் அவனால் மனிதனாக இருக்க முடியவில்லை. ஏமாற்றம் அவமானம் எல்லாம் சேர்ந்து கையில் புதிய ஒரு வேகம். இந்து துவண்டு போய்க் கிடந்தாள். அரவிந்தனுக்கு கைகள் வலித்தன. அழுகை தொண்டையை அடைத்தது. கதவு நிலையில் தலையை மோதி அழுதான்.
கடவுளே! இது என்ன சோதனை. நல்லவள் நல்லவள் என்று சொல்லி அனுப்பினார்களே! சீதனத்துக்கு ஆசைப்பட்டு என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டினமே! நாளைக்கு நண்பர்கள் முகத்தில் எப்படி விழிப்பது?
சொந்தக்காரர்கள் முழங்காலுக்கும் மொட்டைத்;தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைப்பவர்கள் ஆயிற்றே! இதையும் கேள்விப்பட்டால்? அருளுக்கு எப்படி இதைச் சொல்வது. நான் இனி உயிரோடு இருந்து என்ன பலன்?
எல்லாம் இந்த ரகுப் பயலால் வந்த வினை. அவனுக்கு எத்தனை உதவிகள் செய்திருப்பேன். வெளி நாட்டுக்கு வந்து இறங்கிய உடனே போயக் கூட்டிக்கொண்டு வந்து சோஷல் பதியக் கடிதம் கொடுத்து எவ்வளவு செய்திருப்பேன். எப்ப பார்த்தாலும் இந்து அக்கா இந்து அக்கா என்று மரியாதையாக நடப்பானே இவன்களுடைய அகராதியில் அக்கா என்பதற்கு என்னதான் அர்த்தமோ? பாவிகள்!
எனக்கு வேணும். பேசாமல் ஒரு சின்ன இடம் எடுத்து இருந்து மானத்தோடு வாழ்ந்திருக்கலாம். என் விதி விடவில்லை. பெரிய வீடு எடுத்து கூடவே ஊர்ப் பெடியன் தெரிஞ்சவன் என்று இவனையும் வைத்திருந்து இப்ப மானம் கெட்டுப்போய் இருக்கிறன்.
நாங்கள் எங்கள் பாட்டிலே தனியாக இடம் எடுத்து இருப்போம். ஏனப்பா கூட ஆட்களை எல்லாம் வைத்திருந்து என்று இந்து வந்தவுடனே சொன்னாளே நான் தான் கேட்கவில்லை.
அரவிந்தன் அண்ணா உங்கள் மனைவியும் வருகின்ற நாள் நெருங்குது. நான் வேறு இடம் பார்த்துக் கொண்டு போக யோசிக்கின்றேன் என்று ரகு சொன்னானே! போய்த் தொலை என்று நான் விட்டிருக்கலாம். நான் விடவில்லை. அவன் தாற முன்னூறு டொலர் பெரிதாகப் போய்விட்டது எனக்கு.
இந்தப் பயல் இந்துவை எப்படி மாற்றி எடுத்தான். இந்து கனடா வந்த புதிதில் ஒரு நாள் ரகுவுக்கு சாப்பாடு போட்டுக் கொடும் என்று சொன்னதுக்கு சமைத்து வைப்பேன். விருப்பம் என்றால் போட்டுச் சாப்பிடட்டும். தயவு செய்து இப்படி எடிபிடி வேலையெல்லாம் அவன்களுக்குச் செய்யும்படி சொல்லாதையுங்கோ.
நான் எனது புருசனுக்கு செய்யுற வெலை எல்லாம் வேறு ஆட்களுக்குச் செய்ய மாட்டேன். அது எனக்குப் பிடிக்காது என்று என்னைத் தனியாகக் கூப்பிட்டு இந்து சொன்னாளே! அதைக் கேட்டு மனம் எவ்வளவு பூரித்தது. அவளா இப்படி மாறி விட்டாள்?
நான் வேலை செய்யும் இடத்தில் விபத்துக்கு உள்ளாகி கை முறிந்து வைத்திய சாலையில் இருந்த ஒன்பது நாளும் ஒருவராலும் அவளுக்குச் சாப்பாடு கொடுக்க முடியவில்லையே. அவர் வீட்டுக்கு வராமல் நிம்மதியாக என்னால் சாப்பிட முடியவில்லை. தயவு செய்து என்னை வற்புறுத்தாதையுங்கோ என்று பூமணி அக்கா கொண்டு போன இடியப்பத்தையே திருப்பி விட்டவள் இந்து.
டெலிபோன் எடுக்கும் போதெல்லாம் இந்தக் கதையைச் சொல்லி அவளைப் போல ஒரு பொம்பிளை கிடைப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேணும் என்று பெருமைப்படுவா. அதெல்லாம் இந்துவின் நாடகமா? நாளைக்கு அவ கேள்விப் பட்டா என்ன நினைப்பா.
ஏன் அவ கூட கனடாவுக்கு வந்த காலம் தொடங்கி பெடியளோடு தானே இருக்கிறா. அவவும் அந்தப் பையன்களும் தாய் பிள்ளை போலத்தானே எவ்வளவு பாசமாய் இருக்கினம். இவள் இந்துவிலே உள்ள பிழைக்கு நான் என்ன செய்யுறது? ஏதோ நடப்பது நடக்கட்டும். சிந்தனையின் அழுத்தம் அரவிந்தனைத் தூக்கத்தில் ஆழ்த்தியது.
அரவிந்தன் கண் விழித்த போது சனிக்கிழமை பகலாகி இருந்தது. அருள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருப்பான். எழுந்து டெலிபோனை எடுத்தான். கலோ! தம்பி அருளிட்டை ஒருக்கால் கொடுங்கோ. ஏய் அருள் உனக்குப் போன்! கூட இருப்பவர்கள் யாரோ அருளைக் கூப்பிடுவது கேட்கின்றது.
நான் அரவிந்தன் கதைக்கிறனடா அருள். இராத்திரி ஒரு பிரச்சனை நடந்திட்டுது. அரவிந்தன் பொறு அறைக்குள்ளே போய் எடுக்கிறன். மணி இந்தப் போனை நான் உள்ளே போய் எடுத்ததும் வை அப்பு அருள் அங்கே சொல்வதும் கேட்கின்றது.
அரவிந்தன் என்னடா பிரச்சனை சொல்லு. படுக்கப் போறேன். அருள் இராத்திரி நான் தலை இடிக்குது என்று வேலையால் வேளைக்கு வந்திட்டன். வந்து பார்த்தால் அறைக்குள்ளே இந்தப் பயலும் இந்துவும்!
அரவிந்தன்! பொறு! டெலிபோனில் இந்தக் கதைகள் வேண்டாம். ஆராவது கேட்டாலும். நீ உங்கள் வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற பாருக்கு வா. நான் எப்படியும் அரை மணித்தியாலத்திலே வருகிறேன். நீ உங்கே ஒரு பிரச்சனைக்கும் போக வேண்டாம். நீங்கள் என்னடாப்பா! கடவுளே சரி. நான் உடனே வாறன்.
போனை வைத்துவிட்டு எழுந்தான் அரவிந்தன். தலை சுற்றியது. ரகு வீட்டில் இல்லை. நேற்றே போய்விட்டான். அவன் அறை திறந்து கிடந்தது. பொருட்கள் அப்படியே இருந்தன. எப்படியும் எடுக்க வருவான் தானே பார்த்துக் கொள்ளலாம்.
நேற்றைய உடை இன்னும் மாற்றவில்லை. இறங்கி நடந்தான். அவன் குடிப்பதில்லை. ஆனால் அருள் பியர் குடிக்குப் போதெல்லாம் முன்னால் இருந்து கதைத்துக் கொண்டு இருப்பான் அவன். அன்றும் வழமையாக அமரும் மேசையில் போய் அமர்ந்து கொண்டு கண்ணாடியின் ஊடாக அருளின் காரைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அருளின் கார் வந்து நின்றது.
என்னடாப்பா நீ சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்று சொல்லிக் கொண்டு அமர்ந்த அருளுக்கு நடந்தது அனைத்தையும் சொல்லிவிட்டு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தான் அரவிந்தன்.
தான் சொன்னது அனைத்தையும் கேட்டுவிட்டு மௌனமாகப் புன்னகைக்கும் அருளைப் பார்க்க வேதனையாக இருந்தது அரவிந்தனுக்கு. ஒரே ஊரில் பிறந்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் படித்து ஒரு கோப்பையில் சாப்பிட்டு கனடாவுக்கு வந்த பின்பும் இணை பிரியாமல் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழும் உண்மை நண்பன் கூட தன் வேதனையைப் புரிந்து கொள்ளவில்லையோ என்று நினைக்கும் போது இவனுக்கு இதை ஏன் சொன்னேன் என்று கூட அரவிந்தன் மனம் ஒருகணம் திகைத்தது.
என்ன அருள் நீயும் மௌனமாக இருந்தால் எப்படி?
அரவிந்தன் நான் மௌனமாக இருப்பது போகட்டும ். நீ என்ன முடிவு செய்திருக்கிறாய் அதைச் சொல்லு.
என்ன முடிவு அருள். ஓடு நாயே என்று அவளைக் கலைத்து விட வேண்டியது தான். அனுவையும் அவனுக்குத்தான் பெத்தாளோ யார் கண்டது? அந்த ரகுப் பயலை நேற்று சும்மா விட்டிட்டேன் என்று நினையாதே! எப்படியும் அகப்படாமல் போவாரே! ஒரு பாடம் படிப்பிச்சுத்தான் விடுகிறது.
அரவிந்தன் நான் சொல்கிறேன் என்று கோவிக்காதே. முதலிலே பாடம் படிக்க வேண்டியது நீ அவனில்லைத் தெரியுமோ?
என்ன அருள் நீயும் சேர்ந்து விளையாடுறியா? அடுத்தவன் மனுசியோடை எப்படி நடக்கிறது என்று தெரியாத ஜென்மங்கள்!
அரவிந்தன்! நீ இப்படிச் சத்தம் போட்டால் நான் போய்விடுவேன். இது கத்தித் தீர்க்கிற பிரச்சனை இல்லை. எடேய் உன்னுடைய கவலை எனக்குத் தெரியுது. ஆனால் ஆத்திரப்பட்டு எதையாவது செய்து பின்னாடி இருக்கிற மானத்தையும் இழக்காதே!
நான் இந்துவிலோ அவனிலோ குறை சொல்ல மாட்டேன். எல்லாம் நீ விட்ட தவறு அரவிந்தன். உனக்கு இருந்த பொறுப்புக்களை எல்லாம் நீ தட்டிக் கழித்து நடந்த படியால் தான் இந்தச் சீரழிவு எல்லாம்.
நீ இரவு வேலைக்குப் போகிறாய் விடிய வருகிறாய். படுக்கிறாய் மத்தியானம் எழுந்து சாப்பிடுகிறாய். ரி.வி பார்க்கிறாய் உனது நேரம் வந்து விடும். போய் விடுகிறாய். எத்தனை நாள் இந்து பிள்ளை வயிற்றோடு தனிய டாக்டரிட்டைப் போய் வந்திருப்பாள்.
உன்னை நான் கேட்டால் சொல்லுவாய். நீங்கள் படுங்கோ அப்பா நான் தனியப் போவேன் என்று சொல்கிறாள் என்று. ஏன் அவள் அப்படிச் சொல்கிறாள் என்று சிந்திச்சுப் பாத்தியா? தனது மனுசன் இரவு நித்திரை முழிச்சு வேலை செய்யுறது. பாவம். குழப்பக் கூடாது என்ற எண்ணம் அவளுக்கு இருக்கிறது.
அப்படிப் பட்டவளை உன் நித்திரையைத் தியாகம் செய்து டாக்டரிட்டை நீ கூட்டிப் போயிருந்தால் என்னுடைய மனுசன் எனக்காக இப்படியெல்லாம் கஸ்டப்படுகிறாரே என்று
உன்னை நினைத்து எப்படித் துடித்திருப்பாள். நீ செய்ததில்லை.
ஏன்? உன் குழந்தை பிறந்த பின்பு கூட மாப்பேணி வாங்குவதில் இருந்து மருந்து வாங்குவது வரை அவன் ரகு தானே! நீ செய்ததில்லை. கேட்டால் உன்னிடம் ரெடியாக காரணம் இருக்கு. நீ வரும்போது கடைகள் திறந்து இருக்காது. போகும் போது வாங்கி பஸ்சிலே காவ முடியாது. அது தானே. மடையனடா நீ!
எத்தனை நாள் உன் குழந்தைக்கு நடு இரவிலே வருத்தம் வந்திருக்கும். இந்து சாமத்திலே ஆஸ்பத்திக்கு கொண்டு ஓடி இருக்கிறாள். அத்தனை தரமும் நீ வேலை செய்யுற இடத்துக்கு போன் அடித்திருக்கிறாள். உன்னுடைய பதில் ரகுவை எழுப்பிக் கொண்டு போ அது தானே. சரி ரகுவை அவள் கூட்டிக் கொண்டு போனாள். ஓடிவந்து என்ன ஏதென்று பிறகாவது பார்த்தியா? கேட்டால் கடன் வட்டி உழைக்க வேணும் என்பாய்.
அரவிந்தன் இந்தக் கதையைக் கவனமாகக் கேள். இது தான் பிரச்சனையின் ஆரம்பம். ஒருநாள் உங்கள் வீட்டுக்கு போன் எடுத்தேன். இந்து கவலைப்பட்டுச் சொன்னாள். அருள் அண்ணா இராத்திரி எட்டுமணிக்கு அனுவுக்கு கடுமைப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் விடிய நாலு மணிக்குத் தான் விட்டினம்.
ரகுவும் பாவம். இரவு முழுக்க என்னோடை ஆஸ்பத்திரியில் நின்று போட்டு விடிய வேலைக்கும் போட்டுது. சாப்பாடும் இல்லை. நித்திரையும் இல்லை காரிலே போய் வாறது. இன்னும் காணவில்லை. எனக்கு என்னவோ மனம் பயந்து கொண்டு இருக்குது. அந்தப் பிள்ளை வந்த பிறகு தான் நிம்மதி அண்ணே என்று சொன்னாள்.
சொந்தப் புருசன் நீ எப்போ வேலையால் வருவாய் என்று ஏங்கிக் காத்திருக்காமல் இன்னொருவனுக்காக அவளைத் தவிக்க விட்டது யாரப்பு? நீ தானே! கொஞ்ச நேரம் பொறுத்தாவது நீ வந்து இந்துவோடு நின்று கொண்டு ரகுவைப் போய்ப்படு என்று விட்டிருந்தால் ரகுவைப் பற்றிய சிந்தனை அவள் மனதில் ஏன் வரப் போகிறது? யோசித்துப் பார்
வீட்டுக்குச் சாமான் வாங்குவதில் தொடங்கி கோவிலுக்கு போவது வரை இந்து ரகுவோடை தான் போய் வருகிறாள். கேட்டால் ஒரு வரியிலே சொல்லுவாய். என்னிடம் கார் இல்லை என்று. காரில்லாவிட்டால் என்ன? நீயும் கூடப் போக வேண்டியது தானே! உனக்குப் பஞ்சி!
இனிக் காசு தேவை என்றால் நீ நேரடியாக அவனைக் கேளாமல் இந்துவை விட்டுக் கேட்டு வாங்குவது. அவனுக்கு வாற போனுக்கு இவளை விட்டுப் பதில் சொல்ல வைப்பது. இப்படிக் கனக்க சொல்லலாம் அரவிந்தன்.
அரவிந்தன்! பெண் உள்ளம் மென்மையானது! தனக்காக ஒருவன் கஸ்டப்படும் போது அவனுக்காக அன்பு காட்டத் தொடங்குகிறது. அந்த அன்பின் அடிப்படையில் உணவு சமைத்துக் கொடுத்தல் முதலிய ஆதரவுகளைக் காட்டுகிறது. தனிமை கிடைக்கும் போது தன் மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசி ஆறுதல் அடைகின்றது.
அந்தப் பேச்சுக்கள் தன் பெற்றோரைப் பற்றியிருக்கும். தம்பி தங்கைகளைப் பற்றி இருக்கும். தன் கணவனைப் பற்றியதாகவும் இருக்கும். தன் கல்லூரி வாழ்க்கை பற்றியதாகவும் இருக்கும்! ஆனாலும் அந்தப் பேச்சுகளில் உள்நோக்கம் இருப்பதில்லை. தவறான எண்ணங்கள் இருப்பதில்லை. இதைச் சொல்லலாமா சொல்லக்கூடாதா? என்ற பகுப்புணர்வும் இருப்பதில்லை. அதில் பயமும் இருப்பதில்லை!
ஆனால் சிலரால் அந்தப் பேச்சுக்களில் இழையோடும் பலவீனங்கள் மட்டும் பொறுக்கி எடுக்கப்படுகின்றன. அந்தப் பலவீனங்களைப் பயன்படுத்தி அத்தகைய பெண்களைத் தங்கையாக்கிக் கொண்டவர்களும் உண்டு தாரமாக்கிக் கொண்டவர்களும் உண்டு.
எந்தப் பெண்ணும் தனக்கு இன்னுமொரு கணவன் வேண்டும் என்று நினைத்துத் தப்புச் செய்வதில்லை. இந்துவும் அப்படித்தான். நீ வாழ்க்கையிலே தவறிவிட்ட பெண்களைப் பார்! ஒருவனிடம் ஆசைப்பட்டுத் தங்களை இழந்தவர்களை விட ஒருவனிடம் அனுதாபப் பட்டு ஏமாந்து தங்களைப் பறிகொடுத்தவர்களே அதிகம்! இதுதான் உலக நடப்பு அரவிந்தன்.
ஒருவேளை நீ ரகுவை பெற்ற பிள்ளையாகவோ அல்லது கூடப்பிறந்த சகோதரமாகவோ நினைத்து கவலைப்படாமல் இருந்திருக்கலாம். அப்படி நினைத்து நீ ஏமாந்து இருந்தால் அந்த நம்பிக்கைத் துரோகத்துக்கு தீர்ப்புச் சொல்ல வானத்திலே பெரிய கோட்டு ஒன்று இருக்குது ஐயா! சாட்சி தேவையில்லாத எல்லாம் தெரிந்த நீதிபதி அங்கே இருக்கிறார்! இப்போ நீ செய்ய வேண்டியது அவரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டியது மட்டும் தான்.
திரும்பவும் சொல்கிறேன். இந்து நல்லவள். போ அரவிந்தன். அவளோடு பிரச்சனைப் படாதே! அடிக்காதே! எத்தனை ஆயிரம் மைல் கடந்து உன்னை நம்பி வந்திருக்கிறாள். நீ அடித்தால் அவள் பயந்து தன் உயிருக்கு ஒன்றைச் செய்து விட்டால் எவ்வளவு அவமானம்! உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த இந்தப் பிரச்சனையை பொதுப் பிரச்சனை ஆக்கிப் போடாதே!
இந்து இன்னொரு தரம் தப்புப் பண்ணினால் நீ வெட்டிப் போடு! உனக்காக அந்த ரகுப் பயலை வெட்டிப் போட்டு நானும் உன்னோடு ஜெயிலுக்கு வாறன். இந்த ஒரு தடவை மட்டும் பெரிய மனது பண்ணி அவளை மன்னித்து விடு.
எனது மனுசன் கத்துவார் அடிப்பார் அவ்வளவுதான்! நான் தொடர்ந்து தப்புச் செய்யலாம் என்று துணிந்து திரும்பவும் பிழை செய்யும் ரகம் இல்லை இந்து. ஏதோ அவளின்ரை கூடாத காலம். இப்படி நடந்திட்டுது.
நீ பெரிய மனிதன் என்றால் இனிமேல் இதைப்பற்றிய கதை உன் வாழ்க்கையில் எடுக்கக் கூடாது. இப்படிப் பட்டவருக்கு பிழை விட்டேனே என்று அவள் நினைக்கும்படி நட! எங்காவது ஒரு சின்ன இடம் பார்த்துக் கொண்டு போ! இந்த வீட்டிலே இனி இருக்க வேண்டாம் என்ன?
இப்ப போய் இரண்டு பேரும் குளித்துத் தோய்ந்து சமைத்துச் சாப்பிடுங்கோ! கடவுளைக் கும்பிடுங்கோ. அந்தக் குழந்தை அனுவின்ரை எதிர்காலத்தை யோசித்து நடவுங்கோ நான் இன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வாறது சரியில்லை. ஆறுதலாக வாறன். எனக்கு இதெல்லாம் தெரியும் என்றும் காட்டிக் கொள்ளாதே! அவள் கவலைப் படுவாள்!
மற்றது அரவிந்தன் ரகு தனது பெட்டி படுக்கைகளை எடுக்க ஆரையாவது கூட்டி வந்தால் ஒரு பிரச்சனைக்கும் போகாதே! எடுத்துக் கொடுத்து சனியன் தொலைந்தது என்று விடு. ஒன்றும் கதைக்காதே என்ன?
அரவிந்தன் மௌனமாகத் தலை அசைத்தான். எழுந்து முதுகைத் தட்டி இனி வெளிக்கிடுவோம்! இனிப் போய் நான் படுக்க வேணுமடா அரவிந்! என்று புன்னகைக்கும் நண்பனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு வாசல் வரை வந்தான் அரவிந்தன். மனத்திலே ஏதோ பாரம் இறங்கிய உணர்வு.
இந்து! என்றான் அரவிந்தன். சப்த நாடிகளும் ஒடுங்கி கதவினைப் பிடித்துக் கொண்டு நடுங்கும் அவளைத் தலை அசைத்துக் கூப்பிட்டான். கதவு மேசை சோபா என்று துணைக்குப் பிடித்துக் கொண்டு மெதுவாக வந்த அவளை இழுத்து மடியிலே இருத்திக் கொண்டான்.
தன் கைகளைப் பற்றித் தடவிக் கொண்டு விம்மும் அவளின் கலைந்து போயிருந்த கூந்தலை வாரிவிட்டுக் கொண்டே நான் அடித்தது வேதனையாக இருக்கா? வலிக்குதா அம்மா? ஏதாவது குடிக்க வேணுமா? என்று கவலையோடு கேட்டான் அரவிந்தன்.
இல்லை! உங்களுக்கு இந்தக் கை வலிக்குதா? அதைத்தான் என்னாலே தாங்கமுடியாமல் இருக்கு! உங்களுக்கு கை நோகும் என்று பயந்து தானே நான் எதுவும் செய்ய விடுவதில்லை! என்னை ஏன் வெறும் கையாலே அடிச்சீங்கள்? என்று ஒரு குழந்தையைப் போலக் கேட்ட இந்துவை இறுக அணைத்துக் கொண்டான் அரவிந்தன்!
( இரா. சம்பந்தனின் வித்தும் நிலமும் சிறுகதைத் தொகுதியில் இருந்து )