இங்கேயும் ஒரு ஆகாய கங்கை

ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ரை கல்யாணம். அதைச் சீரும் சிறப்புமாய் செய்யுறதை விட்டுப் போட்டு உன்ரை புத்தி இப்படி ஏன் போகுது மோனை? கிறுக்கனைக் கல்யாணத்துக்குப் பிடிக்கப்போறன் என்று சொல்லுறியே! கிறுக்கன் எந்தக் கல்யாணத்தைக் கலம்பகம் இல்லாமல் நடத்தினவர்? ஏன் ஊரிலே கணபதி மாமாவின்ரை குஞ்சு கல்யாணத்திலே நடந்தது எல்லாம் நீ கண்ணாலே கண்டும் ஏன் தம்பி அந்தக் குருக்களோடை தொடுசல் வைக்கிறாய்? கனடாவிலே தானே திரும்பின பக்கமெல்லாம் கோயில்களும் ஐயமாரும் மலிஞ்சுபோய்க் கிடக்கினம். அதிலே பார்த்து யாரையாவது ஒழுங்கு பண்ணன் ராசா!

தொலைக்காட்சி செய்தியை ஐந்து நிமிடம் நிம்மதியாகப் பார்க்க விடாமல் அம்மா சொல்லிக் கொண்டே போனாள்.

அம்மா நீங்கள் ஆர் என்ன சொன்னாலும் என்ரை பிள்ளைய ின்ரை கல்யாணத்தை கிறுக்கன் ஐயாதான் நடத்துறது. அவர் கனடாவிலே இல்லாவிட்டால் வேறு விசயம். அவர் நாலு வருசங்களாய் இந்த நாட்டில் இருக்கிறார். அவரை விட்டுப் போட்டு என்ன கல்யாணம்?

கல்யாண மண்டபம் வாடைக்கு விட்டு உழைக்கிறவனும் மொன்றியாலுக்கு  பஸ் விட்டு உழைக்கிறவனும் கோயிலைத் திறந்து வைத்துக் கொண்டு கருப்பக்கிருகப் படியிலே நின்று அருச்சனைத் துண்டு இருக்கா என்று தொண்டை கிழியக் கத்தி வியாபாரம் பண்ணுறவனும் என்று கடவுளைச் சாட்டி சமயத்தைச் சாட்டி கொள்ளை அடிக்கிறவன்கள்  எல்லாம் பொட்டும் பட்டும் உருத்திராக்கம் மணிமாலை என்று தங்களைச் சோடிச்சுக் கொண்டு ஹொண்டாவிலும் அக்குறாவிலும் அலையுற இந்த நாட்டிலே காசைப் பெரிசாய் மதிக்காமல் இந்தக் காசு விளையுற கோயில் கலாச்சாரத்தை வெறுத்து ஒரு குருக்கள் நாலு முள வேட்டி துவாய்த்துண்டு பூநூல் என்று எளிமையாக தானும் தன் பாடுமாய் வாழ்ந்தால் அவர்தான் தெய்வத்தை நேசிக்கிற ஐயர். கடவுளும் அப்படிப்பட்டவர்களோடு தான் இருப்பார்! என்னுடைய பிள்ளைக்கு அப்படிப்பட்ட குரக்கள் தான் ஹொமம் வளர்க்க வேண்டும். அதை விட்டுப் போட்டு பூனூல் போட்டு முதுகு சொறியுறவன் எல்லாம் என்ரை பிள்ளைக்குச் சடங்கு செய்து வைக்கிறதுக்கு வேறு ஆளைப் பார்க்க வேணும்!

இரவு பதினொரு மணி என்றும் பாராமல் சண்முகம் போட்ட கூச்சலைக் கேட்டு எல்லோருமே எழுந்து வந்து விட்டார்கள். ஏனப்பா கத்துறியள் என்றாள் மனைவி. என்னடா உனக்கென்ன விரசா ஏன் இரவிலே சத்தம் போடுறாய் அடுத்த வீட்டுக்காரன் என்ன நினைப்பான்? என்றான அண்ணன்.

கிறுக்கன் குருக்களை கல்யாணத்துக்குப் பிடித்து மாப்பிளை பகுதியிட்டை மானம் கெட வேணும் என்று அவருக்கு ஆசையாக்கும் மாமி. நீங்கள் பேசாமல் இருங்கோ. மனைவி தன் கோபத்தை வேறு விதமாகக் காட்டினாள்.

அதென்றாலும் பரவாயில்லைப் பிள்ளை. கிறுக்கன் மாப்பிள்ளை வீட்டு ஆட்களுக்கு ஏதாவது சுடக் கூடியதாகச் சொல்லி விட்டாலும் அது பிறகு வெள்ளிடிபிடிச்ச வேலையாய்ப் போய்விடும்! அம்மா தன் பயத்தை திரும்பவும் வெளிக்காட்டினாள்.

உனக்கு ஒரு ஐயரைப் பிடிக்கும் என்பதுக்காக மற்ற எல்லா ஐயரையும் நீ கூடாமல் கதைக்காதே. விதி முறைகள் தெரிந்தாலும் இந்த நாட்டிலே அதற்கெல்லாம் வசதியில்லாத காரணத்தாலே சில ஐயமார் ஒருவாறு சமாளித்து நடக்கலாம் இல்லையா? அதை நீ குற்றம் என்றால் அது தருமமில்லைச் சண்முகம். அண்ணன் முடிவாகச் சொன்னான்.

என்ன அண்ணே நீங்களும் படிக்காதவன் மாதிரிக் கதைக்கிறியள். வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக ப ோதத்தால் வழிபட்டவர்கள் எல்லாம் இருந்த சமயம் எங்களுடையது!. குழாய்த் தண்ணிரிலே சுவாமியை அபிஷேகம் பண்ணாதே! திரு மஞ்சனக் கிணறு வெட்டித்தான் நீ சுவாமிக்கு பாவிக்க வேணும் என்று நான் சொல்லவில்லை. கடும் குளிரிலே மேல் சட்டை இல்லாமல் நில் என்று சொல்லவில்லை! ஒவ்வொரு மாதமும் கோவிலைப் புதிது புதிதாகத் திறந்து அருச்சனையைக் குடிசைக் கைத்தொழில் ஆக்கிக் கொண்டு போனால் என்ன மாதிரி?

பூஜைத் தொழில்தான் இவர்களுடையது. சமயம் எங்களுடையது. இதை முதலிலே ஒவ்வொரு சைவ சமயத்தவனும் விளங்கிக் கொள்ள வேணும்! அந்தச் சமயத்தை இவர்கள் நாறடித்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சைவ சமயத்தவனுக்கும் இருக்கிறது. நாளைக்குச் சமயம் கேலிக் கூத்தாகப் போனால் நட்டம் ஐயருக்கும் ஐயரைச் சம்பளத்துக்கு வைத்து கோயில் திறந்தவனுக்கும் மட்டும் இல்லை. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் தான் நட்டம். அது தெரியுமா உங்களுக்கு? இதனாலே தான் நான் கிறுக்கனைப் போற்றுகிறேன். அவருடைய வாழ்க்கை நெறியைப் போற்றுகிறேன். தன் பிறவியை ஒரு ஐயருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் தவறாகப் பயன்படுத்த நினைக்காத குணத்தைப் போற்றுகிறேன்! சண்முகம் சீறி விழுந்தான்.

தம்பி கிறுக்கன் ஐயா இந்தக் கல்யாணத்தை நடத்தித் தந்தால் நல்லது தான். ஆனால் கிறுக்கன் சம்மதிக்க வேணுமே! இங்கே கனபேர் கேட்டும் கிறுக்கன் கன விசயத்துக்குச் சம்மதிக்கவில்லை என்று கேள்வி. உன்க்குச் சம்மதிச்சு வந்தாலும் இடையிலே குழப்பிக்கொண்டு எழுந்தால் என்ன செய்யுறது? அம்மா அதுக்குத்தான் பயப்படுகிறா! ஊர் மாதிரி இல்லை இங்கே. கிறுக்கன் ஏதாவது சொன்னால் ஆராவது கை வைத்துப் போடுவான்கள் தம்பி. பிறகு வீண் சோலி கண்டியோ. ஏதொ யோசித்துச் செய்!

கணபதி மாமா வீட்டிலே முன்பு நடந்ததை எல்லாம் மனதிலே நினைத்தோ என்னவோ அப்படிச் சொல்லிக்கொண்டு உள்ளே போனார் அப்பா.

சண்முகம் சோபாவில் அசையாமல் இருந்தான். அவன் மனதிலே கணபதி

மாமா குஞ்சு இராமநாதன் வாத்தியார் கிறுக்கன் ஐயா எல்லாரும் வந்து போகிறார்கள். அதோ அந்தக் கல்யாணம். அதோ கிறுக்கன் ஐயா முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் கல்யாணத்தை நடத்திக் கொடுத்து விட்டு தனது மஞ்சள் பையிலே தீபக்கால் மணி தர்ப்பை என்று எடுத்துக் கொண்டு எழுகிறார். அவர் மந்திரம் ஓதிக்கொடுத்த மஞ்சள் அரிசித் தட்டை கையிலே பிடித்த வண்ணம் அமர்ந்திருக்க சபை அறுகரிசி போடத் தயாராகின்றது. வரிசையாக ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியவரும் என்று  சோடிகளாக மணமக்களை வாழ்த்த எழுந்து வருகிறார்கள். அந்த வரிசையின் இடையில் இராமநாதன் வாத்தியாரும் மனைவி கண்மணி அக்காவும்!

கிறுக்கன் ஐயா வாத்தியாரை நிமிர்ந்து பார்க்கிறார்.

இராமநாதன்! எங்கே அறுகருசி போடப்போறியளா? நீங்கள் போட வேண்டாம். அப்படிப் போய் உட்காருங்கோ.

திருமணப்பந்தலே ஒரு கணம் நடுங்கி நிமிர்ந்தது. எல்லோரையும் தள்ளிக் கொண்டு ஓடிவந்த கணபதி மாமா ஐயா! ஐயா! கொஞ்சம் பேசாமல் இருங்கோ என்று இரண்டு கைகளையும் எடுத்துக் கும்பிடுகிறார்.

கணபதிப்பிள்ளைவாள்! நான் என்ன சொல்லுகிறேன் என்பதை முழுசாகக் கேட்டுப் போட்டு வாயைத் திறவுங்கோ!

மீண்டும் ஐயரின் மிடுக்கான குரல்.

இராமநாதன் பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிற வாத்தியார். வாத்தியார் குடிக்கக் கூடாது. குடி பஞ்சமா பாதகங்களிலே ஒன்று! இராமநாதன் தண்ணி போடும். அது குற்றம். பாவம். நான் செய்து வைத்திருக்கின்ற இந்தச் சடங்கு ஆண்டாண்டு காலமாய் இந்தச் சிறிசுகள் நல்லாக இருக்க வேண்டும் என்று தெய்வங்களை வேண்டி மந்திரங்கள் சொல்லிச் செய்தது. இதிலே இராமநாதன் போன்றவர்களுக்கெல்லாம் இடமில்லை.

பெண்சாதியை அடிச்சுக் கொடுமைப்படுத்துறவன் ஆடு கோழி அறுக்கிறவன் அடுத்தவன் பெண்டாட்டியைப் பார்க்கிறவன் பொய் களவோடு சம்பந்தப்பட்டவன் தாயைப் போற்றாதவன் இப்படி யார் அறுகருசி போட்டாலும் மந்திரச் சடங்கின் பலன் அழியும்!

கோயிலிலே பிரதிஷ்டையின் போது விக்கிரகத்தின் மூக்கிலே கடற்பாரையாலே இடித்து நேராக்குகிற ஆசாரி மல்லாரி இராகம் வாசித்து கும்பத்து மந்திர ஜலம் விக்கிரகத்திலே இறங்கியதும் தள்ளி நின்று கன்னத்தில் போட்டுக்கிறானே ஏன்? அது போலத்தான் இதுவும். இந்தக் குழந்தைகளை பார்வதி பரமேஸ்வரனாகப் பாவித்து கையிலே காப்புக் கட்டியிருக்கிறேனப்பா அதுக்காகவாவது மரியாதை கொடுங்கோ! புரோகிதம் என்ன விளையாட்டு வேலையா அவனவன் இஸ்டத்துக்கு வளைக்க!

கிறுக்கன் சால்வையை உதறித் தோளிலே போட்டுக் கொண்டு எழுந்து வெளியே போகிறார். இராமநாதன் வாத்தியார் திரும்பிப் போய் பாயில் இருக்க அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையால் பந்தல் நிறைகிறது.

வாத்தியார் குடிக்கிறவராக இருக்கலாம். ஆனால் அதைக் கதைக்கிற இடம் இது இல்லை. கணபதி அண்ணே இதை நீ புரிஞ்சு கொள் என்று ஒருவர் குதிக்க தம்பி எனக்கு விளங்குது ராசா எனக்காக எல்லோரும் பொறுத்துக் கொள்ளுங்கோ என்று தோளில் சால்வை காலில் மிதிபடப் பதறினார் கணபதி மாமா.

ஒரு ஐயர் கதைக்கிற அளவுக்கு விட்ட இடத்திலே இனி என்ன சாப்பாடு என்று கண்மணி அக்கா கோபித்துக் கொண்டு போக தங்கச்சி! அவர் கிறுக்கனம்மா! நீ எனக்காகப் பொறுத்துக்கொள் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினார் கணபதி மாமாவின் தம்பி முருகேசு மாமா.

சண்முகத்துக்கு வியப்பாக இருந்தது. ஒரு ஐயர் அதுவும் ஒரு போக்காக நடந்து சமுதாயத்திலே கிறுக்கன் என்ற பட்டப் பெயரைச் சுமப்பவர் ஊரிலே எல்லோராலும் பயம் கலந்த மரியாதையோடு வரவேற்கப்படும் இராமநாதன் வாத்தியாரை கிள்ளுக் கீரையாக நினைத்து தள்ளி நிக்கச் சொல்லி விட்டாரே! இந்த வல்லமை எங்கிருந்து வந்தது?

தெய்வத்தையும் தன் தொழிலையும் இந்தச் சமுதாயத்தையும் உண்மையாக நேசிக்கும் ஒருவரால் தானே இப்படிஎயல்லாம் பேச முடியம்? போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் என்ற வாழ்வு இதுதானா? இவரைப் போய்க் கிறுக்கன் என்கிறார்களே!

சண்முகம் மணப்பந்தலை விட்டு வெளியே வந்து ஐயரைப் பார்க்கிறான். காணிக்கையாகக் கிடைத்த அரிசி மரக்கறி அடங்கிய பை தலையிலும் மஞ்சள் பை ஒருகையிலும் மற்றொரு கையினால் நான்கு முழ வேட்டியின் ஒரு தலைப்பைப் பிடித்துக் கொண்டும் மெதுவாகப் போய்க்கொண்டிருந்தார் அவர். சண்முகத்துக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

ஐயா!

என்னப்பா?

அரிசியைத் தலையிலே சுமந்து கஸ்டப்படுகிறியளே தாங்கோவன் வீட்டிலே கொண்டுவந்து தாறன்.

இதை நான் சுமந்து கொண்டு போனால் தான் தந்தவனுக்குப் புண்ணியமப்பா! பெரியவாள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். தட்ஷணை வாங்கியதோடு பிராமணாள் கடமை முடிஞ்சிடேல்லை! அதற்கு அப்புறமும் சில சம்பிரதாயங்கள் இருக்கப்பா!

எதுவுமே பேசாமல் திரும்பிய சண்முகத்தின் காதில் நம்ம பிராமணாளே ஊரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறாளே! போகிற போக்கைப் பார்த்தால் தெய்வத்தை விட்டு நம்மவாளே சனங்களைப் பிரிச்சிடுவாங்க போலிருக்கே! என்று சொல்லி ஐயர் சிரிப்பது மட்டும் காதில் விழுகிறது.

சண்முகம் சுய நினைவுக்கு வந்தான். இப்போது அவனைச் சுற்றி ஒருவருமில்லை. அவன் மனதில் கிறுக்கன் ஐயரைப் பற்றிய உணர்வுகளே நிழலாடுகின்றன.

இந்தக் கனடாவிலே எத்தனை கோவில்களில் யாகம் கும்பா அபிஷேகம் என்று சொல்லி உலகெங்கும் இருந்து குருக்கள்மார் வந்தார்கள். கிறுக்கன் தலை காட்டவில்லையே! இறைவன் மீது அவருக்கு கோபமா? இல்லை இறைவனுக்குத்தான் அவர் மீது கோபமா? இரண்டும் இல்லையே! ஊரின் ஒர ு மூலையில் வருமானமில்லாத சிறிய சிவன் கோயிலுக்கு மூன்று வேளையும் பூஜை செய்து ஓலை வீட்டிலே மனைவியும் ஒரேயொரு மகளும் என்று சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரை  அந்த இறைவன் தானே காப்பாற்றி மகளைப் படிக்க வைத்து நல்ல கணவனையும் தேடிக் கொடுத்து இன்று கனடாவிலும் கொண்டுவந்து விட்டிருக்கிறான்.

அவரைப் போல பூஜைத் தொழிலைத் தப்பாகச் செய்யக் கூடாது அது பாவம் என்று நினைத்து தொழிறசாலை ஒன்றில் இரும்பு ஒட்டும் வேலை செய்கிறாரே அவரது மருமகன். கோயில் வைத்துக் காசு பார்க்க ஆசைப்படாமல் முதுகு நோகத் தையல் வேலை செய்து பிழைக்குதே அவர் பொண்ணு. இந்த மனப்பான்மை கூட ஒருவகையில் இறைவன் கருணை தானே! குளக் கரையில் அப்பாவைக் காணாத சம்பந்தருக்கு தான் ஆகாயத்திலே நின்று கொண்டு உமாதேவியை அனுப்பிப் பால் கொடுத்த இறைவன் தாயைக் காணாமல் அழுத பன்றிக் குட்டிகளுக்கு  இன்னொரு ஆளை அனுப்பாமல் தானே தாய்ப் பன்றியாக வந்து பால் கொடுத்தானே! அது போலத்தானே இதுவும்!

ஆண்டவன் ஒரு போதும் அழகான கோயிலையோ பட்டு உடுத்த ஐயரையோ ஆயிரம் யாக குண்டங்களையோ பெரிதாக நினைப்பதில்லை. அப்படி நினைப்பவனாக இருந்திருந்தால் காளாத்தி மலையிலே கண்ணப்பன் கையைப் பிடித்திருக்க மாட்டார்! உண்மையான அன்பும் நேர்மையும் எளிமையும் எங்கு இருக்கின்றதோ அங்கே ஆண்டவன் இருப்பான். அதை விட்டுப் போட்டு இறைச்சிக் கடையையும் சேர்த்துச் சுற்றித் தேரை இழுத்தால் ஆண்டவன் இறங்கி ஓடாமல் என்ன செய்வான்?

என்னப்பா ரி.வி தன்பாட்டிலே ஓடுது. ஏன் உதிலே தூங்கிக் கொண்டு இருக்கிறியள். வந்து படுங்கோவன் என்றாள் மனைவி.

தயவு செய்து இனி யாரும் இந்த விசயத்திலே தலையிடாதையுங்கோ. வருகிற வெள்ளிக்கிழமை நல்ல நாள். வேலையாலே வந்து குருக்கள் ஐயாட்டை ஒருக்கால் போக வேணும். நாள் வைக்க வேணும். மாப்பிள்ளை ஆட்கள் எல்லா ஒழுங்கையும் என்னைத்தான் பார்க்கச் சொல்லிப் போட்டினம். இனி ஒருதரும் தடை சொல்லாதையுங்கோ சொல்லிக் கொண்டே எழுந்தான் சண்முகம்.

வாங்கோ சண்முகம். இருங்கோ! எப்படி இருக்கிறியள்? நீங்கள் இன்றைக்கு வருவியள் என்று அப்பாவுக்குச் சொன்னனான். அவருக்கு நீங்கள் ஆரெண்டு விளங்கேல்லை. வயதும் போட்டுது தானே! பிறகு நான் என்னோடை படிச்ச சகுந்தலாவின்ரை தம்பி என்று சொல்லப் பிடிச்சிட்டார். அக்கா ஊரிலே தானே! எப்படி இருக்கிறா?

இருக்கிறா அம்மா.

மற்றது சண்முகம் உங்களின்ரை மகள் கல்யாணம் கோயில்லே என்றால் அப்பா வரமாட்டார் தெரியும் தானே! அன்றைக்கு நீங்கள் போனிலே  கதைச்ச சமயம் சொல்ல நினைச்சனான். பிறகும் ஒரு சுப காரியம் முதலிலெ தடை சொல்லக் கூடாது என்று விட்டனான்.

அவருக்கு இங்குள்ள கோவில் நடப்புகள் பிடிக்காது. மகளே! இந்த நாட்டிலே பிராமணன் செய்யுற கூத்து. ஈஸ்வர கடாச்சத்தை இந்த நாட்டைவிட்டே ஓட்டிவிட்டுத் தான் இவன் ஓய்வான் போலிருக்கேயம்மா என்று என்னிடம் சொல்லிச் சிலநேரம் கவலைப்படுவார்.

இறைவன் அதர்மங்களை வளரவிட்டுத் தானேயப்பா பிறகு அடியோடு துவஷம் பண்ணியிருக்கிறான். இங்கு நடப்பவை எல்லாம் அவனுக்குத் தெரியாதா என்ன? நீங்கள் ஏன் கவலைப்படுகிறியள் என்று நான் சொல்ல பிறகு அமைதியாகி விடுவார் என்று மகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து ஐயர் வந்துவிட்டார்.

நெற்றியிலே விபூதி குங்குமம்! தோளிலே முதகை மூடியபடி ஒரு துவாய். அதற்குக் கீழே தெரியும் பூனூல்! கையிலே பாதி அழிந்தும் அழியாமலும் தெரியும் குறி! இடுப்பிலே நான்குமுழ பழைய வேட்டி! வயது போன கண்ணிலும் ஒரு தீட்ஷண்ய பார்வை. இவற்றைத் தவிர ஒரு உருத்திராக்க மாலையோ மணிமாலையோ காணோம்!

சண்முகம் எழுந்து நின்று கும்பிட்டான். உட்காரப்பா! என்று சொல்லிவிட்டு அவரும் சாய்ந்து அமர்ந்தார்.

என்னப்பா மகளுக்கு நான்தான் சடங்கு செய்து வைக்கவேணும் என்று விருப்பப் படுகிறியாம். இறையருள் அப்படி விதித்திருந்தால் அப்படித்தானே நடக்கும். சரி கல்யாணத்தை எங்கே வைச்சிருக்கிறாய்? 

ஐயாவோடை கதைச்சுப் போட்டு இடத்தை முடிபு பண்ணுவோம் என்று நினைச்சிருக்கிறன். அதோடு நல்ல நாளும் நீங்கள் தான் பார்த்துச் சொல்ல வேணும் ஐயா!

அதுவும் நல்லதாகப் போச்சு. கோயில் மண்டபம் உனக்கு வேண்டாம்! அதனுடைய அமைப்பு தெய்வங்களை வைத்திருக்கிற முறை பாவிக்கிற பத்திர புஷ்பங்களின் தன்மை எல்லாமே சாஷ்திர சம்பிரதாயத்துக்கு மாறாக இருக்குது. கையிலே வைத்து அடிக்கிற மணிக்கு கண்டாநாதம் என்று பெயர். அதை இடுப்புக்குக் கீழே பிடித்து அடித்தால் குற்றம்! அது தெரியாத பிராமணன் தான் பல கோவில்களிலே இருக்கிறான்.

இறைவனுக்கு நிவேத்தியங்கள் அர்த்த மண்டபத்திலே வைத்துப் படைக்க வேணும்.

அர்த்த மண்டப மத்யேது கோமயா லேபனம் ததா ரங்கவல் யாத்யலங் கிருத்ய

கதளி தளசம்யுதம் தீபாதீக் தஸ்மத்யேது ஹவிஸ் ஸ்த்தாலீம் நிதாயச சூபாபூப

கிருதோ அன்னம் பஞ்சவித ததா!

பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவனிட்டே அர்த்த மண்டபம் ஏது? அதனுடைய அளவுப் பிரமாணங்கள் தெரியுமா இவனுக்கு? தெரியும் என்றால் தான் நிவேத்தியம் வைக்கும் இடம் தப்பு ஆண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று தெரிந்து கொண்டும் திரும்பத் திரும்ப ஏன்  செய்கிறான்? தெய்வத்தை ஏமாற்றுகிறானா? அதை யாரால் ஏமாற்ற முடியும்? சனங்களை ஏமாற்றுவதாக எண்ணிக் கொண்டு சாஸ்திரங்களை ஏமாற்றப் பார்க்கிறான்.

ஐயா! நாங்கள் இதைச் சொன்னால் வெளிநாட்டிலே இருக்கிற வசதிகளைக் கொண்டுதான் என்னவும் செய்யலாம் என்று சொல்கிறார்களே!

இல்லையப்பா! அருச்சனைத் துண்டு விற்கிற இடத்தை பெரிதாகக் கட்டி நவக்கிரகப் பொம்மைகளை சிறிதாக ஒரு தட்டிலே வைத்திருக்கிறான். ஒரு கோவிலை ரி.வி யிலே பார்த்தேன். எது முக்கியமோ அதுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறான் வசதியற்ற நாட்டிலே!

சரி! விசயத்துக்கு வருவோம். கல்யாணத்தை ஒரு மண்டபத்திலே ஒழுங்கு செய்யப்பா. அதனுடைய தளம் நிலமாக இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஹோமம் வளக்கிறது நிலத்திலே தான். மணமக்கள் இருக்கிற இடத்துக்கு கீழே பேஸ்மண்ட் இருந்தால் நல்லதில்லை. ஒரு வெற்றிடத்துக்கு மேலே அந்தரத்திலே ஒரு சுப காரியம் நடக்கிறது சகுனப் பிழை. அந்தக் காரியத்துக்கு பூமியைச் சாட்சிப்படுத்த முடியாது! ஏனென்றால் பூமியிலே அது நடக்கவில்லை. அங்கு தன்னிறைவு இல்லை. அப்படிப்பட்ட இடத்திலே பூமாதேவி சாட்சியாக என்று நான் மந்திரம் சொல்ல மாட்டேன்!

நல்லதப்பா! நீ மண்டப ஒழுங்குகளைப் பார். நான் இரவு போல நல்லநாள் பார்த்து போன்; பண்ணுறன். நான் சொன்ன ஏதாவது உனக்குப் பிடிக்காவிட்டால் தாராளமாக யாரையாவது பிடித்துச் செய். நான் பிராமணன்! பிராமண சம்பிரதாயங்களை உயிருக்கு உயிராக மதிப்பவன்! விதிக்கு மாறான எதையும் வசதி கருதிச் செய்ய மாட்டேன்.

பிராமண சமுதாயம் மேன்மையானதாக இருக்க வேண்டும்! தூய்மையானதாக இருக்க வேண்டும்! சமுதாயத்துக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும்! என்ற இலட்சியத்துக்காக வாழ்ந்தவன் நான்! இன்றைக்கும் அந்த எண்ணத்தோடு வாழ்பவன்! என்னுடைய அந்தக் கனவைக் கனடாவிலே பங்கப்படுத்திப் போடாதேயுங்கப்பா!

இரண்டு கைகளையும் விரித்துக் கேட்டார் கிறுக்கன். அவர் கண்கள் கலங்கியிருந்தன.

ஐயா! இப்பவும் சொல்லுறன். நீங்கள் தான் இந்தக் கல்யாணத்தை நடத்தித் தர வேணும் என்றான் சண்முகம்.

பகீரதன் தவஞ்செய்து ஆகாய கங்கையைக் கூட பூமிக்கு கொண்டுவந்து விட்டான்! சண்முகத்தாலே அப்பாவைக் கல்யாணத்துக்கு கொண்டு போகிற முயற்சி இன்னும் சரிவரவில்லைப் போல கிடக்குது என்று சொல்லிச் சிரித்தாள் ஐயரின் மகள்.

உண்மைதானம்மா! எவ்வளவு கடினமென்றாலும் உங்கள் அப்பா என்ற இந்த ஆகாய கங்கையை திருமண மண்டபம் என்ற பூமிக்கு நான் கொண்டுபோய் விட்டால் இந்தக் கங்கைப் பிரவாகத்திலே மண்டபத்து மக்கள் நனைந்து உண்மையான இந்து கலாச்சாரம் இப்படித்தான் இருக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அதற்காகத் தான் இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றான் சண்முகம்!

_________________

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.