அருந்தொழில் அரங்கம்!

 

 

தமிழ்க் காப்பியங்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றி குடிமக்களால் படைக்கப்பட்டதாக அமைந்துவிட சிலப்பதிகாரம் மட்டும் குடிமக்களைப் பற்றி ஆட்சி துறந்த மன்னால் எழுதப்பட்ட சிறப்பைப் பெற்று விடுகின்றது! ஆம்! இளங்கோவடிகள் துறவியாக இருந்தாலும் பிறப்பால் மன்னர்! அவரால் பாடப்பட்ட கண்ணகியும் கோவலனும் காதல் மாதவியும் சோழ நாட்டுக் குடிமக்கள்! துறவியல்லவா? அதனால் விருப்பு வெறுப்பற்று இலக்கியம் படைத்தார்!

 

அவர் படைத்த சிலம்பிலே மாதவியின் அரங்கேற்றத்துக்காக ஆடல் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்ட விதத்தைக் கூறுகிறார் அடிகள்! ஆடல் அரங்கம் என்ற சங்கம் மருவிய காலத் தமிழுக்கு நாட்டிய மேடை என்று இன்று பொருள் கொள்ளலாம். அந்த மேடையை அமைக்க அதுபற்றிய அறிவு படைத்த கலைஞர்கள் அன்று இருந்திருக்கிறார்கள். அவர்கள் நடன அரங்கம் எப்படி அமைக்க வேண்டும் என்று முன்னரே எழுதப்பட்ட நூல்களைப் படித்து அறிந்திருக்கிறார்கள்.

 

அரங்கம் அமைக்கும் போது நீள அகலங்களை அளக்க ஒன்றரை அடி நீளம் கொண்ட மூங்கில் கோலைப் பாவித்தார்கள். அந்த மூங்கில் கோல் கூட கணுவுக்கு கணு ஒரு சாண் வளந்த மூங்கிலாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். எந்தக் குறையும் இல்லாமல் உடல் வளர்ச்சி கண்ட மனிதனின் பெருவிரலால் இருபத்து நான்கு முறை அளந்து நறுக்கி எடுத்த அந்த மூங்கில் தடியை அளவு கோலாக இன்றைய கணிதம்; அளவு கோலை வகுக்கும்; முன்பே பாவித்தார்கள்.

 

இந்த அளவு கோலைப் பயன்படுத்தி ஏழு கோல் நீளமும் எட்டுக்கோல் அகலமும் ஒரு கோல் உயரமும் கொண்ட மேடையை அமைத்தார்கள். மேடைத் தளத்தை மரப்பலகையால் நிரப்பினார்கள். ஆடு தரைக்கும்; கூரைக்கும் இடைப்பட்ட உயரம் நான்கு கோல் அளவாக கணித்தார்கள்! இன்றைய அளவீட்டில் ஆறு அடிகள்! நான்கு புறமும் தூண்களை நிறுத்தி அதற்கு மேலும் பலகையால் மறைத்தார்கள்! ஆட்ட நாயகி மேடை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வேறு வேறு இரு வழிகள் அமைக்கப்பட்டன. மேடையில் எழினி எனப்படும் திரைச் சீலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கட்டப்பட்டன. அவை விலகியதும் கண்களைக் கவரும் வண்ணம் பின் சுவரிலே அழகிய ஓவியங்களை வரைந்து வைத்தனர்.

 

இப்படி மேடையை அமைத்த அந்தக் கலைஞர்கள் தாங்கள் அமைத்த மேடையில் தூண்களின் நிழல் விழாதவாறு விளக்குகளைப் பொருத்தினார்கள் என்று இளங்கோ அடிகள் சொல்கிறார். தூணின் நிழல் ஆடும் பெண்ணிலே படக்கூடாது என்பதிலே அந்தக் கலைஞர்கள் கவனம் இருந்திருக்கிறது. இன்று நேற்றல்ல. சங்கம் மருவிய காலத்தில்!

 

இன்றைய புகைப்படக் கலைஞர்களும் படப்பிடிப்பாளர்களும் எத்தனையோ மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி நடிக நடிகைகளை படம்பிடிப்பது போல அந்தக் காலத்திலும் அது பற்றி நன்கு தெரிந்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை. மின் குமிழ்கள் இல்லை! அவை கண்டுபிடிக்கப்படவில்லை! அப்படி இருக்கும் போது பிரகாசமான விளக்குளை எப்படி அமைத்தார்கள்? எது அவர்களின் எரிபொருள்? எதைப் பாவித்து தூண் நிழலைத் துரத்தினார்கள்?  நான்கு புறமும் தூண்கள் இருக்கும் போது ஒரு புறம் விளக்கு வைத்தால் மறுபுறம் நிழல் விழுமே? எத்தனை விளக்குகள் எந்தெந்தக் கோணங்களில் வைக்கப்பட்டனவோ? அந்த ஒளி அமைப்பு வேலையை எப்படித் தெரிந்து கொண்டார்கள்? இன்றும் கண்டு பிடிக்கப்படாத வெளிச்ச உருவாக்கிகள் ஏதும் வைத்திருந்தார்களா?

 

இன்றைய எம் கலைஞர்கள் ஓலைத் தட்டி கட்டிய மேடையில் ஏறி நின்று இது பழைய கூத்துக்கலை என்று சொன்னதற்கும் சிலம்பு காட்டும் மேடைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. அது நாட்டிய அரங்கம் இது நாடக அரங்கம் என்று நாம் சமாதானம் கூறிக் கொள்ளலாம். ஆனால் சிலம்பு காட்டும் மேடையில் மணி மாலைகளும் முத்து மாலைகளும் தேவதைகளின் படங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. கலை நயம் இருந்தது. அதாவது காட்சி அமைப்பு வலுவோடு இருந்தது அந்த அருந்தொழில் அரங்கம்!

 

சிலம்பு என்றதும் கோவலனும் கண்ணகியும் காற்சிலம்பும் மதுரை எரிந்த சம்பவமும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதற்கும் மேலே எத்தனையோ அறிவியல் செய்திகள் சிலம்பு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன நில நடுக்கமும் சுனாமியும் உட்பட!!

 

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு

புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்

கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக

ஏழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி

உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக

ஏற ்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த

பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்

தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து

ஆங்கு

ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்

கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு

ஓவிய விதானத்து உரைபெறு நிலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி

விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து!

 

(சிலப்பதிகாரம் – அரங்கேற்று காதை)

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.