மணிமேகலை காட்டும் சமணமும் பௌத்தமும்
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து தன் பெற்றோரின் துன்பம் கண்டு வருந்திப் புத்த மதத்தில் சேர்ந்து துறவியானவள் மணிமேகலை. அவளின் பெயராலேயே சீழ்த்தலைச்சாத்தன் என்ற புத்த துறவியால் எழுதப்பட்ட காப்பியம் மணிமேகலை.
மணிமேகலையில் சைவம் சமணம் பௌத்தம் ஆகிய மூன்று மதங்களையும் தொட்டுச் செல்லும் ஒரு கதை உண்டு. பிராமணக் குடும்பத்திலே பிறந்த சுதமதி என்பவள் வேறு சாதியிலே காதலித்து மணந்து கொண்டதால் பிராமண குலத்தை விட்டு விலக்கப்படுகின்றாள். அவளை மணந்தவனும் கைவிடுகின்றான். முடிவில் அப் பெண் சமண மடமொன்றில் தங்கிக் கொள்கின்றாள்.
சிறு வயதிலே தாயையும் இழந்த அந்தப் பெண்ணைத் தந்தை ஊர்கள் தோறும் தேடிக் கடைசியிலே காவிரி கடலோடு கடக்கும் குமரித் துறையிலே கண்டுபிடிக்கின்றான். மகளை விட்டுப் பிரிய முடியாத அவன் ஊருக்கும் திரும்பாமல் பிச்சை எடுத்து உண்டு கொண்டு வீதியிலே அலைந்தான்.
அப்படி அலைந்தவனை ஒருநாள் மாடு ஒன்று தன் கொம்பினால் வயிற்றில் குத்தி விட்டது. உதிரம் ஒழுக தொங்கும் குடலைத் தன் கையில் பிடித்தபடி துன்பம் தாங்காமல் தன் மகள் இருந்த சமண மடத்துக்குள்ளே ஓடி சமணர்களே என் நிலையைப் பாருங்கள். நான் உங்கள் அடைக்கலம் என்றான்.
சினம் தவிர்ந்த அருள் வடிவினராக நடந்து கொள்ள வேண்டிய அந்தச் சமணர்களோ மிகவும் கோபமுற்றவர்களாக மடத்துள் நுளையும் கோலமா இது வெளியே போங்கள் என்று அந்தப் பிராமணருடன் மகளையும் சேர்த்து வெளியே துரத்தி விட்டார்கள். அவர்கள் கண்ணீரோடு தெருவிலே ஆதரவற்று நின்றார்கள். ஆரும் இல்லாத அநாதைகள் நாங்கள் எங்களுக்கு ஆதரவு தர தருமம் உணர்ந்தவர்கள் யாராவது இந்த ஊரிலே இருக்கின்றீர்களா என்று அழுது கூவினார்கள்.
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள்! நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ? ஆரும் இலோம்! எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
(மணிமேகலை – மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை)
அந்த வேளையிலே பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவனும் மஞ்சள் ஆடை உடுத்தவனும் நிலவு போல குளிர்ச்சி பொருந்திய முகத்தினை உடையவனுமான ஒருவன் அவர்களிடத்தே விரைந்து வந்தான். என்ன துன்பம் உங்களுக்கு என்று கேட்டுக் கொண்டே அவர்களின் துன்பத்தைக் கண்ணினால் கண்டும் கொண்டான். தன்னிடம் இருந்த பிச்சைப் பாத்திரத்தை சுதமதியிடம் கொடுத்து விட்டு இனிமையான ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக் கொண்டு அந்தப் பிராமணனைத் தழுவித் தோள்மீது தூக்கிக் கொண்டு புத்த முனிவர்கள் வாழும் மடத்துக்கு கொண்டு சென்று சேர்த்து இறக்காமல் காப்பாற்றினான். அவன் தவநெறியைக் கடைப்pடிக்கும் சங்கத் தருமன் என்னும் புத்த துறவி ஆவான்.
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
‘என் உற்றனிரோ?’ என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான்
(மணிமேகலை – மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை)
அந்தப் புத்த துறவி ஆதரவற்ற பிராமணனுக்கும் மகளுக்கும் ஆவன செய்து காப்பாற்றி விட்டு புத்த நெறிகளைப் போதித்தான். எங்கள் இறைவன் இயல்பாகவே அமைந்த குணங்களை உடையவன். குற்றமற்ற குணங்களின் உட்பொருளாக விளங்குபவன். தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்தவன். பலபிறப்புகளை அனுபவித்து உணர்ந்தவன் மக்கள் குலம் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பமாக வாழ வேண்டும் என்பற்காகவே தருமசக்கரத்தைச் உருளச் செய்தவன் அவனைப் போற்றுங்கள் என்று உபதேசித்தான். அன்றிலிருந்து அவர்களும் புத்த தேவனை வணங்கி ஏத்தும் நாவுடையவர்கள் ஆனார்கள்.
சங்கதருமன் தான் எமக்கு அருளிய
எம் கோன் இயல் குணன்
ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன்
(மணிமேகலை – மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை)
மாடு முட்டிய பிராமணனை சங்கத்தருமன் புத்த சமயத்துக்கு மாற்றினான் என்ற செய்தியை விட மணிமேகலை எத்தனை பிராமணர்களைப் புத்த மதத்தைப் பின்பற்ற வைத்திருக்கும் என்று தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் விபரீதம் தெரியாமல் மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களிலே ஒன்று என்று பெருமை பேசுவதோடு எங்கள் மனங்கள் அமைதியாகி விடுகின்றன. அதுவும் நல்லது தான்!
இரா.சம்பந்தன்
(தமிழர் தகவல் நவம்பர் 5 2017)